1அரசிள மகளே!

காலணி அணிந்த உன் மெல்லடிகள்

எத்துணை அழகு!

உன் தொடைகளின் வளைவுகள்

அணிகலனுக்கு இணை!

கைதேர்ந்த கலைஞனின் வேலைப்பாடு!

2உன் கொப்பூழ்

வட்டவடிவக் கலம்;

அதில் மதுக் கலவைக்குக்

குறைவே இல்லை;

உன் வயிறு

கோதுமை மணியின் குவியல்;

லீலிகள் அதை வேலியிட்டுள்ளன.

3உன் முலைகள் இரண்டும்

இரு மான் குட்டிகள் போன்றவை;

கலைமானின்

இரட்டைக் குட்டிகள் போன்றவை.

4உன் கழுத்து தந்தத்தாலான

கொத்தளம் போன்றது;

உன் கண்கள்

எஸ்போனின் குளங்கள் போன்றவை;

பத்ரபீம் வாயிலருகே உள்ள

குளங்கள் போன்றவை;

உம் மூக்கு

லெபனோனின் கோபுரத்திற்கு இணை;

தமஸ்கு நகர் நோக்கியுள்ள

கோபுரத்திற்கு இணை.

5உன் தலை கர்மேல் மலைபோல்

நிமிர்ந்துள்ளது;

உன் கூந்தல் செம்பட்டுப் போன்றது;

அதன் சுருள்களுள்

அரசனும் சிறைப்படுவான்.

பாடல் 22: தலைவன் கூற்று

6அன்பே! இன்பத்தின் மகளே!

நீ எத்துணை அழகு!

எத்துணைக் கவர்ச்சி!

7இந்த உன் வளர்த்தி

பேரீச்சைக்கு நிகராகும்;

உன் முலைகள் இரண்டும்

அதன் குலைகளாகும்.

8ஆம், பேரீச்சையின்மேல்

நான் ஏறுவேன்;

அதன் பழக்குலைகளைப்

பற்றிடுவேன்” என்றேன்;

உன் முலைகள்

திராட்சைக் குலைகள்போல் ஆகுக!

உன் மூச்சு

கிச்சிலிபோல் மணம் கமழ்க!

9இதழ்களுக்கும் பற்களுக்கும் மேலே

மென்மையுடன் இறங்கும்

இனிமைமிகு

திராட்சை இரசம் போன்றவை

உன் முத்தங்கள்!

பாடல் 23: தலைவி கூற்று

10நான் என் காதலர்க்குரியள்;

அவர் நாட்டம் என்மேலே!

11என் காதலரே, வாரும்;

வயல்வெளிக்குப் போவோம்;

மருதோன்றிகள் நடுவில்

இரவைக் கழிப்போம்.

12வைகறையில் திராட்சைத்

தோட்டத்திற்குப் போவோம்;

திராட்சைக் கொடிகள் துளிர்த்தனவா,

அதிலிருக்கும் மொட்டுகள் விரிந்தனவா,

மாதுளை மரங்கள் மலர்ந்தனவா

என்று பார்ப்போம்.

அங்கே உம்மேல்

என் காதலைப் பொழிவேன்.

13காதற்கனிகளின் மணம் கமழுகின்றது;

இனியது அனைத்தும்

நம் கதவருகில் உளது;

புதிதாய்ப் பறித்தனவும்

பலநாள் காத்தனவுமான பழங்களை

என் காதலரே,

உமக்கென்றே நான் சேர்த்து வைத்தேன்.