1‛கடவுள் இல்லை’ என
அறிவிலிகள் தம் உள்ளத்தில்
சொல்லிக் கொள்கின்றனர்;
அவர்களுள் சிலர் கெட்டு
அருவருப்பான செயல்களில்
ஈடுபடுகின்றனர்;
நல்லது செய்வார் யாரும் இல்லை.
2கடவுள் விண்ணகத்தினின்று
மானிடரை உற்றுநோக்குகின்றார்;
மதிநுட்பமுள்ளவர், கடவுளை நாடுபவர்
எவராவது உண்டோ என்று
பார்க்கின்றார்.
3எல்லோரும் நெறிபிறழ்ந்தனர்;
ஒருமிக்கக் கெட்டு போயினர்;
நல்லது செய்வார் யாரும் இல்லை;
ஒருவர் கூட இல்லை.
4‛தீங்கிழைக்கும் யாவரும்
அறிவை இழந்துவிட்டார்களோ?
உணவை விழுங்குவதுபோல்
என் மக்களை
விழுங்கப் பார்க்கின்றார்களே!’
இவர்கள் கடவுளை நோக்கி
மன்றாடுவதுமில்லை;
5எனவே, அவர்கள்
இதுவரை கண்டிராத முறையில்
பேரச்சத்தால் நடுநடுங்குவர்;
இறைமக்களை ஒடுக்கியோரின்
எலும்புகளைக் கடவுள் சிதறடிப்பார்;
கடவுள் அவர்களைக் கைவிட்டதால்
அவர்கள் மானக்கேடு அடைவர்.
6சீயோனிலிருந்து
இஸ்ரயேலருக்கு மீட்பு வருவதாக!
கடவுள் தம் மக்களுக்கு மீண்டும்
வளமான வாழ்வை அருளும்போது,
யாக்கோபின் இனத்தார் களிகூர்வராக!
இஸ்ரயேல் மக்கள் அகமகிழ்வராக!