கூடாரக் கலைஞர்கள்
(விப 35:30-36:1)

1ஆண்டவர் மோசேயிடம்,
2“யூதா குலத்தைச் சார்ந்த கூரின் மகனான ஊரியின் மகன் பெட்சலேல் என்பவனை நான் பெயர் சொல்லி அழைத்துள்ளேன்.
3ஞானம், அறிவுக்கூர்மை, அனுபவம், தொழில்திறமை அனைத்தும் அவனுக்கு உண்டாகுமாறு நான் அவனை இறை ஆவியால் நிரப்பியுள்ளேன்.
4-5இதனால் அவன் பொன், வெள்ளி, வெண்கல வேலை செய்யவும், பதிக்க வேண்டிய கற்களுக்குப் பட்டை தீட்டவும், மரத்தைச் செதுக்கவும் மற்றெல்லாவித நுண்ணிய வேலைகள் செய்யவும் வேண்டிய திட்டமிடும் நுட்பத்திறன் பெற்றுள்ளான்.
6மேலும், தாண் குலத்தைச் சார்ந்த அகிசமாக்கின் மகன் ஒகொலியாபு என்பவனையும் நான் அவனோடு நியமித்துள்ளேன். ஞானமுள்ளோர் அனைவரின் உள்ளத்திலும் நானே ஞானம் அருளியுள்ளதால், அவர்கள் நான் உனக்குக் கட்டளையிட்டபடி அனைத்தையும் செய்வர். அவையாவன;
7சந்திப்புக் கூடாரம், உடன்படிக்கைப் பேழையோடு அதன் மேலமைந்த இரக்கத்தின் இருக்கை, கூடாரத்திலுள்ள அனைத்துத் துணைக்கலன்கள்,
8அப்ப மேசை, அதன் துணைக்கலன்கள், பழுதற்ற விளக்குத் தண்டு, அதன் அனைத்துத் துணைக்கலன்கள், தூபபீடம்,
9எரிபலிபீடம், அதன் அனைத்து துணைக்கலன்கள், தண்ணீர்த் தொட்டி, அதன் ஆதாரம்,
10அழகுறப் பின்னப்பட்ட ஆடைகள், குருவாகிய ஆரோனுக்குரிய திருவுடைகள், குருத்துவப் பணிபுரிவதற்காக அவன் புதல்வருக்குரிய ஆடைகள்,
11திருப்பொழிவு எண்ணெய், தூயதலத்திற்கான நறுமணத் தூப வகைகள் ஆகியவை. நான் உனக்குக் கட்டளையிட்டபடி இவை அனைத்தையும் அவர்கள் செய்வர்” என்றார்.

ஏழாம் நாள்-ஓய்வு நாள்

12ஆண்டவர் மோசேயிடம்,
13“நீ இஸ்ரயேல் மக்களிடம் அறிவிக்க வேண்டியதாவது; நீங்கள் என் ஓய்வு நாள்களைக் கருத்தாய்க் கடைப்பிடியுங்கள். ஆண்டவராகிய நானே உங்களைப் புனிதமாக்குகிறவர் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளும்படி அது எனக்கும் உங்களுக்கும் இடையில் உங்கள் தலைமுறைதோறும் ஓர் அடையாளமாக இருக்கும்.
14ஓய்வுநாளைக் கடைப்பிடியுங்கள். அது உங்களுக்குப் புனிதமானதாகும். அதன் தூய்மையைக் கெடுப்பவன் கொல்லப்படவே வேண்டும். அந்நாளில் வேலை செய்பவன் எவனும் தன் மக்களிடமிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும்.
15ஆறு நாள்கள் வேலை செய்யலாம். ஏழாம் நாளோ ஓய்வு நாளாகிய ‘சாபாத்து’. ஆண்டவருக்குப் புனிதமான நாள். ஓய்வு நாளில் வேலை செய்பவன் எவனும் கொல்லப்படவேண்டும்.
16இஸ்ரயேல் மக்கள் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்க வேண்டும். என்றுமுள்ள உடன்படிக்கையாக விளங்கும்படி தலைமுறைதோறும் ஓய்வுநாளைக் கைக்கொள்ள வேண்டும்.
17இது எனக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் இடையே என்றுமுள்ள ஓர் அடையாளம். ஏனெனில், ஆண்டவராகிய நான் ஆறு நாள்களில் விண்ணுலகையும் மண்ணுலகையும் உருவாக்கி ஏழாம் நாளில் ஓய்வெடுத்து இளைப்பாறினேன்” என்றார்.
18ஆண்டவர் சீனாய்மலைமேல் மோசேயோடு பேசி முடித்தபின், கடவுளின் விரலால் எழுதப்பட்ட கற்பலகைகளான உடன்படிக்கைப் பலகைகள் இரண்டையும் அவரிடம் அளித்தார்.

31:15 விப 20:8-11; 23:12; 34:21; 35:2; லேவி 23:3; இச 5:12-14. 31:17 விப 20:11.