கடவுளின் கருணையைப் புகழ்தல்
(தாவீதுக்கு உரியது; அவர் அபிமெலக்கின் முன் பித்துப் பிடித்தவர் போலத் தம்மைக் காட்டியபோது அவன் அவரைத்துரத்திவிட, அவர் வெளியேறினார்; அப்போது அவர் பாடியது)

1ஆண்டவரை நான்

எக்காலமும் போற்றுவேன்;

அவரது புகழ் எப்பொழுதும்

என் நாவில் ஒலிக்கும்.

2நான் ஆண்டவரைப் பற்றிப்

பெருமையாகப் பேசுவேன்;

எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர்.

3என்னுடன் ஆண்டவரை

பெருமைப்படுத்துங்கள்;

அவரது பெயரை ஒருமிக்க

மேன்மைப்படுத்துவோம்.

4துணைவேண்டி நான் ஆண்டவரை

மன்றாடினேன்; அவர் எனக்கு

மறுமொழி பகர்ந்தார்;

எல்லா வகையான அச்சத்தினின்றும்

அவர் என்னை விடுவித்தார்.

5அவரை நோக்கிப் பார்த்தோர்

மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்;

அவர்கள் முகம்

அவமானத்திற்கு உள்ளாகவில்லை.

6இந்த ஏழை கூவியழைத்தான்;

ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்;

அவர் எல்லா நெருக்கடியினின்றும்

அவனை விடுவித்துக் காத்தார்.

7ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை

அவர்தம் தூதர் சூழ்ந்துநின்று காத்திடுவர்.

8ஆண்டவர் எத்துணை இனியவர் என்று

சுவைத்துப் பாருங்கள்;

அவரிடம் அடைக்கலம் புகுவோர்

பேறுபெற்றோர்.

9ஆண்டவரின் தூயோரே,

அவருக்கு அஞ்சுங்கள்;

அவருக்கு அஞ்சுவோர்க்கு

எக்குறையும் இராது.

10சிங்கக் குட்டிகள் உணவின்றிப்

பட்டினி இருக்க நேரிட்டாலும்,

ஆண்டவரை நாடுவோர்க்கு

நன்மை ஏதும் குறையாது.

11வாரீர் பிள்ளைகளே!

நான் சொல்வதைக் கேளீர்!

ஆண்டவருக்கு அஞ்சுவதைப்பற்றி

உங்களுக்குக் கற்பிப்பேன்.

12வாழ்க்கையில் இன்பம் காண விருப்பமா?

வாழ்வின் வளத்தைத் துய்க்குமாறு

நெடுநாள் வாழ நாட்டமா?

13அப்படியெனில், தீச்சொல்லினின்று

உன் நாவைக் காத்திடு;

வஞ்சக மொழியை

உன் வாயைவிட்டு விலக்கிடு!

14தீமையைவிட்டு விலகு;

நன்மையே செய்; நல்வாழ்வை நாடு;

அதை அடைவதிலேயே கருத்தாயிரு.

15ஆண்டவர் கண்கள்

நீதிமான்களை நோக்குகின்றன;

அவர் செவிகள்

அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன.

16ஆண்டவரின் முகமோ

தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது;

அவர், அவர்களின் நினைவே

உலகில் அற்றுப்போகச் செய்வார்.

17நீதிமான்கள் மன்றாடும்போது,

ஆண்டவர் செவிசாய்க்கின்றார்;

அவர்களை அனைத்து

இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார்.

18உடைந்த உள்ளத்தார்க்கு அருகில்

ஆண்டவர் இருக்கின்றார்;

நைந்த நெஞ்சத்தாரை

அவர் காப்பாற்றுகின்றார்.

19நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல;

அவை அனைத்தினின்றும்

ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார்.

20அவர்களின் எலும்புகளை எல்லாம்

அவர் பாதுகாக்கின்றார்;

அவற்றுள் ஒன்றும் முறிபடாது.

21தீயோரைத் தீவினையே சாகடிக்கும்;

நேர்மையாளரை வெறுப்போர்

தண்டனை பெறுவர்.

22ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை

மீட்கின்றார்; அவரிடம் அடைக்கலம்

புகும் எவரும் தண்டனை அடையார்.


34 தலைப்பு: 1 சாமு 21:13-15;. 34:8 1 பேது 2:3. 34:12 1 பேது 3:10-12. 34:20 யோவா 19:36.