புகழ்ச்சிப் பாடல்

1நீதிமான்களே,

ஆண்டவரில் களிகூருங்கள்;

நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது

பொருத்தமானதே.

2யாழிசைத்து ஆண்டவருக்கு

நன்றி செலுத்துங்கள்;

பதின் நரம்பு யாழினால்

அவரைப் புகழ்ந்து பாடுங்கள்;

3புத்தம்புது பாடல் ஒன்றை

அவருக்குப் பாடுங்கள்;

திறம்பட இசைத்து

மகிழ்ச்சிக் குரல் எழுப்புங்கள்.

4ஆண்டவரின் வாக்கு நேர்மையானது;

அவருடைய செயல்கள் எல்லாம்

நம்பிக்கைக்கு உரியவை.

5அவர் நீதியையும் நேர்மையையும்
விரும்புகின்றார்;

அவரது பேரன்பால்

பூவுலகு நிறைந்துள்ளது.

6ஆண்டவரது வாக்கினால்

வானங்கள் உண்டாயின;

அவரது சொல்லின் ஆற்றலால்

வான்கோள்கள் எல்லாம் உருவாயின.

7அவர் கடல்நீரைக்

குவியல்போல் சேர்த்து வைத்தார்;

அந்நீரை ஆழ் நிலவறைகளில்

சேமித்து வைத்தார்.

8அனைத்துலகும் ஆண்டவருக்கு அஞ்சுவதாக!

உலகில் வாழ்வோர் அனைவரும்

அவருக்கு அஞ்சி நடுங்குவராக!

9அவர் சொல்லி உலகம் உண்டானது;

அவர் கட்டளையிட, அது நிலைபெற்றது.

10வேற்றினத்தாரின் திட்டங்களை

ஆண்டவர் முறியடிக்கின்றார்;

மக்களினத்தாரின் எண்ணங்களைக்

குலைத்து விடுகின்றார்.

11ஆண்டவரின் எண்ணங்களோ

என்றென்றும் நிலைத்திருக்கும்;

அவரது உள்ளத்தின் திட்டங்கள்

தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும்.

12ஆண்டவரைத் தன் கடவுளாகக்

கொண்ட இனம் பேறுபெற்றது;

அவர் தமது உரிமைச் சொத்தாகத்

தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.

13வானினின்று ஆண்டவர் பார்க்கின்றார்;

மானிடர் அனைவரையும் காண்கின்றார்.

14தாம் வீற்றிருக்கும் இடத்திலிருந்து

உலகெங்கும் வாழ்வோரைக்
கூர்ந்து நோக்குகின்றார்.

15அவர்களின் உள்ளங்களை

உருவாக்குகின்றவர் அவரே!

அவர்களின் செயல்கள் அனைத்தையும்

உற்று நோக்குபவரும் அவரே!

16தன் படைப் பெருக்கத்தால்

வெற்றிபெறும் அரசருமில்லை;

தன் வலிமையின் மிகுதியால்

உயிர் தப்பிய வீரருமில்லை.

17வெற்றி பெறப்

போர்க்குதிரையை நம்புவது வீண்;

மிகுந்த வலுவுள்ளதாயினும்

அது விடுவிக்காது.

18தமக்கு அஞ்சி நடப்போரையும்

தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும்

ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.

19அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்;
அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார்.

20நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்;

அவரே நமக்குத் துணையும்
கேடயமும் ஆவார்.

21நம் உள்ளம் அவரை நினைத்துக் களிகூரும்;

ஏனெனில், அவரது திருப்பெயரில்

நாம் நம்பிக்கை வைத்துள்ளோம்.

22உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால்,

உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!