1ஆண்டவரே, என்மீது
சினங்கொண்டு
என்னைக் கண்டியாதேயும்;
என்மீது சீற்றங்கொண்டு
என்னைத் தண்டியாதேயும்;
2ஏனெனில், உம் அம்புகள்
என்னுள் பாய்ந்திருக்கின்றன;
உமது கை என்னை
அழுத்திக் கொண்டிருக்கின்றது.
3நீர் கடுஞ்சினங்கொண்டதால்
என் உடலில் நலமே இல்லை;
என் பாவத்தால் என் எலும்புகளில்
வலுவே இல்லை.
4என் குற்றங்கள் தலைக்குமேல்
போய்விட்டன;
தாங்கவொண்ணாச் சுமைபோல
அவை என்னை வெகுவாய்
அழுத்துகின்றன.
5என் புண்கள் அழுகி
நாற்றமெடுக்கின்றன;
என் மதிகேடுதான்
இதற்கெல்லாம் காரணம்.
6நான் மிகவும் ஒடுங்கிப்போனேன்;
நாளெல்லாம் துயருற்றுத் திரிகின்றேன்.
7என் குடல் முற்றிலும் வெந்து போயிற்று;
என் உடலில் சற்றேனும் நலம் இல்லை.
8நான் வலுவற்றுப் போனேன்;
முற்றிலும் நொறுங்கிப் போனேன்;
என் உள்ளக் கொதிப்பினால்
கதறுகின்றேன்.
9என் தலைவரே, என் பெருமூச்செல்லாம்
உமக்குத் தெரியும்;
என் வேதனைக் குரல்
உமக்கு மறைவாயில்லை.
10என் உள்ளம் வேதனையால் துடிக்கின்றது;
என் வலிமை என்னைவிட்டு அகன்றது;
என் கண்களும்கூட ஒளி இழந்தன.
11என் நண்பர்களும் தோழர்களும்
நான் படும் வாதை கண்டு
விலகி நிற்கின்றனர்;
என் உறவினரும் என்னைவிட்டு
ஒதுங்கி நிற்கின்றனர்.
12என் உயிரைப் பறிக்கத்தேடுவோர்
எனக்குக் கண்ணி வைக்கின்றனர்;
எனக்குத் தீங்கிழைக்கத் துணிந்தோர்
என் அழிவைப் பற்றிப் பேசுகின்றனர்;
எப்போதும் எனக்கெதிராய்ச்
சூழ்ச்சி செய்கின்றனர்.
13நானோ செவிடர்போல் காது கேளாமலும்
ஊமைபோல் வாய் திறவாமலும்
இருக்கின்றேன்.
14உண்மையாகவே, நான்
செவிப்புலனற்ற மனிதர் போலும்
மறுப்புரை கூறாத
நாவினர் போலும் ஆனேன்;
15ஏனெனில் ஆண்டவரே,
நான் உம்மையே நம்பியிருக்கின்றேன்;
என் தலைவராகிய கடவுளே,
செவிசாய்த்தருளும்.
16‛அவர்கள் என்னைப் பார்த்துக்
களிக்க விடாதேயும்;
என் கால் தடுமாறினால் அவர்கள்
பெருமை கொள்வர்’ என்று சொன்னேன்.
17நான் தடுமாறிவிழும் நிலையில்
இருக்கின்றேன்;
நான் எப்போதும் வேதனையில் உள்ளேன்.
18என் குற்றத்தை நான்
அறிக்கையிடுகின்றேன்;
என் பாவத்தின் பொருட்டு
நான் அஞ்சுகின்றேன்.
19காரணமின்றி என்னைப் பகைப்போர்
வலுவாய் உள்ளனர்;
வீணாக என்னை வெறுப்போர்
பலராய் உள்ளனர்;
20நன்மைக்குப் பதிலாக அவர்கள்
எனக்குத் தீமை செய்கின்றனர்;
நன்மையே நாடும் என்னைப்
பகைக்கின்றனர்;
21ஆண்டவரே! என்னைக் கைவிடாதேயும்;
என் கடவுளே!
என்னைவிட்டு அகன்றுவிடாதேயும்.
22என் தலைவரே! மீட்பரே!
எனக்குத் துணைசெய்ய விரைந்து வாரும்.