1ஆண்டவரே, நான் குற்றமற்றவன்
என்பதை அறிவியும்;
ஏனெனில், என் நடத்தை நேர்மையானது;
நான் ஆண்டவரை நம்பினேன்;
நான் தடுமாறவில்லை.
2ஆண்டவரே, என்னைச் சோதித்து
ஆராய்ந்து பாரும்;
என் மனத்தையும் உள்ளத்தையும்
புடமிட்டுப் பாரும்;
3ஏனெனில், உமது பேரன்பு
என் கண்முன் இருக்கின்றது;
உமக்கு உண்மையாக நடந்து வருகிறேன்.
4பொய்யரின் நடுவில்
நான் அமர்வதில்லை;
வஞ்சகரோடு நான் சேர்வதில்லை.
5தீயோரின் மன்றத்தை
நான் வெறுக்கின்றேன்;
பொல்லாரின் நடுவில்
நான் அமர்வதில்லை.
6மாசற்றவனாய்
என் கைகளைக் கழுவுகின்றேன்;
ஆண்டவரே, உம் பலிபீடத்தை
வலம் வருவேன்.
7உரத்த குரலில் உமக்கு
நன்றிப்பா பாடுகின்றேன்;
வியத்தகு உம் செயல்களை எல்லாம்
எடுத்துரைக்கின்றேன்;
8ஆண்டவரே,
நீர் குடிகொள்ளும் இல்லத்தை
நான் விரும்பிகின்றேன்;
உமது மாட்சி தங்கியுள்ள இடத்தை
நான் விரும்புகின்றேன்;
9பாவிகளுக்குச் செய்வதுபோல்
என் உயிரைப் பறித்து விடாதீர்!
கொலை வெறியர்களுக்குச் செய்வதுபோல்
என் வாழ்வை அழித்து விடாதீர்!
10அவர்கள் கைகளில் தீச்செயல்கள்;
அவர்கள் வலக்கையில்
நிறையக் கையூட்டு.
11நானோ மாசற்றவனாய்
நடந்து கொள்கின்றேன்;
என்னை மீட்டருளும்;
எனக்கு இரங்கியருளும்.
12என் கால்கள்
சமமான தளத்தில் நிற்கின்றன;
மாபெரும் சபையில்
ஆண்டவரைப் புகழ்ந்திடுவேன்.