நன்றிப் புகழ்ப்பா
(பாடகர் தலைவர்க்கு: நரம்பிசைக் கருவிகளுடன்; புகழ்ப்பாடல்)

1கடவுளே! எம்மீது இரங்கி,

எமக்கு ஆசி வழங்குவீராக!

உம் திருமுக ஒளியை

எம்மீது வீசுவீராக! (சேலா)

2அப்பொழுது, உலகம்

உமது வழியை அறிந்துகொள்ளும்;

பிற இனத்தார் அனைவரும்

நீர் அருளும் மீட்பை

உணர்ந்து கொள்வர். (சேலா)

3கடவுளே! மக்களினத்தார்

உம்மைப் புகழ்வார்களாக!

மக்கள் எல்லாரும்

உம்மைப் போற்றுவார்களாக!

4வேற்று நாட்டினர் அக்களித்து

மகிழ்ச்சியுடன் பாடிடுவராக!

ஏனெனில், நீர் மக்களினங்களை

நேர்மையுடன் ஆளுகின்றீர்;

உலகின் நாடுகளை

வழிநடத்துகின்றீர். (சேலா)

5கடவுளே! மக்களினத்தார்

உம்மைப் புகழ்வார்களாக!

மக்கள் எல்லாரும்

உம்மைப் போற்றுவார்களாக!

6நானிலம் தன் பலனை ஈந்தது;

கடவுள், நம் கடவுள்

நமக்கு ஆசி வழங்கினார்.

7கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக!

உலகின் கடையெல்லைவரை வாழ்வோர்

அவருக்கு அஞ்சுவராக!