விடுதலைப் பயணம் முன்னுரை


ஒடுக்கப்பட்ட இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டினின்று விடுதலை பெற்றது மீட்பு வரலாற்றில் ஒரு முக்கியக் கட்டமாகும். கடவுளே முன்வந்து தம் மக்களின் அடிமைத்தளையை அறுத்து, விடுதலை நோக்கி அவர்களை அழைத்துச் சென்ற மாபெரும் பாஸ்கா நிகழ்ச்சியை ‘விடுதலைப் பயணம்’ என்னும் இந்நூல் விரித்துரைக்கின்றது.

ஆண்டவராகிய கடவுள் தாம் நல்கவிருக்கும் வளநாட்டை நோக்கி இஸ்ரயேல் மக்களைப் பேராற்றலோடு மோசேயின் மூலம் அழைத்துச் செல்கின்றார். வழியில், சீனாய் மலையடியில் அவர்களோடு உடன்படிக்கை செய்து, பத்துக் கட்டளைகளை வழங்கி, தமது உரிமைச் சொத்தாகிய அவர்களைத் தமக்கே உரிய அரச குருத்துவ இனமாகப் புனிதப்படுத்துகின்றார். ஆயினும், அம்மக்கள் இவ்வுடன்படிக்கையை மீறும்பொழுது, அவர்களைத் தண்டித்துத் தூய்மையாக்கி மீண்டும் ஏற்றுக் கொள்கின்றார். இந்நிகழ்ச்சிகள் இந்நூலின் முற்பகுதியில் இடம்பெற்றுள்ளன.

இஸ்ரயேல் மக்களின் சமய அமைப்புகளை நெறிப்படுத்துமாறு கடவுள் தரும் பல்வேறு ஒழுங்குமுறைகள் இந்நூலின் பிற்பகுதியில் காணப்படுகின்றன.

நூலின் பிரிவுகள்

  1. இஸ்ரயேலர் எகிப்தினின்று விடுதலை பெறல் 1:1 - 15:21
      அ) எகிப்தில் அடிமைத்தனம் 1:1 - 22
      ஆ) மோசேயின் பிறப்பும் இளமைப் பருவமும் 2:1 - 25
      இ) மோசேயின் அழைப்பு 3:1 - 4:31
      ஈ) மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் விடுதலை கேட்டல் 5:1 - 11:10
      உ) பாஸ்கா - எகிப்தினின்று வெளியேறல் 12:1 - 15:21
  2. செங்கடல் முதல் சீனாய் மலை வரை 15:22 - 18:27
  3. பத்துக் கட்டளைகள் - உடன்படிக்கை நூல் 19:1 - 24:18
  4. உடன்படிக்கைக் கூடாரம் - வழிபாட்டு ஒழுங்குமுறைகள் 25:1 - 40:38