பாபிலோனுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு

1மகள் பாபிலோனே, கன்னிப்

பெண்ணே!

நீ இறங்கி வந்து புழுதியில் உட்கார்;

மகள் கல்தேயா! அரியணையில் அன்று,

தரையினில் அமர்ந்திடு;

‘மெல்லியலாள்’, ‘இனியவள்’ என்று

இனி நீ அழைக்கப்படாய்.

2எந்திரக் கற்களைப் பிடித்து மாவரை;

உன் முக்காடுதனை அகற்றிவிடு;

உன் மேலாடையைக் களைந்துவிட்டு,

உன் கால்தெரிய ஆறுகளைக் கடப்பாய்.

3உன் பிறந்தமேனி திறக்கப்படும்;

உன் மானக்கேடு வெளிப்படும்;

நான் பழி வாங்குவேன்;

எந்த ஆளையும் விட்டுவையேன்.

4எங்கள் மீட்பரின் பெயர்

‘படைகளின் ஆண்டவர்’;

அவரே ‘இஸ்ரயேலின் தூயவர்’.

5மகள் கல்தேயா!

இருளுக்குள் புகுந்து

மௌனமாய் உட்கார்;

இனி நீ ‘அரசுகளின் தலைவி’ என

அழைக்கப்படமாட்டாய்.

6நான் என் மக்கள் மீது

சினமுற்றிருந்தேன்;

என் உரிமைச் சொத்தைக்

களங்கப்படுத்தினேன்;

அவர்களை உன் கையில் ஒப்படைத்தேன்;

நீயோ அவர்களுக்குக்

கருணை காட்டவில்லை;

முதியோராய் இருந்தோர் மீதும்

மிகப் பளுவான நுகத்தைப் பூட்டினாய்.

7‘என்றும் தலைவி நானே, என்றாய் நீ;

இவற்றை நீ உன் சிந்தையில்

கொள்ளவில்லை;

பின் விளைவுபற்றி

எண்ணிப் பார்க்கவுமில்லை.

8இன்ப நாட்டம் கொண்டவளே,

போலிப் பாதுகாப்புடன் வாழ்பவளே,

‘எனக்கு நிகர் நானே,

வேறு எவருமில்லை;

நான் கைம்பெண் ஆகமாட்டேன்;

பிள்ளை இழந்து தவிக்கமாட்டேன்’ என்று

தனக்குள் சொல்லிக் கொள்பவளே,

இப்பொழுது இதைக் கேள்:

9இவை இரண்டும் திடீரென

ஒரே நாளில் உனக்கு நேரிடும்;

பில்லி சூனியங்கள் பலவற்றை

நீ கையாண்டாலும்,

ஆற்றல்மிகு மந்திரங்களை உச்சரித்தாலும்,

பிள்ளை இழப்பும் கைம்மையும்

முழுவடிவில் உன் மேல் வந்தே தீரும்.

10உன் தீச்செயலில்

நீ நம்பிக்கை வைத்தாய்;

‘என்னைக் காண்பார்

யாருமில்லை’ என்றாய்.

உன் ஞானமும் உன் அறிவுத்திறனும்

உன்னை நெறிபிறழச் செய்தன;

‘எனக்கு நிகர் நானே,

வேறு எவருமில்லை’ என்று

உன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டாய்.

11தீமை உன்மேல் திண்ணமாய் வரும்;

அது தோன்றும் திக்கை நீ அறியாய்;

அழிவு உன்மேல் விழும்;

அதற்கு கழுவாய் தேட

உன்னால் இயலாது;

நீ அறியாத பேரழிவு

திடீரென உன்மேல் வரும்.

12இளமை முதல் நீ முயன்று பயின்ற

உன் மந்திரங்களோடும்

பில்லி சூனியங்களோடும் வந்து நில்;

ஒருவேளை உன்னால்

சிறிது வெற்றி பெற முடியும்;

ஒருவேளை உன் எதிரியை

அச்சுறுத்த முடியும்.

13திட்டங்கள் தீட்டியே நீ சோர்வுற்றாய்;

வான்வெளியைக் கணிப்போரும்,

விண்மீன்களை ஆய்வோரும்

நிகழவிருப்பதை அமாவாசைகளில்

உனக்கு முன்னுரைப்போரும்,

வந்துநின்று உன்னை விடுவிக்கட்டும்.

14இதோ, அவர்கள் பதர் போன்றவர்கள்,

நெருப்பு அவர்களைப் பொசுக்கி விடும்;

தீப்பிழம்பினின்று தம் உயிரைக்

காத்துக்கொள்ள மாட்டார்கள்;

அது குளிர்காயப் பயன்படும்

தணல் அன்று;

எதிரே உட்காரத் தக்க கனலும் அன்று.

15நீ முயன்று பயின்றவையும்

இவ்வாறே அழிவுறும்;

உன் இளமை முதல்

நீ தொடர்பு கொண்ட வணிகருக்கும்
இதுவே நேரும்;

ஒவ்வொருவரும் தம் போக்கிலே

அலைந்து திரிவார்;

உன்னை விடுவிக்க எவரும் இரார்.


47:1-15 எசா 13:1-14:23; எரே 50:1; 51:64. 47:8-9 திவெ 18:7-8.