அனைத்து உலகின் அரசர்

1ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்;

மக்களினத்தார் கலங்குவராக!

அவர் கெருபுகள்மீது

வீற்றிருக்கின்றார்;

மண்ணுலகம் நடுநடுங்குவதாக!

2சீயோனில் ஆண்டவர்

மேன்மையுடன் விளங்குகின்றார்;

எல்லா இனத்தார் முன்பும்

மாட்சியுடன் திகழ்கின்றார்.

3மேன்மையானதும்

அஞ்சுதற்கு உரியதுமான

அவரது பெயரை

அவர்கள் போற்றுவார்களாக!

அவரே தூயவர்.

4வல்லமைமிக்க அரசரே!

நீதியை நீர் விரும்புகின்றீர்;

நேர்மையை நிலைக்கச் செய்கின்றீர்;

யாக்கோபினரிடையே

நீதியையும் நேர்மையையும்

நீர்தாமே நிலைநாட்டுகின்றீர்.

5நம் கடவுளாகிய ஆண்டவரைப்

பெருமைப்படுத்துங்கள்;

அவரது அரியணைமுன்

தாள் பணிந்து வணங்குங்கள்;
அவரே தூயவர்!

6மோசேயும் ஆரோனும்

அவர்தம் குருக்கள்;

அவரது பெயரால் மன்றாடுவோருள்

சாமுவேலும் ஒருவர்;

அவர்கள் ஆண்டவரை நோக்கி

மன்றாடினர்; அவரும்

அவர்களுக்குச் செவிசாய்த்தார்.

7மேகத் தூணிலிருந்து

அவர்களோடு பேசினார்;

அவர்கள் அவருடைய

ஒழுங்கு முறைகளையும்

அவர் அவர்களுக்குத் தந்த

நியமங்களையும் கடைப்பிடித்தார்கள்.

8எங்கள் கடவுளாகிய ஆண்டவரே!

நீர் அவர்களுக்குச் செவிசாய்த்தீர்;

மன்னிக்கும் கடவுளாக

உம்மை வெளிப்படுத்தினீர்;

ஆயினும், அவர்களுடைய

தீச்செயல்களுக்காய்

நீர் அவர்களைத் தண்டித்தீர்.

9நம் கடவுளாகிய ஆண்டவரைப்

பெருமைப்படுத்துங்கள்;

அவரது திருமலையில்

அவரைத் தொழுங்கள்.

ஏனெனில், நம் கடவுளாகிய

ஆண்டவரே தூயவர்.


99:1 விப 25:22. 99:7 விப 33:9.