2“மானிடா! எகிப்தின் மன்னன்
பார்வோனைக் குறித்து
இரங்கற்பா ஒன்று பாடி,
அவனிடம் சொல்;
நாடுகளிடையே உன்னை
ஒரு சிங்கம் என எண்ணுகின்றாய்!
ஆனால், நீ நீர்வாழ்
பெருவிலங்குபோல் இருக்கின்றாய்!
ஆற்றினைச் சேறாக்குகின்றாய்!
கால்களினால் நீரினைக்
கலக்குகின்றாய்!
ஆறுகளைக் குழப்புகின்றாய்.
3எனவே, தலைவராகிய ஆண்டவர்
இவ்வாறு கூறுகின்றார்;
மாபெரும் மக்கள் கூட்டத்தைக் கொண்டு
நான் என் வலையை
உன்மீது வீசுவேன்;
அவர்கள் என் வலையில்
உன்னை இழுத்துவருவர்.
4உன்னைத் தரையில்,
வெட்ட வெளியில், எறிந்து விடுவேன்;
வானத்துப் பறவைகள் அனைத்தும்
உன்மேல் வந்து அடையும்;
மண்ணுலகின் விலங்குகள் அனைத்தும்
உன்னை அடித்து விழுங்கும்.
5உன் சதையை
மலைகளின்மேல் வீசியெறிந்து,
பள்ளத்தாக்குகளை
உன் அழுகிய பிணத்தால் நிரப்புவேன்.
6வழிந்தோடும் உன் இரத்தத்தால்
மலைகள்வரை நிலத்தை நனைப்பேன்;
நீரோடைகள்
உன்னால் நிரம்பியிருக்கும்.
7நான் உன்னை
இல்லாமல் ஆக்கும்போது,
வானங்களை நான் மூடுவேன்;
அவற்றின் விண்மீன்களை
இருளச் செய்வேன்;
கதிரவனை மேகத்தால்
மறைத்திடுவேன்;
நிலாவும் அதன் ஒளியைக் கொடாது.
8வானத்தின் ஒளி விளக்குகள் எல்லாம்
உனக்கு இருண்டு போகச் செய்து,
உன் நாட்டின்மீது
இருள் கவியச் செய்வேன்,
என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
18மானிடா! எகிப்தின்
மக்கள் திரளைக் குறித்து நீ ஓலமிடு;
அதனையும் பெருமைமிகு
நாடுகளின் புதல்வியரையும்
படுகுழிக்குள் செல்கிறவர்களோடு
கீழுலகுக்கு அனுப்பிவை.
19“அழகில் நீ யாரைவிட மிகுந்தவள்?
நீ கீழிறங்கி,
விருத்தசேதனம் இல்லாரோடு கிட.”
20வாளால் கொல்லப்படுவோரோடு
எகிப்தின் மக்கள் வீழ்வர்.
இதோ! ஒரு வாள் அவர்களைக்
கொல்ல உருவப்பட்டுள்ளது.
21போரில் வலிமைமிக்கோர்
பாதாளத்தின் நடுவினின்று
எகிப்தியரையும்
துணையாளரையும் குறித்து
“விருத்தசேதனமில்லார்
வாளால் வெட்டுண்டுவர்களுடன்
கிடக்கின்றனரே” என்பர்.
22அதோ அசீரியா கிடக்கின்றாள்!
அவளுடன் அவளுடைய
மக்கள் கூட்டமைப்பினர்
அனைவரும் கிடக்கின்றனர்.
அவர்கள் அனைவரும்
வாளால் வெட்டுண்டு வீழ்ந்தவர்களே.
அவளைச் சுற்றி
கல்லறைகள் கிடக்கின்றன.
23அவர்களின் கல்லறைகள்
படுகுழியின் ஆழத்தில் அமைந்துள்ளன;
அவளுடைய மக்கள்
அவளின் கல்லறையைச்
சுற்றிக் கிடக்கின்றனர்.
அவர்கள் அனைவருமே
வாளால் வெட்டுண்டு வீழ்ந்தவர்களே;
வாழ்வோரின் நாட்டில்
அச்சத்தை உண்டாக்கியவர்கள்.
24அதோ, ஏலாம் கிடக்கின்றாள்!
அவளுடைய கல்லறையைச் சுற்றிலும்
அவளுடைய மக்கள் கூட்டத்தார்
கிடக்கின்றனர்.
அவர்கள் அனைவரும்
வாளால் வெட்டுண்டு வீழ்ந்தவர்கள்;
விருத்தசேதனமில்லாமல்
கீழுலகுக்குள் சென்றவர்கள்;
வாழ்வோரின் நாட்டில்
அச்சத்தை உண்டாக்கியவர்கள்.
படுகுழிக்குள் செல்வோருடன் சேர்ந்து
அவர்களும் தங்கள் மானக்கேட்டைச்
சுமக்கின்றார்கள்.
25வெட்டுண்டோர் நடுவே
அவளுடைய படுக்கை அமைந்துள்ளது.
அவளுடைய மக்கள் திரள்
அவளின் கல்லறையைச்
சுற்றிக் கிடக்கின்றன;
அவர்கள் அனைவரும்
விருத்தசேதனமில்லார்;
வாளால் வெட்டுண்டவர்கள்;
வாழ்வோரின் நாட்டில்
அச்சத்தை உண்டாக்கியவர்கள்.
அவர்கள் படுகுழிக்குச்
செல்வோருடன் சேர்ந்து
தங்கள் மானக்கேட்டைச் சுமந்து
வெட்டுண்டவர்களின் நடுவிலே
கிடக்கின்றார்கள்.
26அதோ! மெசேக்கும் தூபாலும்
கிடக்கின்றனர்!
அவர்களின் மக்கள் கூட்டத்தார்
அவர்களின் கல்லறைகளைச் சுற்றிக்
கிடக்கின்றனர்.
அவர்கள் அனைவரும்
விருத்தசேதனமில்லாதவர்கள்;
வாளால் வெட்டுண்டவர்கள்;
வாழ்வோரின் நாட்டில்
அச்சத்தை உண்டாக்கியவர்கள்.
27தங்கள் போர்க் கருவிகளுடன்
பாதாளத்தில் இறங்கித்
தங்கள் வாள்களைத்
தங்கள் தலைகளுக்கு அடியிலும்,
தங்கள் கேடயங்களைத்
தங்கள் எலும்புகள் மேலும்
வைத்துக்கொண்டு
இறந்துபோன பழங்கால வீரருடன்
அவர்கள் கிடக்கவில்லை;
ஏனெனில் அந்த வீரரைக் குறித்த அச்சம்
வாழ்வோரின் நாட்டில் பரவி இருந்தது.