1ஆண்டவரே! எங்கள் தலைவரே!
உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு
மேன்மையாய் விளங்குகின்றது!
உமது மாட்சி வானங்களுக்கு மேலாகவும்
உயர்ந்துள்ளது.
2பாலகரின் மழலையிலும்
குழந்தைகளின் மொழியிலும்
வலிமையை உறுதிப்படுத்தி
உம் பகைவரை ஒடுக்கினீர்;
எதிரியையும் பழிவாங்குவோரையும்
அடக்கினீர்.
3உமது கைவேலைப்பாடாகிய
வானத்தையும்
அதில் நீர் பொருத்தியுள்ள
நிலாவையும் விண்மீன்களையும்
நான் நோக்கும்போது,
4மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு
அவர்கள் யார்?
மனிதப் பிறவிகளை
நீர் ஒரு பொருட்டாக எண்ணுவதற்கு
அவர்கள் எம்மாத்திரம்?
5ஆயினும், அவர்களைக்
கடவுளாகிய* உமக்குச்
சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்;
மாட்சியையும் மேன்மையையும்
அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர்.
6உமது கை படைத்தவற்றை
அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்;
எல்லாவற்றையும்
அவர்கள் பாதங்களுக்குக்
கீழ்ப்படுத்தியுள்ளீர்.
7ஆடுமாடுகள், எல்லா வகையான
காட்டு விலங்குகள்,
8வானத்துப் பறவைகள்,
கடல் மீன்கள்,
ஆழ்கடலில் நீந்திச் செல்லும்
உயிரினங்கள் அனைத்தையும்
அவர்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர்.
9ஆண்டவரே, எங்கள் தலைவரே,
உமது பெயர் உலகெங்கும்
எவ்வளவு மேன்மையாய்
விளங்குகின்றது!