உதவிக்காக வேண்டல்
(பாடகர் தலைவர்க்கு: ‘லீலிமலர்’ என்ற மெட்டு; தாவீதுக்கு உரியது)

1கடவுளே! என்னைக் காப்பாற்றும்;

வெள்ளம் கழுத்தளவு

வந்துவிட்டது.

2ஆழமிகு நீர்த்திரளுள்

அமிழ்ந்திருக்கின்றேன்;

நிற்க இடமில்லை;

நிலைக்கொள்ளாத நீருக்குள்

ஆழ்ந்திருக்கின்றேன்;

வெள்ளம் என்மீது

புரண்டோடுகின்றது.

3கத்திக் கத்திக் களைத்துப்போனேன்;

தொண்டையும் வறண்டுபோயிற்று;

என் கடவுளாம் உமக்காகக் காத்திருந்து

என் கண்கள் பூத்துப்போயின;

4காரணமில்லாமல் என்னை வெறுப்போர்

என் தலைமுடியைவிட

மிகுதியாய் இருக்கின்றனர்;

பொய்க்குற்றம் சாட்டி

என்னைத் தாக்குவோர் பெருகிவிட்டனர்.

நான் திருடாததை

எப்படித் திருப்பித் தரமுடியும்?

5கடவுளே! என் மதிகேடு உமக்குத் தெரியும்;

என் குற்றங்கள் உமக்கு

மறைவானவை அல்ல.

6ஆண்டவரே! படைகளின் தலைவரே!

உமக்காகக் காத்திருப்போர்

என்னால் வெட்கமுறாதபடி செய்யும்;

இஸ்ரயேலின் கடவுளே!

உம்மை நாடித் தேடுகிறவர்கள்

என்பொருட்டு
மானக்கேடு அடையாதபடி செய்யும்.

7ஏனெனில், உம் பொருட்டே

நான் இழிவை ஏற்றேன்;

வெட்கக்கேடு என் முகத்தை மூடிவிட்டது.

8என் சகோதரருக்கு

வேற்று மனிதனானேன்;

என் தாயின் பிள்ளைகளுக்கு

அயலான் ஆனேன்.

9உமது இல்லத்தின்மீது

எனக்குண்டான ஆர்வம்

என்னை எரித்துவிட்டது;

உம்மைப் பழித்துப் பேசினவர்களின்

பழிச்சொற்கள் என்மீது விழுந்தன.

10நோன்பிருந்து நான்

நெக்குருகி அழுதேன்;

அதுவே எனக்கு இழிவாய் மாறிற்று.

11சாக்குத் துணியை

என் உடையாகக் கொண்டேன்;

ஆயினும், அவர்களது

பழிச்சொல்லுக்கு உள்ளானேன்.

12நகர வாயிலில் அமர்வோர்

என்னைப் பற்றிப் புறணி பேசுகின்றனர்;

குடிகாரர் என்னைப்பற்றிப்

பாட்டுக் கட்டுகின்றனர்.

13ஆண்டவரே! நான் தக்க காலத்தில்

உம்மை நோக்கி

விண்ணப்பம் செய்கின்றேன்;

கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால்

எனக்குப் பதில்மொழி தாரும்;

துணை செய்வதில் நீர் மாறாதவர்.

14சேற்றில் நான் அமிழ்வதிலிருந்து

என்னைக் காத்தருளும்;

என்னை வெறுப்போரிடமிருந்தும்

ஆழ்கடலிலிருந்தும்

என்னை விடுவித்தருளும்.

15பெருவெள்ளம் என்னை

அடித்துக்கொண்டு போகாதிருப்பதாக!

ஆழ்கடல் என்னை விழுங்காதிருப்பதாக!

படுகுழி தன்வாய் திறந்து

என்னை மூடிக் கொள்ளாதிருப்பதாக!

16ஆண்டவரே! எனக்குப் பதில்மொழி தாரும்;

உம் பேரன்பு நன்மை மிக்கது;

உமது பேரிரக்கத்தை முன்னிட்டு

என்னை நோக்கித் திரும்பும்.

17உமது முகத்தை

அடியேனுக்கு மறைக்காதேயும்;

நான் நெருக்கடியான

நிலையிலிருக்கிறேன்;

என் மன்றாட்டுக்கு

விரைவில் பதில்மொழி தாரும்.

18என்னை நெருங்கி,

என்னை விடுவித்தருளும்;

என் எதிரிகளிடமிருந்து

என்னை மீட்டருளும்.

19என் இழிவும், வெட்கக்கேடும்,

மானக்கேடும் உமக்குத் தெரியும்;

என் பகைவர் அனைவரும்

உம் முன்னிலையில் இருக்கின்றனர்.

20பழிச்சொல் என் இதயத்தைப்

பிளந்து விட்டது;

நான் மிகவும் வருந்துகிறேன்;

ஆறுதல் அளிப்பாருக்காகக்

காத்திருந்தேன்;

யாரும் வரவில்லை;

தேற்றிடுவோருக்காகக் தேடிநின்றேன்;

யாரையும் காணவில்லை.

21அவர்கள் என் உணவில்

நஞ்சைக் கலந்து கொடுத்தார்கள்;

என் தாகத்துக்குக் காடியைக்

குடிக்கக் கொடுத்தார்கள்.

22அவர்களுடைய விருந்துகளே

அவர்களுக்குக் கண்ணியாகட்டும்!

அவர்களுடைய படையல் விருந்துகளே

அவர்களுக்குப் பொறியாகட்டும்!

23அவர்களின் கண்கள் காணாதவாறு

ஒளியிழக்கட்டும்!

அவர்களின் இடைகள்

இடையறாது தள்ளாடட்டும்!

24உமது கடுஞ்சினத்தை

அவர்கள்மேல் கொட்டியருளும்;

உமது சினத்தீ

அவர்களை மடக்கிப் பிடிப்பதாக!

25அவர்களின் பாசறை பாழாவதாக!

அவர்களின் கூடாரங்களில்

ஒருவனும் குடிபுகாதிருப்பானாக!

26நீர் அடித்தவர்களை அவர்கள் இன்னும்

கொடுமைப்படுத்துகின்றார்கள்;

நீர் காயப்படுத்தினவர்களின்

நோவைப் பற்றித்

தூற்றித் திரிகின்றார்கள்.

27அவர்கள்மீது

குற்றத்தின்மேல் குற்றம் சுமத்தும்!

உமது நீதித் தீர்ப்பினின்று

அவர்களைத் தப்ப விடாதேயும்!

28மெய்வாழ்வுக்குரியோரின்

அட்டவணையிலிருந்து

அவர்களுடைய பெயர்களை நீக்கிவிடும்!

அவற்றை நேர்மையாளரின்

பெயர்களோடு சேர்க்காதேயும்!

29எளியேன் சிறுமைப்பட்டவன்;

காயமுற்றவன்;

கடவுளே! நீர் அருளும் மீட்பு

எனக்குப் பாதுகாப்பாய் இருப்பதாக!

30கடவுளின் பெயரை

நான் பாடிப் புகழ்வேன்;

அவருக்கு நன்றி செலுத்தி,

அவரை மாட்சிமைப்படுத்துவேன்;

31காளையை விட

இதுவே ஆண்டவருக்கு உகந்தது;

கொம்பும் விரிகுளம்பும்

உள்ள எருதைவிட

இதுவே அவருக்கு உகந்தது.

32எளியோர் இதைக் கண்டு

மகிழ்ச்சி அடைவார்கள்;

கடவுளை நாடித் தேடுகிறவர்களே,

உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக.

33ஆண்டவர்

ஏழைகளின் விண்ணப்பத்திற்குச்

செவிசாய்க்கின்றார்;

சிறைப்பட்ட தம் மக்களை

அவர் புறக்கணிப்பதில்லை.

34வானமும் வையமும் கடல்களும்

அவற்றில் வாழும் யாவும்

அவரைப் புகழட்டும்.

35கடவுள் சீயோனுக்கு மீட்பளிப்பார்;

யூதாவின் நகரங்களைக்

கட்டி எழுப்புவார்;

அப்பொழுது அவர்களுடைய மக்கள்

அங்கே குடியிருப்பார்கள்;

நாட்டைத் தங்களுக்குச்

சொந்தமாக்கிக் கொள்வார்கள்.

36ஆண்டவருடைய அடியாரின் மரபினர்

அதைத் தம்

உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்;

அவரது பெயர்மீது அன்பு கூர்வோர்

அதில் குடியிருப்பர்.


69:4 திபா 35:19; யோவா 15:25. 69:9 யோவா 2:17; உரோ 15:3. 69:21 மத் 27:48; மாற் 15:36; லூக் 23:36; யோவா 19:28-29. 69:22-23 உரோ 11:9-10. 69:25 திப 1:20. 69:28 விப 32:32; திவெ 3:5; 13:8; 17:8.