1இறைவனின் மைந்தரே!
மாட்சியையும் வலிமையையும்
ஆண்டவருக்கு உரித்தாக்குங்கள்.
ஆம்! ஆண்டவருக்கே
உரித்தாக்குங்கள்!
2ஆண்டவரின் பெயருக்கேற்ற மாட்சியை
அவருக்கு உரித்தாக்குங்கள்;
தூய மாட்சி இலங்கும்
ஆண்டவரை வழிபடுங்கள்.
3ஆண்டவரின் குரல்
கடல்மேல் ஒலிக்கின்றது;
மாட்சிமிகு இறைவன் முழங்குகின்றார்;
ஆண்டவர் நீர்த்திரள்களின்மேல்
வீற்றிருக்கின்றார்.
4ஆண்டவரின் குரல் வலிமைமிக்கது;
ஆண்டவரின் குரல் மாட்சிமிக்கது.
5ஆண்டவரின் குரல்
கேதுரு மரங்களை முறிக்கின்றது;
ஆண்டவர் லெபனோன் கேதுரு
மரங்களை முறித்துவிடுகின்றார்.
6லெபனோனின் மலையைக்
கன்றுக் குட்டியெனத் துள்ளச் செய்கின்றார்;
சிரியோன் மலையைக்
காட்டெருமைக் கன்றெனக்
குதிக்கச் செய்கின்றார்.
7ஆண்டவரின் குரல்
மின்னலைத் தெறிக்கச் செய்கின்றது;
8ஆண்டவரின் குரல் பாலைவனத்தை
அதிரச் செய்கின்றது;
ஆண்டவர் காதேசு பாலைவனத்தை
நடுங்கச் செய்கின்றார்.
9ஆண்டவரின் குரல் கருவாலி மரங்களை
முறித்து விடுகின்றது*;
காடுகளை வெறுமை ஆக்குகின்றது;
அவரது கோவிலில் உள்ள அனைவரும்
‛இறைவனுக்கு மாட்சி’ என்று
ஆர்ப்பரிக்கின்றனர்.
10ஆண்டவர் வெள்ளப் பெருக்கின்மீது
வீற்றிருக்கின்றார்;
ஆண்டவர் என்றென்றும்
அரசராக வீற்றிருக்கின்றார்.
11ஆண்டவர் தம் மக்களுக்கு
ஆற்றல் அளிப்பாராக!
ஆண்டவர் தம் மக்களுக்குச்
சமாதானம் அருள்வாராக!
ஆண்டவர் தம் மக்களுக்கு
ஆசி வழங்குவாராக!