1ஆண்டவரே, உம்மை ஏத்திப்
புகழ்வேன்; ஏனெனில்,
நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்;
என்னைக் கண்டு என் பகைவர்
மகிழ நீர் விடவில்லை.
2என் கடவுளாகிய ஆண்டவரே,
உம்மிடம் உதவி வேண்டினேன்;
என்னை நீர் குணப்படுத்துவீர்.
3ஆண்டவரே, நீர் என்னைப்
பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்;
சாவுக்குழியில் இறங்கிய
எனது உயிரைக் காத்தீர்.
4இறையன்பரே, ஆண்டவரைப்
புகழ்ந்து பாடுங்கள்;
தூயவராம் அவரை நினைந்து
நன்றி கூறுங்கள்.
5அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான்
இருக்கும்; அவரது கருணையோ
வாழ்நாள் முழுதும் நீடிக்கும்;
மாலையில் அழுகை;
காலையிலோ ஆர்ப்பரிப்பு.
6நான் வளமுடன் வாழ்ந்தபோது,
‛என்னை ஒருபோதும்
அசைக்க முடியாது’ என்றேன்.
7ஆனால், ஆண்டவரே!
உமது கருணையினால்
மலையென உறுதியாக என்னை
நிலைநிற்கச் செய்தீர்;
உம் முகத்தை மறைத்துக்கொண்டீர்;
நான் நிலைகலங்கிப் போனேன்.
8ஆண்டவரே, உம்மை நோக்கி
மன்றாடினேன்;
என் தலைவரிடம்
எனக்கு இரங்குமாறு வேண்டினேன்.
9நான் சாவதால், படுகுழிக்குப் போவதால்,
உமக்கு என்ன பயன்?
புழுதியால் உம்மைப் புகழ முடியுமா?
உமது வாக்குப் பிறழாமையை
அறிவிக்க இயலுமா?
10ஆண்டவரே, எனக்குச் செவிசாயும்;
என்மீது இரங்கும்;
ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும்.
11நீர் என் புலம்பலைக்
களிநடனமாக மாற்றிவிட்டீர்;
என் சாக்குத் துணியைக் களைந்துவிட்டு
எனை மகிழ்ச்சியால் உடுத்தினீர்.
12ஆகவே என் உள்ளம்*
உம்மைப் புகழ்ந்து பாடும்;
மௌனமாய் இராது;
என் கடவுளாகிய ஆண்டவரே,
உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன்.