முதியோரின் மன்றாட்டு

1ஆண்டவரே! உம்மிடம் நான்

அடைக்கலம் புகுந்துள்ளேன்;

ஒருபோதும் நான் வெட்கமுற

விடாதேயும்.

2உமது நீதிக்கேற்ப

என்னை விடுவித்தருளும்;

எனக்கு நீர் செவிசாய்த்து

என்னை மீட்டுக் கொள்ளும்.

3என் அடைக்கலப் பாறையாக

நீர் இருந்தருளும்;

கோட்டை அரணாயிருந்து

என்னை மீட்டருளும்;

ஏனெனில், நீர் எனக்குக்

கற்பாறையாகவும்

அரணாகவும் இருக்கின்றீர்.

4என் கடவுளே, பொல்லார் கையினின்று

என்னைக் காத்தருளும்;

நெறிகேடும் கொடுமையும் நிறைந்தோர்

பிடியினின்று என்னைக் காத்தருளும்.

5என் தலைவரே, நீரே என் நம்பிக்கை;

ஆண்டவரே, இளமைமுதல்

நீரே என் நம்பிக்கை.

6பிறப்பிலிருந்து நான் உம்மைச்

சார்ந்துள்ளேன்;

தாய் வயிற்றிலிருந்து

நீர் என்னைப் பிரித்தெடுத்தீர்;

உம்மையே நான் எப்போதும்

புகழ்ந்து போற்றுவேன்.

7பலருக்கு நான்

ஒரு புதிராய்க் காணப்படுகின்றேன்;

நீரே எனக்கு உறுதியான அடைக்கலம்.

8என் நாவில் உள்ளதெல்லாம் உமது புகழே;

நாளெல்லாம் நான் பேசுவது

உமது பெருமையே.

9முதிர் வயதில்

என்னைத் தள்ளிவிடாதேயும்;

என் ஆற்றல் குன்றும் நாளில்

என்னைக் கைவிடாதேயும்.

10ஏனெனில், என் எதிரிகள்

பேசுவதெல்லாம் என்னைப் பற்றியே;

என் உயிரைப் பறிக்கத் தேடுவோர்

ஒன்றுகூடிச் சதி செய்கின்றனர்;

11“கடவுள் அவனைக் கைவிட்டு விட்டார்;

அவனைப் பின்தொடர்ந்து பிடியுங்கள்;

அவனைக் காப்பாற்ற

ஒருவருமில்லை” என்று அவர்கள் சொல்கின்றார்கள்.

12கடவுளே! என்னைவிட்டுத்

தொலைவில் போய்விடாதேயும்;

என் கடவுளே! எனக்குத் துணை செய்ய

விரைந்து வாரும்.

13என்னைப் பழிப்பவர்கள்

வெட்கி அழிவார்களாக!

எனக்குத் தீங்கு செய்யத் தேடுகிறவர்களை

இழிவும் மானக்கேடும் சூழட்டும்!

14ஆனால், நான்

என்றும் நம்பிக்கையோடு இருப்பேன்;

மேலும் மேலும் உம்மைப்

புகழ்ந்து கொண்டிருப்பேன்.

15என் வாய் நாள்தோறும்

உமது நீதியையும் நீர் அருளும்

மீட்பையும் எடுத்துரைக்கும்;

உம் அருட் செயல்களை

என்னால் கணிக்க இயலாது.

16தலைவராகிய ஆண்டவரே!

உமது வலிமைமிகு செயல்களை

எடுத்துரைப்பேன்;

உமக்கே உரிய நீதிமுறைமையைப்

புகழ்ந்துரைப்பேன்.

17கடவுளே, என் இளமைமுதல்

எனக்குக் கற்பித்து வந்தீர்;

இனிவரும் நாள்களிலும்

உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன்.

18கடவுளே, உம் கைவன்மையையும்

ஆற்றலையும்

இனிவரும் தலைமுறைக்கு

நான் அறிவிக்குமாறு

வயது முதிர்ந்த, முடி நரைத்துவிட்ட

என்னைக் கைவிடாதேயும்.

19கடவுளே, உமது நீதி

வானம் வரைக்கும் எட்டுகின்றது;

மாபெரும் செயல்களை

நீர் செய்திருக்கிறீர்;

கடவுளே, உமக்கு நிகர் யார்?

20இன்னல்கள் பலவற்றையும்

தீங்குகளையும்

நான் காணுமாறு செய்த நீரே,

எனக்கு மீண்டும் உயிரளிப்பீர்;

பாதாளத்தினின்று என்னைத்

தூக்கி விடுவீர்.

21என் மேன்மையைப் பெருகச் செய்து

மீண்டும் என்னைத் தேற்றுவீர்.

22என் கடவுளே, நான்

வீணையைக் கொண்டு உம்மையும்

உமது உண்மையையும் புகழ்வேன்;

இஸ்ரயேலின் தூயரே, யாழிசைத்து

உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.

23நான் உமக்குப் புகழ்பாடுகையில்

என் நா அக்களிக்கும்;

நீர் மீட்டுள்ள என் ஆன்மாவும்

அக்களிக்கும்.

24என் வாழ்நாளெல்லாம் என் நா

உமது நீதியை எடுத்துரைக்கும்.

ஏனெனில் எனக்குத்

தீங்குசெய்யப் பார்த்தவர்கள்

வெட்கமும் மானக்கேடும்

அடைந்து விட்டார்கள்.