திருச்சட்டக் கற்பலகைகள்-இரண்டாம் பிரதி
(இச 10:1-5)

1ஆண்டவர் மோசேயை நோக்கி, “முன்னவை போன்ற இரு கற்பலகைகளை வெட்டி எடுத்துக்கொள். நீ உடைத்துப்போட்ட முன்னைய பலகைகளின்மேல் இருந்த வார்த்தைகளையே நான் இப்பலகைகளின் மேல் எழுதுவேன்.
2முன்னேற்பாடு செய்து கொண்டு, காலையிலேயே சீனாய் மலைமேல் ஏறிச்செல். அங்கே மலையுச்சியில் என்முன் வந்து நில்.
3உன்னோடு வேறெவனுமே ஏறிவர வேண்டாம். மலையெங்கிலும் எவனுமே காணப்படலாகாது. அந்த மலைக்கு எதிரே ஆடு மாடுகள் மேயவும் கூடாது” என்றார்.
4அவ்வாறே, மோசே முன்னவை போன்ற இரண்டு கற்பலகைகளை வெட்டிஎடுத்துக்கொண்டார். ஆண்டவர் தமக்கு கட்டளையிட்டபடி, அதிகாலையில் எழுந்து சீனாய் மலைமேல் ஏறிச்சென்றார். தம் கையில் இரு கற்பலகைகளையும் கொண்டு போனார்.
5ஆண்டவர் மேகத்தில் இறங்கி வந்து, அங்கே அவர் பக்கமாய் நின்றுகொண்டு, ‘ஆண்டவர்’ என்ற பெயரை அறிவித்தார்.
6அப்போது ஆண்டவர் அவர் முன்னிலையில் கடந்து செல்கையில்,

“ஆண்டவர்! ஆண்டவர்!;

இரக்கமும் பரிவும் உள்ள இறைவன்;

சினம் கொள்ளத் தயங்குபவர்;

பேரன்புமிக்கவர்;

நம்பிக்கைக்குரியவர்.

7ஆயிரம் தலைமுறைக்கும்

பேரன்பு செய்பவர்;

கொடுமையையும் குற்றத்தையும்

பாவத்தையும் மன்னிப்பவர்;

ஆயினும், தண்டனைக்குத் தப்பவிடாமல்

தந்தையரின் கொடுமையைப்

பிள்ளைகள் மேலும்

பிள்ளைகளின் பிள்ளைகள் மேலும்,

மூன்றாம் நான்காம் தலைமுறைவரை

தண்டித்துத் தீர்ப்பவர்” என அறிவித்தார்.

8உடனே மோசே விரைந்து தரைமட்டும் தாழ்ந்து வணங்கி,
9“என் தலைவரே! நான் உண்மையிலேயே உம் பார்வையில் தயை பெற்றவன் என்றால், இவர்கள் வணங்காக் கழுத்துள்ள மக்கள் எனினும், என் தலைவரே! நீர் எங்களோடு வந்தருளும். எங்கள் கொடுமையையும் எங்கள் பாவத்தையும் மன்னித்து எங்களை உம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளும்” என்றார்.

உடன்படிக்கையைப் புதுப்பித்தல்
(விப 23:14-19; இச 7:1-5; 16:1-17)

10அப்பொழுது ஆண்டவர் கூறியது: “நான் ஓர் உடன்படிக்கை செய்கிறேன். எந்த நாட்டிலும் எந்த மக்களினத்திற்கும் செய்யாத அரும்பெரும் செயல்களை நான் உன் மக்கள் அனைவர் முன்னிலையிலும் செய்வேன். உன்னைச் சூழ்ந்துள்ள மக்களினத்தவர் அனைவரும் ஆண்டவரின் செயல்களைக் காண்பர். ஏனெனில், நான் உன்னோடிருந்து திகிலூட்டும் செயல்களைச் செய்வேன்.
11இன்று நான் உனக்குக் கட்டளையிடுவனவற்றைக் கடைப்பிடி. இதோ, நான் உன் முன்னிலையினின்று எமோரியரையும், கானானியரையும், இத்தியரையும் பெரிசியரையும், இவ்வியரையும், எபூசியரையும் துரத்திவிடுவேன்.
12நீ சென்று சேரப்போகிற நாட்டில் வாழ்வோருடன் உடன்படிக்கை செய்யாதவாறு எச்சரிக்கையாயிரு. ஏனெனில், அது சிக்கவைக்கும் கண்ணியாக உன்னிடையே இருக்கும்.
13அவர்களின் பலிபீடங்களை இடித்துத் தள்ளுங்கள். அவர்களின் சிலைத் தூண்களை உடைத்தெறியுங்கள். அசேராவின் கம்பங்களை வெட்டி வீழ்த்துங்கள்.
14நீ வேறொரு தெய்வத்தை வழிபடலாகாது, ஏனெனில், ‘வேற்றுத் தெய்வ வழிபாட்டை சகிக்காதவர்’ என்பதே ஆண்டவர் பெயர். ஆம், அவர் ‘வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத இறைவன்’.
15நீ அந்நாட்டில் வாழ்வாரோடு உடன்படிக்கை செய்யாதே. ஏனெனில், அவர்கள் தங்கள் தெய்வங்கள் பின்னே வேசித்தனமாய் நடந்து தங்கள் தெய்வங்களுக்குப் பலியிடுகையில் உன்னை அழைக்க அவர்கள் பலிப்பொருளை நீயும் உண்ண நேரிடலாம்.
16மேலும், உன் புதல்வருக்கு அவர்களிடமிருந்து பெண்கொள்ள நேரிடலாம். அவர்கள் புதல்வியர் தங்கள் தெய்வங்கள் பின்னே வேசித்தனமாய் நடப்பர். உன் புதல்வரையும் தங்கள் தெய்வங்கள் பின்னே வேசித்தனமாய் நடக்கச் செய்வர்.
17உனக்கெனத் தெய்வங்களை வார்த்துக் கொள்ள வேண்டாம்.
18புளிப்பற்ற அப்ப விழாவைக் கொண்டாட வேண்டும். ஆபிபு மாதத்தில் குறிப்பிட்ட காலத்தில், என் கட்டளைக்கிணங்க ஏழு நாள்கள் புளிப்பற்ற அப்பத்தையே உண்ண வேண்டும். ஏனெனில், ஆபிபு மாத்தில் நீ எகிப்திலிருந்து வெளியேறி வந்தாய்.
19கருப்பையைத் திறக்கும் தலைப்பேறு அனைத்தும் என்னுடையன. ஆடு, மாடு, கால்நடைகளின் ஆண் தலையீறு அனைத்தும் எனக்குரியனவே.
20கழுதையின் தலையீற்றுக்கு ஈடாக ஒரு செம்மறிக் குட்டியைக் கொடுத்து அதை மீட்க வேண்டும். அது மீட்கப்படவில்லையெனில் அதன் கழுத்தை முறித்துவிடு. உன் பிள்ளைகளில் ஒவ்வொரு தலைமகனையும் மீட்க வேண்டும். எவருமே என்முன் வெறுங்கையோடு காணப்படல் ஆகாது.
21ஆறு நாள்கள் நீ வேலை செய். ஏழாம் நாளில் ஓய்வு கொள். உழும் பருவத்திலும் அறுவடைப் பருவத்திலும் கூட ஓய்ந்திரு.
22கோதுமை அறுவடை முதற்பலன் போது வாரங்களின் விழாவையும், ஆண்டின் இறுதியில் சேகரிப்பு விழாவையும் கொண்டாட வேண்டும்.
23உங்களுள் ஒவ்வொரு ஆண்மகனும் ஆண்டில் மூன்று தடவை தலைவரும் இஸ்ரயேலின் கடவுளுமாகிய ஆண்டவர் திருமுன் வர வேண்டும்.
24ஏனெனில், நான் வேற்றினத்தாரை உன்முன்னிருந்து துரத்திவிட்டு உன் எல்லையை விரிவுபடுத்துவேன். நீ ஆண்டில் மும்முறை உன் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் நிற்க வரும்போது, உன் நாட்டை எவனுமே பிடித்துவிடப் போவதில்லை.
25எனக்குச் செலுத்தும் பலியின் இரத்தத்தைப் புளித்த மாவுடன் படைக்காதே. பாஸ்காவிழாப் பலியில் எதுவும் காலைவரை எஞ்சியிருக்கக் கூடாது.
26உன் நிலத்தின் முதற் பலன்களில் முதன்மையானவற்றை உன் கடவுளாகிய ஆண்டவரின் இல்லத்திற்கு கொண்டு செல்வாய், குட்டியை அதன் தாய்ப்பாலில் வேக வைக்காதே”.
27ஆண்டவர் மோசேயை நோக்கி, “நீ இவ்வார்த்தைகளை எழுதிக் கொள். இவ்வார்த்தைகளின்படி நான் உன்னோடும் இஸ்ரயேலோடும் ஓர் உடன்படிக்கை ஏற்படுத்தியுள்ளேன்” என்றார்.
28அவர் அங்கே நாற்பது பகலும் நாற்பது இரவும் ஆண்டவருடன் இருந்தார். அப்போது அவர் அப்பம் உண்ணவும் இல்லை; தண்ணீர் பருகவும் இல்லை. உடன்படிக்கையின் வார்த்தைகளான பத்துக் கட்டளைகளை அவர் பலகையின் மேல் எழுதினார்.

மோசே சீனாய் மலையிலிருந்து இறங்கிவரல்

29மோசே சீனாய் மலையிலிருந்து இறங்கிச் செல்கையில், உடன்படிக்கைப் பலகைகள் இரண்டையும் தம் கைகளில் தாங்கிக் கொண்டிருந்தார். மோசே கடவுளோடு பேசியதால் அவர் முகத்தோற்றம் ஒளிமயமாய் இருந்தது. ஆனால், மோசே அதை அறியவில்லை.
30ஆரோனும் இஸ்ரயேல் மக்கள் அனைவரும் மோசேயைப் பார்த்தபோது, அவர் முகத்தோற்றம் ஒளிமயமாய் இருந்ததைக் கண்டு அவரை அணுகிச் செல்ல அஞ்சினர்.
31ஆனால், மோசே அவர்களைக் கூப்பிட்டார். ஆரோனும் மக்கள்கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவரும் அவரை நோக்கி வந்தனர். மோசேயும் அவர்களிடம் பேசினார்.
32பின்னர், இஸ்ரயேல் மக்கள் அனைவரும் அவர் அருகில் வந்தனர். அப்போது, ஆண்டவர் சீனாய் மலையில் தமக்கு அறிவித்த அனைத்தையும் அவர் அவர்களுக்குக் கட்டளையாகக் கொடுத்தார்.
33மோசே அவர்களோடு பேசி முடித்தபின், தம் முகத்தின் மேல் ஒரு முக்காடு போட்டுக்கொண்டார்.
34மோசே ஆண்டவரோடு உரையாடும்படி அவர் திருமுன் செல்வதுமுதல் வெளியே வருவதுவரை முக்காட்டை எடுத்து விடுவார். அங்கிருந்து வெளியே வந்து, அவருக்குக் கட்டளையிடப்பட்டவற்றை அவர் இஸ்ரயேல் மக்களுக்கு எடுத்துக் கூறுவார்.
35இஸ்ரயேல் மக்கள் மோசேயின் முகத்தைப் பார்க்கும்போது, மோசேயின் முகத்தோற்றம் ஒளிமயமாயிருக்கும். மோசே ஆண்டவரோடு பேச‌ச் செல்லும்வரை தம் முகத்தின் மேல் மீண்டும் முக்காடு போட்டுக் கொள்வார்.

34:6-7 விப 20:5-6; எண் 14:18; இச 5:9-10; 7:9-10. 34:13 இச 16:21. 34:17 விப 20:4; லேவி 19:4; இச 5:8; 27:15. 34:18 விப 12:14-20; லேவி 23:6-8; எண் 28:16-25. 34:19 விப 13:2. 34:20 விப 13:13. 34:21 விப 20:9-10; 23:12; 31:15; 35:12; லேவி 23:3; இச 5:13-14. 34:22 லேவி 23:15:21; 39:43; எண் 28:26-31. 34:25 விப 12:10. 34:26 இச 24:21; 26:2. 34:29-35 2 கொரி 3:7-16.