1நீதிமான்களே,
ஆண்டவரில் களிகூருங்கள்;
நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது
பொருத்தமானதே.
2யாழிசைத்து ஆண்டவருக்கு
நன்றி செலுத்துங்கள்;
பதின் நரம்பு யாழினால்
அவரைப் புகழ்ந்து பாடுங்கள்;
3புத்தம்புது பாடல் ஒன்றை
அவருக்குப் பாடுங்கள்;
திறம்பட இசைத்து
மகிழ்ச்சிக் குரல் எழுப்புங்கள்.
4ஆண்டவரின் வாக்கு நேர்மையானது;
அவருடைய செயல்கள் எல்லாம்
நம்பிக்கைக்கு உரியவை.
5அவர் நீதியையும் நேர்மையையும்
விரும்புகின்றார்;
அவரது பேரன்பால்
பூவுலகு நிறைந்துள்ளது.
6ஆண்டவரது வாக்கினால்
வானங்கள் உண்டாயின;
அவரது சொல்லின் ஆற்றலால்
வான்கோள்கள் எல்லாம் உருவாயின.
7அவர் கடல்நீரைக்
குவியல்போல் சேர்த்து வைத்தார்;
அந்நீரை ஆழ் நிலவறைகளில்
சேமித்து வைத்தார்.
8அனைத்துலகும் ஆண்டவருக்கு அஞ்சுவதாக!
உலகில் வாழ்வோர் அனைவரும்
அவருக்கு அஞ்சி நடுங்குவராக!
9அவர் சொல்லி உலகம் உண்டானது;
அவர் கட்டளையிட, அது நிலைபெற்றது.
10வேற்றினத்தாரின் திட்டங்களை
ஆண்டவர் முறியடிக்கின்றார்;
மக்களினத்தாரின் எண்ணங்களைக்
குலைத்து விடுகின்றார்.
11ஆண்டவரின் எண்ணங்களோ
என்றென்றும் நிலைத்திருக்கும்;
அவரது உள்ளத்தின் திட்டங்கள்
தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும்.
12ஆண்டவரைத் தன் கடவுளாகக்
கொண்ட இனம் பேறுபெற்றது;
அவர் தமது உரிமைச் சொத்தாகத்
தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.
13வானினின்று ஆண்டவர் பார்க்கின்றார்;
மானிடர் அனைவரையும் காண்கின்றார்.
14தாம் வீற்றிருக்கும் இடத்திலிருந்து
உலகெங்கும் வாழ்வோரைக்
கூர்ந்து நோக்குகின்றார்.
15அவர்களின் உள்ளங்களை
உருவாக்குகின்றவர் அவரே!
அவர்களின் செயல்கள் அனைத்தையும்
உற்று நோக்குபவரும் அவரே!
16தன் படைப் பெருக்கத்தால்
வெற்றிபெறும் அரசருமில்லை;
தன் வலிமையின் மிகுதியால்
உயிர் தப்பிய வீரருமில்லை.
17வெற்றி பெறப்
போர்க்குதிரையை நம்புவது வீண்;
மிகுந்த வலுவுள்ளதாயினும்
அது விடுவிக்காது.
18தமக்கு அஞ்சி நடப்போரையும்
தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும்
ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.
20நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்;
அவரே நமக்குத் துணையும்
கேடயமும் ஆவார்.
21நம் உள்ளம் அவரை நினைத்துக் களிகூரும்;
ஏனெனில், அவரது திருப்பெயரில்
நாம் நம்பிக்கை வைத்துள்ளோம்.
22உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால்,
உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!