விடுதலை பற்றிய நற்செய்தி

1ஆண்டவராகிய என் தலைவரின்

ஆவி என்மேல் உளது;

ஏனெனில், அவர் எனக்கு

அருள் பொழிவு செய்துள்ளார்;

ஒடுக்கப்பட்டோருக்கு

நற்செய்தியை அறிவிக்கவும்,

உள்ளம் உடைந்தோரைக்

குணப்படுத்தவும்,

சிறைப்பட்டோருக்கு

விடுதலையைப் பறைசாற்றவும்,

கட்டுண்டோருக்கு

விடிவைத் தெரிவிக்கவும்

என்னை அனுப்பியுள்ளார்.

2ஆண்டவர் அருள்தரும்

ஆண்டினை முழங்கவும்,

நம் கடவுள் அநீதிக்குப்

பழிவாங்கும் நாளை அறிவிக்கவும்,

துயருற்று அழுவோர்க்கு

ஆறுதல் அளிக்கவும்,

3சீயோனில் அழுவோர்க்கு

ஆவன செய்யவும்,

சாம்பலுக்குப் பதிலாக

அழகுமாலை அணிவிக்கவும்,

புலம்பலுக்குப் பதிலாக

மகிழ்ச்சித் தைலத்தை வழங்கவும்,

நலிவுற்ற நெஞ்சத்திற்குப் பதிலாகப்

‘புகழ்’ என்னும் ஆடையைக் கொடுக்கவும்

என்னை அனுப்பியுள்ளார்.

‘நேர்மையின் தேவதாருகள்’ என்றும்

‘தாம் மாட்சியுறுமாறு

ஆண்டவர் நட்டவை’ என்றும்

அவர்கள் பெயர் பெறுவர்.

4நெடுங்காலமாய் இடிந்து கிடந்தவற்றை

அவர்கள் கட்டியெழுப்புவார்கள்;

முற்காலமுதல் பாழாய்க் கிடந்தவற்றை

நிலைநிறுத்துவார்கள்;

தலைமுறை தலைமுறையாக

இடிந்து அழிந்துகிடந்த நகர்களைச்

சீராக்குவார்கள்.

5அன்னியர் உங்கள் மந்தையை

மேய்த்து நிற்பர்;

வேற்று நாட்டு மக்கள்

உங்கள் உழவராயும்

திராட்சைத் தோட்டப்

பணியாளராயும் இருப்பர்.

6நீங்களோ, ஆண்டவரின் குருக்கள் என்று

அழைக்கப்படுவீர்கள்;

நம் கடவுளின் திருப்பணியாளர் என்று

பெயர் பெறுவீர்கள்;

பிறஇனத்தாரின் செல்வத்தைக் கொண்டு

நீங்கள் உண்பீர்கள்;

அவர்களின் சொத்தில்

நீங்கள் பெருமை பாராட்டுவீர்கள்.

7அவமானத்திற்குப் பதிலாக நீங்கள்

இருபங்கு நன்மை அடைவீர்கள்;

அவமதிப்புக்குப் பதிலாக

உங்கள் உடைமையில் மகிழ்வீர்கள்;

ஆதலால், நாட்டில் உங்கள் செல்வம்

இருமடங்காகும்;

முடிவில்லா மகிழ்ச்சியும்

உங்களுக்கு உரியதாகும்.

8ஆண்டவராகிய நான்

நீதியை விரும்புகின்றேன்;

கொள்ளையையும் குற்றத்தையும்

வெறுக்கின்றேன்;

அவர்கள் செயலுக்கு ஏற்ற கைம்மாற்றை

உண்மையாகவே வழங்குவேன்;

அவர்களுடன் முடிவில்லா

உடன்படிக்கை செய்து கொள்வேன்;

9அவர்கள் வழிமரபினர்

பிறஇனத்தாரிடையேயும்,

அவர்கள் வழித்தோன்றல்கள்

மக்களினங்கள் நடுவிலும்

புகழ் அடைவார்கள்;

அவர்களைக் காண்பவர் யாவரும்

அவர்களை ஆண்டவரின்

ஆசிபெற்ற வழிமரபினர் என

ஏற்றுக்கொள்வார்கள்.

10ஆண்டவரில் நான்

பெருமகிழ்ச்சி அடைவேன்;

என் கடவுளில்

என் உள்ளம் பூரிப்படையும்;

மலர்மாலை அணிந்த மணமகன் போலும்,

நகைகளால் அழகுபடுத்தப்பட்ட

மணமகள் போலும்,

விடுதலை என்னும் உடைகளை

அவர் எனக்கு உடுத்தினார்;

நேர்மை என்னும் ஆடையை

எனக்கு அணிவித்தார்.

11நிலம் முளைகளைத்

துளிர்க்கச் செய்வது போன்றும்,

தோட்டம் விதைகளை

முளைக்கச் செய்வது போன்றும்,

ஆண்டவராகிய என் தலைவர்

பிற இனத்தார் பார்வையில்

நேர்மையும் புகழ்ச்சியும்

துளிர்த்தெழச் செய்வார்.


61:1 மத் 11:5; லூக் 7:22. 61:1-2 லூக் 4:18-19. 61:10 திவெ 21:2.