வெற்றிப் பாடல்
(பாடகர் தலைவர்க்கு: நரம்பிசைக் கருவிகளுடன் ஆசாபின் புகழ்ப்பாடல்)

1யூதாவில் கடவுள் தம்மையே

வெளிப்படுத்தியுள்ளார்;

இஸ்ரயேலில் அவரது பெயர்

மாண்புடன் திகழ்கின்றது.

2எருசலேமில் அவரது கூடாரம்

இருக்கின்றது; சீயோனில்

அவரது உறைவிடம் இருக்கின்றது.

3அங்கே அவர் மின்னும் அம்புகளை

முறித்தெறிந்தார்.

கேடயத்தையும் வாளையும்

படைக்கலன்களையும்

தகர்த்தெறிந்தார். (சேலா)

4ஆண்டவரே, நீர் ஒளிமிக்கவர்;

உமது மாட்சி என்றுமுள

மலைகளினும் உயர்ந்தது.

5நெஞ்சுறுதி கொண்ட வீரர்

கொள்ளையிடப்பட்டனர்;

அவர்கள் துயிலில் ஆழ்ந்துவிட்டனர்;

அவர்களின் கைகள்

போர்க்கலன்களைத் தாங்கும்

வலுவிழந்தன.

6யாக்கோபின் கடவுளே,

உமது கடிந்துரையால்

குதிரைகளும் வீரர்களும்

மடிந்து விழுந்தனர்.

7ஆண்டவரே,

நீர் அஞ்சுதற்கு உரியவர்;

நீர் சினமுற்ற வேளையில்

உம் திருமுன் நிற்கக்கூடியவர் யார்?

8-9கடவுளே! நீதித் தீர்ப்பளிக்க

நீர் எழுந்தபோது,

மண்ணுலகில் ஒடுக்கப்பட்டோரைக்

காக்க விழைந்தபோது,

வானின்று தீர்ப்பு முழங்கச் செய்தீர்;

பூவுலகு அச்சமுற்று அடங்கியது. (சேலா)

10மாறாக, சினமுற்ற மாந்தர்,

உம்மைப் புகழ்தேத்துவர்;

உமது கோபக் கனலுக்குத் தப்பியோர்

உமக்கு விழாக்கொண்டாடுவர்;

11உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப்

பொருத்தனை செய்து

அதை நிறைவேற்றுங்கள்;

அவரைச் சுற்றலுமிருக்கிற அனைவரும்

அஞ்சுதற்குரிய அவருக்கே

காணிக்கைகளைக்
கொண்டு வருவராக!

12செருக்குற்ற தலைவர்களை

அவர் அழிக்கின்றார்;

பூவுலகின் அரசர்க்குப் பேரச்சம் ஆனார்.