மானிட வாழ்க்கையின் நிலையாமை
(பாடகர் தலைவர் எதுத்தூனுக்கு; தாவீதின் புகழ்ப்பா)

1‛நான் என் நாவினால் பாவம்

செய்யாதவண்ணம்

என் நடைமுறைகளைக்

காத்துக்கொள்வேன்;

பொல்லார் என்முன் நிற்கும் வரையில்,

என் வாய்க்குப் பூட்டுப் போட்டுக்

காத்துக் கொள்வேன்’ என்று சொன்னேன்.

2நான் ஊமையைப்போல்

பேசாது இருந்தேன்;

நலமானதைக்கூடப் பேசாமல்

அமைதியாய் இருந்தேன்;

என் வேதனையோ பெருகிற்று.

3என் உள்ளம் என்னுள்

எரியத் தொடங்கிற்று;

நான் சிந்தனையில் ஆழ்ந்தபோது

நெருப்பு மூண்டது;

அப்பொழுது என் நா பேசியதாவது;

4‛ஆண்டவரே! என் முடிவு பற்றியும்

என் வாழ்நாளின் அளவு பற்றியும்

எனக்கு அறிவுறுத்தும்.

அப்போது, நான் எத்துணை நிலையற்றவன்

என உணர்ந்து கொள்வேன்.

5என் வாழ்நாளைச்

சில விரற்கடை அளவாக்கினீர்;

என் ஆயுட்காலம் உமது பார்வையில்

ஒன்றுமில்லை;

உண்மையில், மானிடர் அனைவரும்

தம் உச்ச நிலையிலும்

நீர்க்குமிழி போன்றவரே! (சேலா)

6அவர்கள் நிழலைப்போல நடமாடுகின்றனர்;

அவர்கள் வருந்தி உழைப்பது வீண்;

அவர்கள் சேமித்து வைக்கின்றனர்;

ஆனால் அதை அனுபவிப்பது

யாரென அறியார்.

7என் தலைவரே, நான் இப்போது

எதை எதிர்பார்க்கட்டும்?

நான் உம்மையே நம்பியிருக்கின்றேன்.

8என் குற்றங்கள் அனைத்தினின்றும்

என்னை விடுவித்தருளும்;

மதிகேடரின் பழிப்புரைக்கு

என்னை ஆளாக்காதேயும்.

9நான் ஊமைபோல் ஆனேன்;

வாய் திறவேன்;

ஏனெனில், எனக்கு

இந்நிலைமையை வருவித்தவர் நீரே.

10நீர் தந்த வாதையை

என்னிடமிருந்து நீக்கிவிடும்;

உமது கை அடித்த அடிகளால்

நான் அழிவுக்கு ஆளானேன்.

11குற்றத்தின் பொருட்டு

நீர் மனிதரைத் தண்டிக்கும்போது,

பூச்சி அரிப்பதுபோல்,

அவர்களுக்கு விருப்பமானவற்றை

நீர் அழிக்கின்றீர்;

உண்மையில் மானிடர் அனைவரும்

நீர்க்குமிழி போன்றவரே! (சேலா)

12ஆண்டவரே!

என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்;

என்னுடைய மன்றாட்டுக்குச்

செவிசாய்த்தருளும்;

என் கண்ணீரைக் கண்டும்

மௌனமாய் இராதேயும்;

ஏனெனில், உமது முன்னிலையில்

நான் ஓர் அன்னியன்;

என் மூதாதையர் போன்று

நான் ஒரு நாடோடி!

13நான் பிரிந்து மறையும் முன்பு

சற்றே மகிழ்ச்சி அடையும்படி,

உம் கொடிய பார்வையை

என்னிடமிருந்து திருப்பிக்கொள்ளும்.