கொடிய வறட்சி

1வறட்சி பற்றி எரேமியாவுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு:

2யூதா துயருற்றுள்ளது;

அதன் வாயில்கள் சோர்வுற்றுள்ளன;

அதன் மக்கள் தரையில் விழுந்து

புலம்புகின்றார்கள்;

எருசலேமின் அழுகைக் குரல்

எழும்பியுள்ளது.

3உயர்குடி மக்கள் தம் ஊழியரைத்

தண்ணீர் எடுக்க அனுப்புகின்றார்கள்;

அவர்கள் நீர்த்தேக்கங்களுக்குச்

செல்கின்றார்கள்;

அங்குத் தண்ணீர் இல்லை;

அவர்கள் வெறுங்குடங்களோடு

திரும்பி வருகின்றார்கள்;

வெட்கி நாணித் தங்கள் தலைகளை

மூடிக்கொள்கின்றார்கள்.

4நாட்டில் மழை இல்லாததால்

தரை வெடிப்புற்றுள்ளது.

உழவர்கள் வெட்கித் தங்கள்

தலைகளை மூடிக் கொள்கின்றார்கள்;

5கன்று ஈன்ற வயல்வெளிப் பெண்மான்

புல் இல்லாமையால்

தன் கன்றை விட்டுவிட்டு ஓடிப்போகும்.

6காட்டுக் கழுதைகள்

மொட்டை மேடுகள்மேல் நிற்கின்றன;

காற்று இல்லாமையால்,

குள்ள நரிகளைப் போல்

மூச்சுத் திணறுகின்றன;

பசுமையே காணாததால்

அவற்றின் பார்வை மங்கிப் போயிற்று.

7ஆண்டவரே! நாங்கள் பலமுறை

உம்மை விட்டகன்றோம்.

உமக்கு எதிராகப் பாவம் செய்தோம்.

எங்கள் குற்றங்களே எங்களுக்கு

எதிராய்ச் சான்றுபகர்கின்றன.

எனினும், உமது பெயருக்கேற்பச்

செயலாற்றும்.

8இஸ்ரயேலின் நம்பிக்கையே!

துன்ப வேளையில் அதனை மீட்பவரே!

நாட்டில் நீர் ஏன் அன்னியரைப் போல்

இருக்கவேண்டும்?

இரவு மட்டும் தங்க வரும்

வழிப்போக்கரைப்போல் நீர் ஏன் இருக்க வேண்டும்?

9நீர் ஏன் திகைப்புற்ற மனிதர்போல்

தோன்ற வேண்டும்?

ஏன் காக்கும் திறனற்ற வீரர் போல்

காணப்படவேண்டும்?

ஆயினும், ஆண்டவரே! நீர் எங்கள் நடுவில் உள்ளீர்; உமது பெயராலேயே நாங்கள் அழைக்கப்படுகிறோம்; எங்களைக் கைவிட்டு விடாதேயும்.

10இம்மக்களைக் குறித்து

ஆண்டவர் கூறுவது இதுவே;

அவர்கள் அலைந்து திரிய விரும்பினர்;

தங்கள் கால்களை அவர்கள்

கட்டுப்படுத்தவில்லை;

எனவே, ஆண்டவர் அவர்களை

ஏற்கவில்லை;

இப்போது அவர்களின் தீமையை

நினைவில் கொண்டு,

அவர்களின் பாவங்களுக்காக

அவர்களைத் தண்டிப்பார்.

11ஆண்டவர் எனக்குக் கூறியது: இந்த மக்களின் நலனுக்காக நீ என்னிடம் மன்றாட வேண்டாம்.
12அவர்கள் நோன்பு இருப்பினும் நான் அவர்களின் குரலைக் கேட்கமாட்டேன். அவர்கள் எரிபலிகளையும் தானியப் படையல்களையும் அளிப்பினும் அவற்றை நான் ஏற்கமாட்டேன். மாறாக, வாளாலும் பஞ்சத்தாலும் கொள்ளை நோயாலும் அவர்களை ஒழித்து விடுவேன்.
13“ஓ! எம் தலைவராகிய ஆண்டவரே! ‘நீங்கள் வாளைச் சந்திக்க மாட்டீர்கள். உங்களிடையே பஞ்சம் வராது. மாறாக, இந்த இடத்தில் நிலையான அமைதியை உங்களுக்குத் தருவேன்’ என இறைவாக்கினர் அவர்களுக்குக் கூறுகின்றனரே!” என்றேன் நான்.
14ஆண்டவர் என்னிடம் கூறியது: “என் பெயரால் இறைவாக்கினர் பொய்யை உரைக்கின்றார்கள். நான் அவர்களை அனுப்பவில்லை; அவர்களுக்குக் கட்டளையிடவில்லை; அவர்களோடு பேசவுமில்லை.” அவர்கள் உங்களுக்கு இறைவாக்காக உரைப்பவை; பொய்யான காட்சிகள், பயனற்ற குறிகூறல், வஞ்சக எண்ணங்கள், சொந்தக் கற்பனைகள்.
15ஆகவே தம் பெயரால் இறைவாக்கு உரைப்போரைக் குறித்து ஆண்டவர் கூறுவது இதுவே; நான் அவர்களை அனுப்பவில்லை; எனினும், அவர்கள் “இந்த நாட்டின்மேல் வாளும் பஞ்சமும் வாரா” என்று கூறுகிறார்கள். வாளாலும் பஞ்சத்தாலும் அந்த இறைவாக்கினரே அழிவுறுவர்.
16அவர்களின் இறைவாக்கைக் கேட்கும் மக்களும் வாள், பஞ்சம் ஆகியவற்றின் காரணமாக எருசலேமின் தெருக்களில் தூக்கி வீசப்படுவார்கள். அவர்களையும் அவர்கள் மனைவியர், புதல்வர், புதவியரையும் புதைக்க யாரும் இரார். அவர்களது தீமையை அவர்கள் மீதே கொட்டுவேன்.

17நீ அவர்களுக்கு இந்த வாக்கைக் கூறு;

“என் கண்கள் இரவு பகலாகக்

கண்ணீர் சொரியட்டும்;

இடைவிடாது சொரியட்டும்;

ஏனெனில், என் மக்களாம் கன்னிமகள்

நொறுங்குண்டாள்;

அவளது காயம் மிகப் பெரிது.

18வயல்வெளிகளுக்குச் சென்றால்,

இதோ! வாளால் மடிந்தவர்கள்!

நகரில் நுழைந்தால்,

இதோ! பசியால் நலிந்தவர்கள்!

இறைவாக்கினரும் குருக்களும்

தங்களுக்கு முன்பின் தெரியாத

நாட்டில் அலைகின்றனர்.

19நீர் யூதாவை முற்றிலும்

புறக்கணித்துவிட்டீரா?

சீயோனை உம் உள்ளம் வெறுத்து விட்டதா?

நாங்கள் குணமாக முடியாதபடி

ஏன் எங்களை நொறுக்கினீர்?

நாங்கள் அமைதிக்காகக் காத்திருந்தோம்;

பயனேதும் இல்லை!

நலம்பெறும் காலத்தை

எதிர்பார்த்திருந்தோம்;

பேரச்சமே மிஞ்சியது!

20ஆண்டவரே! எங்கள் குற்றத்தையும்

எங்கள் மூதாதையரின் தீமையையும்

நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்;

நாங்கள் உமக்கு எதிராய்ப்

பாவம் செய்தோம்.

21உம் பெயரை முன்னிட்டு

எங்களை உதறித் தள்ளாதீர்;

உம் மாட்சிமிகு அரியணையை

அவமதிக்காதீர்;

நீ எங்களோடு செய்த

உடன்படிக்கையை நினைவுகூரும்;

அதனை முறித்து விடாதீர்.

22வேற்றினத்தாரின் தெய்வச் சிலைகளுள்

மழை தரவல்லது எதுவும் உண்டா?

வானங்கள் தாமாக

மழை பொழிய முடியுமா?

எங்கள் இறைவனாகிய ஆண்டவரே,

நீர் அல்லவா அதைச் செய்யக் கூடியவர்;

நாங்கள் உம்மையே

எதிர்நோக்கியுள்ளோம்;

எனெனில், இவற்றை எல்லாம்

செய்பவர் நீரே.