நீதியின் கடவுளுக்கு நன்றி செலுத்துதல்
(பாடகர் தலைவர்க்கு: ‛மகனுக்காக உயிரைக்கொடு’ என்ற மெட்டு; தாவீதின் புகழ்ப்பா)

1ஆண்டவரே, என் முழு இதயத்தாலும்

உம்மைப் புகழ்வேன்; வியத்தகு உம்

செயல்களையெல்லாம் எடுத்துரைப்பேன்.

2உம்மை முன்னிட்டு மகிழ்ந்து களிகூர்வேன்;

உன்னதரே, உமது பெயரைப்

போற்றிப் பாடுவேன்.

3என் எதிரிகள் பின்னிட்டுத் திரும்புவார்கள்;

உமது முன்னிலையில்

இடறிவிழுந்து அழிவார்கள்.

4நீர் நீதியுள்ள நடுவராய்

அரியணையில் வீற்றிருக்கின்றீர்;

என் வழக்கில் எனக்கு நீதி வழங்கினீர்.

5வேற்றினத்தாரைக் கண்டித்தீர்;

பொல்லாரை அழித்தீர்;

அவர்களது பெயர் இனி இராதபடி

அடியோடு ஒழித்துவிட்டீர்.

6எதிரிகள் ஒழிந்தார்கள்; என்றும்

தலையெடுக்கமுடியாமல் அழிந்தார்கள்.

7அவர்களின் நகர்களை

நீர் தரைமட்டம் ஆக்கினீர்;

அவர்களைப் பற்றிய நினைவு

அற்றுப் போயிற்று.

ஆண்டவர் அரியணையில்

என்றென்றும் வீற்றிருக்கின்றார்;

நீதி வழங்குவதற்கென்று

அவர் தம் அரியணையை

அமைத்திருக்கின்றார்.

8உலகிற்கு அவர்

நீதியான தீர்ப்பு வழங்குவார்;

மக்களினத்தார்க்கு

நேர்மையான தீர்ப்புக் கூறுவார்.

9ஒடுக்கப்படுவோருக்கு

ஆண்டவரே அடைக்கலம்;

நெருக்கடியான வேளைகளில்

புகலிடம் அவரே.

10உமது பெயரை அறிந்தோர்

உம்மில் நம்பிக்கை கொள்வர்;

ஆண்டவரே, உம்மை நாடி வருவோரை

நீர் கைவிடுவதில்லை.

11சீயோனில் தங்கியிருக்கும்

ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்;

அவருடைய செயல்களை

மக்களினத்தாரிடையே அறிவியுங்கள்;

12ஏனெனில், இரத்தப்பழி வாங்கும் அவர்

எளியோரை நினைவில் கொள்கின்றார்;

அவர்களின் கதறலை

அவர் கேட்க மறவார்.

13ஆண்டவரே, என்மீது இரக்கமாயிரும்;

என்னைப் பகைப்போரால்

எனக்கு வரும் துன்பத்தைப் பாரும்;

சாவின் வாயினின்று என்னை விடுவியும்.

14அப்பொழுது, மகள் சீயோனின் வாயில்களில்

உம் புகழ் அனைத்தையும் பாடுவேன்;

நீர் அளிக்கும் விடுதலைகுறித்து

அகமகிழ்வேன்.

15வேற்றினத்தார் வெட்டின குழியில்

அவர்களே விழுந்தனர்;

அவர்கள் மறைத்து வைத்திருந்த வலையில்

அவர்கள் கால்களே சிக்கிக்கொண்டன.

16ஆண்டவர் நீதியை நிலைநாட்டுவதன் மூலம்

தம்மை வெளிப்படுத்தியுள்ளார்;

பொல்லார் செய்த செயலில்

அவர்களே சிக்கிக்கொண்டனர். (இடை இசை: சேலா)

17பொல்லார் பாதாளத்திற்கே செல்வர்;

கடவுளை மறந்திருக்கும்

வேற்றினத்தார் யாவரும் அங்கே செல்வர்.

18மாறாக, வறியவர் என்றுமே

மறக்கப்படுவதில்லை;

எளியோரின் நம்பிக்கை

ஒருபோதும் வீண்போகாது.

19ஆண்டவரே, எழுந்தருளும்;

மனிதரின் கை ஓங்க விடாதேயும்;

வேற்றினத்தார் உமது முன்னிலையில்

தீர்ப்புப் பெறுவார்களாக!

20ஆண்டவரே, அவர்களைத்

திகிலடையச் செய்யும்;

தாம் வெறும் மனிதரே என்பதை

வேற்றினத்தார் உணர்வார்களாக! (சேலா)