1“பெண்களுக்குள் பேரழகியே,

உன் காதலர் எங்கே போனார்?

உன் காதலர் எப்பக்கம் திரும்பினார்?

உன்னோடு நாங்களும்

அவரைத் தேடுவோம்.”

2“என் காதலர் தம் தோட்டத்திற்கும்

நறுமண நாற்றங்கால்களுக்கும்

போனார்;

தோட்டங்களில் மேய்க்கவும்

லீலி மலர்களைக் கொய்யவும்

சென்றுள்ளார்”.

3நான் என் காதலர்க்குரியள்;

என் காதலர் எனக்குரியர்;

லீலிகள் நடுவில் அவர் மேய்க்கின்றார்.

பாடல் 18: தலைவன் கூற்று

4என் அன்பே.நீ திரட்சாவைப்போல்

அழகுள்ளவள்;

எருசலேமைப்போல் எழில் நிறைந்தவள்;

போரணிபோல் வியப்பார்வம்

ஊட்டுகின்றாய்!

5என்னிடமிருந்து உன் கண்களைத்

திருப்பிக்கொள்;

அவை என்னை மயக்குகின்றன;

கிலயாதிலிருந்து இறங்கிவரும்

வெள்ளாட்டு மந்தை போன்றது

உன் கூந்தல்.

6உன் பற்களோ, குளித்துக்கரையேறும்

பெண் ஆடுகளின் மந்தைபோல்வன;

அவையாவும் இரட்டைக்குட்டி போட்டவை;

அவற்றுள் ஒன்றேனும் மலடு இல்லை.

7முகத்திரையின் பின்னிருக்கும்

உன் கன்னங்கள்

பிளந்த மாதுளம் பழத்திற்கு நிகரானவை.

பாடல் 19: தலைவன் கூற்று

8அரசியர் அறுபது பேர்;

வைப்பாட்டியர் எண்பது பேர்;

இளம்பெண்கள் எண்ணிறந்தவர்.

9என் வெண்புறா,

அழகின் வடிவம் அவள் ஒருத்தியே!

அவள் தாய்க்கும் அவள் ஒருத்தியே;

அவளைப் பெற்றவளுக்கு

அவள் அருமையானவள்;

மங்கையர் அவளைக் கண்டனர்;

வாழ்த்தினர்;

அரசியரும் வைப்பாட்டியரும்

அவளைப் புகழ்ந்தனர்;

10“யாரிவள்!

வைகறைபோல் தோற்றம்;

திங்களைப் போல் அழகு;

ஞாயிறுபோல் ஒளி;

போரணிபோல் வியப்பார்வம்;

யாரிவள்!”

பாடல் 20: தலைவன் கூற்று

11வாதுமைச் சோலைக்குள் சென்றேன்;

பள்ளத்தாக்கில் துளிர்த்தவற்றைப்

பார்க்கப் போனேன்;

திராட்சை பூத்துவிட்டதா என்றும்

மாதுளைகள் மலர்ந்தனவா என்றும்

காணச் சென்றேன்.

12என்னவென்றே

எனக்குத் தெரியவில்லை!

மகிழ்ச்சியில் மயங்கினேன்;

இளவரசனுடன் தேரில் செல்வது போல்

நான் உணர்ந்தேன்.

பாடல் 21: கண்டோர் கூற்று: உரையாடல்

13திரும்பி வா! திரும்பி வா!

சூலாமியளே!

திரும்பி வா! திரும்பி வா!

நாங்கள் உன்னைப் பார்க்க வேண்டும்!

இரண்டு பாசறைகள் நடுவில்

ஆடுபவளைப்போல் சூலாமியளை

நீங்கள் ஏன் நோக்க வேண்டும்?