1ஆண்டவரே என் ஒளி;
அவரே என் மீட்பு;
யாருக்கு நான் அஞ்சவேண்டும்?
ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்;
யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்?
2தீயவர் என் உடலை விழுங்க
என்னை நெருங்குகையில்,
என் பகைவரும் எதிரிகளுமான அவர்களே
இடறி விழுந்தார்கள்.
3எனக்கெதிராக ஒரு படையே
பாளையமிறங்கினும்,
என் உள்ளம் அஞ்சாது;
எனக்கெதிராகப் போர் எழுந்தாலும்,
நான் நம்பிக்கையோடிருப்பேன்.
4நான் ஆண்டவரிடம்
ஒரு விண்ணப்பம் செய்தேன்;
அதையே நான் நாடித் தேடுவேன்;
ஆண்டவரின் இல்லத்தில்
என் வாழ்நாள் எல்லாம்
நான் குடியிருக்க வேண்டும்,
ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்;
அவரது கோவிலில் அவரது
திருவுளத்தைக் கண்டறிய வேண்டும்.
5ஏனெனில், கேடுவரும் நாளில்
அவர் என்னைத்
தம் கூடாரத்தில் மறைத்து வைப்பார்;
தம் கூடாரத்தினுள்ளே
என்னை ஒளித்து வைப்பார்;
குன்றின்மேல் என்னைப்
பாதுகாப்பாய் வைப்பார்.
6அப்பொழுது, என்னைச் சுற்றிலுமுள்ள.
என் எதிரிகளுக்கு எதிரில்
நான் தலைநிமிரச் செய்வார்;
அவரது கூடாரத்தில் ஆர்ப்பரிப்புடன்
பலிகளைச் செலுத்துவேன்;
ஆண்டவரைப் புகழ்ந்து பாடல் பாடுவேன்.
7ஆண்டவரே, நான் மன்றாடும்போது
என் குரலைக் கேட்டருளும்;
என் மீது இரக்கங்கொண்டு
எனக்குப் பதிலளித்தருளும்.
8‛புறப்படு, அவரது முகத்தை நாடு’ என்றது
என் உள்ளம்; ஆண்டவரே,
உமது முகத்தையே நாடுவேன்.
9உமது முகத்தை எனக்கு மறைக்காதிரும்;
நீர் சினங்கொண்டு
அடியேனை விலக்கிவிடாதிரும்;
நீரே எனக்குத் துணை;
என் மீட்பராகிய கடவுளே,
என்னைத் தள்ளிவிடாதேயும்;
என்னைக் கைவிடாதிரும்.
10என் தந்தையும் தாயும்
என்னைக் கைவிட்டாலும்
ஆண்டவர் என்னை ஏற்றுக்கொள்வார்.
11ஆண்டவரே, உமது வழியை
எனக்குக் கற்பித்தருளும்;
என் எதிரிகளை முன்னிட்டு, என்னைச்
செம்மையான பாதையில் நடத்தும்.
12என் பகைவரின் விருப்பத்திற்கு
என்னைக் கையளித்துவிடாதிரும்;
ஏனெனில், பொய்ச்சாட்சிகளும்
வன்முறையை மூச்சாகக் கொண்டவர்களும்
எனக்கெதிராய்க் கிளம்பியுள்ளனர்.
13வாழ்வோரின் நாட்டினிலே
ஆண்டவரின் நலன்களைக்
காண்பேன் என்று
நான் இன்னும் நம்புகின்றேன்.
14நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு;
மன உறுதிகொள்;
உன் உள்ளம் வலிமை பெறட்டும்;
ஆண்டவருக்காகக் காத்திரு.