புயல் நடுவே ஆண்டவரின் குரல்
(தாவீதின் புகழ்ப்பா)

1இறைவனின் மைந்தரே!

மாட்சியையும் வலிமையையும்

ஆண்டவருக்கு உரித்தாக்குங்கள்.

ஆம்! ஆண்டவருக்கே
உரித்தாக்குங்கள்!

2ஆண்டவரின் பெயருக்கேற்ற மாட்சியை

அவருக்கு உரித்தாக்குங்கள்;

தூய மாட்சி இலங்கும்

ஆண்டவரை வழிபடுங்கள்.

3ஆண்டவரின் குரல்

கடல்மேல் ஒலிக்கின்றது;

மாட்சிமிகு இறைவன் முழங்குகின்றார்;

ஆண்டவர் நீர்த்திரள்களின்மேல்
வீற்றிருக்கின்றார்.

4ஆண்டவரின் குரல் வலிமைமிக்கது;

ஆண்டவரின் குரல் மாட்சிமிக்கது.

5ஆண்டவரின் குரல்

கேதுரு மரங்களை முறிக்கின்றது;

ஆண்டவர் லெபனோன் கேதுரு

மரங்களை முறித்துவிடுகின்றார்.

6லெபனோனின் மலையைக்

கன்றுக் குட்டியெனத் துள்ளச் செய்கின்றார்;

சிரியோன் மலையைக்

காட்டெருமைக் கன்றெனக்

குதிக்கச் செய்கின்றார்.

7ஆண்டவரின் குரல்

மின்னலைத் தெறிக்கச் செய்கின்றது;

8ஆண்டவரின் குரல் பாலைவனத்தை

அதிரச் செய்கின்றது;

ஆண்டவர் காதேசு பாலைவனத்தை

நடுங்கச் செய்கின்றார்.

9ஆண்டவரின் குரல் கருவாலி மரங்களை

முறித்து விடுகின்றது*;

காடுகளை வெறுமை ஆக்குகின்றது;

அவரது கோவிலில் உள்ள அனைவரும்

‛இறைவனுக்கு மாட்சி’ என்று

ஆர்ப்பரிக்கின்றனர்.

10ஆண்டவர் வெள்ளப் பெருக்கின்மீது

வீற்றிருக்கின்றார்;

ஆண்டவர் என்றென்றும்

அரசராக வீற்றிருக்கின்றார்.

11ஆண்டவர் தம் மக்களுக்கு

ஆற்றல் அளிப்பாராக!

ஆண்டவர் தம் மக்களுக்குச்

சமாதானம் அருள்வாராக!

ஆண்டவர் தம் மக்களுக்கு

ஆசி வழங்குவாராக!


29:1-2 திபா 96:7-9.
29:9 *‘மானைக் கன்று ஈனச் செய்கிறது’ எனவும் பொருள்படும்.