1கடவுளே! என்னைக் காப்பாற்றும்;
வெள்ளம் கழுத்தளவு
வந்துவிட்டது.
2ஆழமிகு நீர்த்திரளுள்
அமிழ்ந்திருக்கின்றேன்;
நிற்க இடமில்லை;
நிலைக்கொள்ளாத நீருக்குள்
ஆழ்ந்திருக்கின்றேன்;
வெள்ளம் என்மீது
புரண்டோடுகின்றது.
3கத்திக் கத்திக் களைத்துப்போனேன்;
தொண்டையும் வறண்டுபோயிற்று;
என் கடவுளாம் உமக்காகக் காத்திருந்து
என் கண்கள் பூத்துப்போயின;
4காரணமில்லாமல் என்னை வெறுப்போர்
என் தலைமுடியைவிட
மிகுதியாய் இருக்கின்றனர்;
பொய்க்குற்றம் சாட்டி
என்னைத் தாக்குவோர் பெருகிவிட்டனர்.
நான் திருடாததை
எப்படித் திருப்பித் தரமுடியும்?
5கடவுளே! என் மதிகேடு உமக்குத் தெரியும்;
என் குற்றங்கள் உமக்கு
மறைவானவை அல்ல.
6ஆண்டவரே! படைகளின் தலைவரே!
உமக்காகக் காத்திருப்போர்
என்னால் வெட்கமுறாதபடி செய்யும்;
இஸ்ரயேலின் கடவுளே!
உம்மை நாடித் தேடுகிறவர்கள்
என்பொருட்டு
மானக்கேடு அடையாதபடி செய்யும்.
7ஏனெனில், உம் பொருட்டே
நான் இழிவை ஏற்றேன்;
வெட்கக்கேடு என் முகத்தை மூடிவிட்டது.
8என் சகோதரருக்கு
வேற்று மனிதனானேன்;
என் தாயின் பிள்ளைகளுக்கு
அயலான் ஆனேன்.
9உமது இல்லத்தின்மீது
எனக்குண்டான ஆர்வம்
என்னை எரித்துவிட்டது;
உம்மைப் பழித்துப் பேசினவர்களின்
பழிச்சொற்கள் என்மீது விழுந்தன.
10நோன்பிருந்து நான்
நெக்குருகி அழுதேன்;
அதுவே எனக்கு இழிவாய் மாறிற்று.
11சாக்குத் துணியை
என் உடையாகக் கொண்டேன்;
ஆயினும், அவர்களது
பழிச்சொல்லுக்கு உள்ளானேன்.
12நகர வாயிலில் அமர்வோர்
என்னைப் பற்றிப் புறணி பேசுகின்றனர்;
குடிகாரர் என்னைப்பற்றிப்
பாட்டுக் கட்டுகின்றனர்.
13ஆண்டவரே! நான் தக்க காலத்தில்
உம்மை நோக்கி
விண்ணப்பம் செய்கின்றேன்;
கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால்
எனக்குப் பதில்மொழி தாரும்;
துணை செய்வதில் நீர் மாறாதவர்.
14சேற்றில் நான் அமிழ்வதிலிருந்து
என்னைக் காத்தருளும்;
என்னை வெறுப்போரிடமிருந்தும்
ஆழ்கடலிலிருந்தும்
என்னை விடுவித்தருளும்.
15பெருவெள்ளம் என்னை
அடித்துக்கொண்டு போகாதிருப்பதாக!
ஆழ்கடல் என்னை விழுங்காதிருப்பதாக!
படுகுழி தன்வாய் திறந்து
என்னை மூடிக் கொள்ளாதிருப்பதாக!
16ஆண்டவரே! எனக்குப் பதில்மொழி தாரும்;
உம் பேரன்பு நன்மை மிக்கது;
உமது பேரிரக்கத்தை முன்னிட்டு
என்னை நோக்கித் திரும்பும்.
17உமது முகத்தை
அடியேனுக்கு மறைக்காதேயும்;
நான் நெருக்கடியான
நிலையிலிருக்கிறேன்;
என் மன்றாட்டுக்கு
விரைவில் பதில்மொழி தாரும்.
18என்னை நெருங்கி,
என்னை விடுவித்தருளும்;
என் எதிரிகளிடமிருந்து
என்னை மீட்டருளும்.
19என் இழிவும், வெட்கக்கேடும்,
மானக்கேடும் உமக்குத் தெரியும்;
என் பகைவர் அனைவரும்
உம் முன்னிலையில் இருக்கின்றனர்.
20பழிச்சொல் என் இதயத்தைப்
பிளந்து விட்டது;
நான் மிகவும் வருந்துகிறேன்;
ஆறுதல் அளிப்பாருக்காகக்
காத்திருந்தேன்;
யாரும் வரவில்லை;
தேற்றிடுவோருக்காகக் தேடிநின்றேன்;
யாரையும் காணவில்லை.
21அவர்கள் என் உணவில்
நஞ்சைக் கலந்து கொடுத்தார்கள்;
என் தாகத்துக்குக் காடியைக்
குடிக்கக் கொடுத்தார்கள்.
22அவர்களுடைய விருந்துகளே
அவர்களுக்குக் கண்ணியாகட்டும்!
அவர்களுடைய படையல் விருந்துகளே
அவர்களுக்குப் பொறியாகட்டும்!
23அவர்களின் கண்கள் காணாதவாறு
ஒளியிழக்கட்டும்!
அவர்களின் இடைகள்
இடையறாது தள்ளாடட்டும்!
24உமது கடுஞ்சினத்தை
அவர்கள்மேல் கொட்டியருளும்;
உமது சினத்தீ
அவர்களை மடக்கிப் பிடிப்பதாக!
25அவர்களின் பாசறை பாழாவதாக!
அவர்களின் கூடாரங்களில்
ஒருவனும் குடிபுகாதிருப்பானாக!
26நீர் அடித்தவர்களை அவர்கள் இன்னும்
கொடுமைப்படுத்துகின்றார்கள்;
நீர் காயப்படுத்தினவர்களின்
நோவைப் பற்றித்
தூற்றித் திரிகின்றார்கள்.
27அவர்கள்மீது
குற்றத்தின்மேல் குற்றம் சுமத்தும்!
உமது நீதித் தீர்ப்பினின்று
அவர்களைத் தப்ப விடாதேயும்!
28மெய்வாழ்வுக்குரியோரின்
அட்டவணையிலிருந்து
அவர்களுடைய பெயர்களை நீக்கிவிடும்!
அவற்றை நேர்மையாளரின்
பெயர்களோடு சேர்க்காதேயும்!
29எளியேன் சிறுமைப்பட்டவன்;
காயமுற்றவன்;
கடவுளே! நீர் அருளும் மீட்பு
எனக்குப் பாதுகாப்பாய் இருப்பதாக!
30கடவுளின் பெயரை
நான் பாடிப் புகழ்வேன்;
அவருக்கு நன்றி செலுத்தி,
அவரை மாட்சிமைப்படுத்துவேன்;
31காளையை விட
இதுவே ஆண்டவருக்கு உகந்தது;
கொம்பும் விரிகுளம்பும்
உள்ள எருதைவிட
இதுவே அவருக்கு உகந்தது.
32எளியோர் இதைக் கண்டு
மகிழ்ச்சி அடைவார்கள்;
கடவுளை நாடித் தேடுகிறவர்களே,
உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக.
33ஆண்டவர்
ஏழைகளின் விண்ணப்பத்திற்குச்
செவிசாய்க்கின்றார்;
சிறைப்பட்ட தம் மக்களை
அவர் புறக்கணிப்பதில்லை.
34வானமும் வையமும் கடல்களும்
அவற்றில் வாழும் யாவும்
அவரைப் புகழட்டும்.
35கடவுள் சீயோனுக்கு மீட்பளிப்பார்;
யூதாவின் நகரங்களைக்
கட்டி எழுப்புவார்;
அப்பொழுது அவர்களுடைய மக்கள்
அங்கே குடியிருப்பார்கள்;
நாட்டைத் தங்களுக்குச்
சொந்தமாக்கிக் கொள்வார்கள்.
36ஆண்டவருடைய அடியாரின் மரபினர்
அதைத் தம்
உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்;
அவரது பெயர்மீது அன்பு கூர்வோர்
அதில் குடியிருப்பர்.