நன்றி செலுத்தல்
(புகழ்ப்பா; திருக்கோவில் அர்ப்பணப்பா; தாவீதுக்கு உரியது)

1ஆண்டவரே, உம்மை ஏத்திப்

புகழ்வேன்; ஏனெனில்,

நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்;

என்னைக் கண்டு என் பகைவர்

மகிழ நீர் விடவில்லை.

2என் கடவுளாகிய ஆண்டவரே,

உம்மிடம் உதவி வேண்டினேன்;

என்னை நீர் குணப்படுத்துவீர்.

3ஆண்டவரே, நீர் என்னைப்

பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்;

சாவுக்குழியில் இறங்கிய

எனது உயிரைக் காத்தீர்.

4இறையன்பரே, ஆண்டவரைப்

புகழ்ந்து பாடுங்கள்;

தூயவராம் அவரை நினைந்து

நன்றி கூறுங்கள்.

5அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான்

இருக்கும்; அவரது கருணையோ

வாழ்நாள் முழுதும் நீடிக்கும்;

மாலையில் அழுகை;

காலையிலோ ஆர்ப்பரிப்பு.

6நான் வளமுடன் வாழ்ந்தபோது,

‛என்னை ஒருபோதும்

அசைக்க முடியாது’ என்றேன்.

7ஆனால், ஆண்டவரே!

உமது கருணையினால்

மலையென உறுதியாக என்னை

நிலைநிற்கச் செய்தீர்;

உம் முகத்தை மறைத்துக்கொண்டீர்;

நான் நிலைகலங்கிப் போனேன்.

8ஆண்டவரே, உம்மை நோக்கி

மன்றாடினேன்;

என் தலைவரிடம்

எனக்கு இரங்குமாறு வேண்டினேன்.

9நான் சாவதால், படுகுழிக்குப் போவதால்,

உமக்கு என்ன பயன்?

புழுதியால் உம்மைப் புகழ முடியுமா?

உமது வாக்குப் பிறழாமையை

அறிவிக்க இயலுமா?

10ஆண்டவரே, எனக்குச் செவிசாயும்;

என்மீது இரங்கும்;

ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும்.

11நீர் என் புலம்பலைக்

களிநடனமாக மாற்றிவிட்டீர்;

என் சாக்குத் துணியைக் களைந்துவிட்டு

எனை மகிழ்ச்சியால் உடுத்தினீர்.

12ஆகவே என் உள்ளம்*

உம்மைப் புகழ்ந்து பாடும்;

மௌனமாய் இராது;

என் கடவுளாகிய ஆண்டவரே,

உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன்.


30:12 ‘மாட்சி’ எனவும் பொருள்படும்.