கடவுளின் திரு நகர்
(கோராகியரின் புகழ்ப்பாடல்)

1ஆண்டவர் மாண்பு மிக்கவர்;

நம் கடவுளின் நகரில்,

அவரது திருமலையில்

மிகுந்த புகழுக்கு உரியவர்.

2அழகும் உயரமுமாய் தொலை வடக்கில் திகழும்

சீயோன் மலை அனைத்து உலகிற்கும்

மகிழ்ச்சியால் இலங்குகின்றது;

மாவேந்தரின் நகரும் அதுவே.

3அதன் அரண்மனைகளில்

கடவுள் வீற்றிருந்து, தம்மையே

அதன் கோட்டை எனக் காட்டியுள்ளார்.

4இதோ! அரசர் அனைவரும் ஒன்று கூடினர்;

அணிவகுத்து ஒன்றாக வந்தனர்;

5அந்தோ! பார்த்ததும் திகைத்தனர்;

திகிலடைந்து ஓட்டம் பிடித்தனர்.

6அங்கே அச்சம் அவர்களை ஆட்கொண்டது;

பேறுகாலப் பெண்போல்

அவர்கள் துடிதுடித்தனர்.

7தர்சீசுக் கப்பல்களைக்

கீழைக் காற்றினால்

நீர் தகர்த்தெறிகின்றீர்.

8கேள்விப்பட்டவாறே

நேரில் யாம் கண்டோம்;

படைகளின் ஆண்டவரது நகரில்,

ஆம், கடவுளின் நகரினில் கண்டோம்;

கடவுள் அந்நகரை எந்நாளும்

நிலைத்திருக்கச் செய்வார். (சேலா)

9கடவுளே! உமது கோவிலின் நடுவில்

உம் பேரன்பை நினைந்து உருகினோம்.

10கடவுளே! உமது பெயரைப் போலவே,

உமது புகழும் பூவுலகின்

கடை எல்லைவரை எட்டுகின்றது;

உமது வலக்கை

நீதியை நிலைநாட்டுகின்றது.

11சீயோன் மலை மகிழ்வதாக!

யூதாவின் நகர்கள்

உம் நீதித்தீர்ப்புகளை முன்னிட்டு

அக்களிப்பனவாக!

12சீயோனை வலம் வாருங்கள்;

அதைச்சுற்றி நடைபோடுங்கள்;

அதன் காவல் மாடங்களை

எண்ணிக்கையிடுங்கள்.

13அதன் மதில்களைக்

கவனித்துப் பாருங்கள்;

அதன் கோட்டைகளைச்

சுற்றிப் பாருங்கள்;

அப்பொழுது, இனிவரும் தலைமுறைக்கு

இதை உங்களால் விவரிக்க இயலும்.

14இத்தகைய கடவுளே என்றென்றும்

நம் கடவுள்; அவரே நம்மை

இறுதிவரை வழி நடத்துவார்.


48:2 மத் 5:35.