ஆண்டவரின் திருச்சட்டம்

1மாசற்ற வழியில் நடப்போர்

பேறுபெற்றோர்;

ஆண்டவர் திருச்சட்டப்படி

நடப்போர் பேறுபெற்றோர்.

2அவர் தந்த ஒழுங்குமுறைகளைக்

கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்;

முழுமனத்தோடு அவரைத் தேடுவோர்

பேறுபெற்றோர்.

3அநீதி செய்யாமல் அவரது வழியில்

நடப்போர் பேறுபெற்றோர்.

4ஆண்டவரே!

நீர் உம் நியமங்களைத் தந்தீர்;

அவற்றை நாங்கள் முழுமையாய்க்

கடைப்பிடிக்க வேண்டும் என்றீர்.

5உம்முடைய விதிமுறைகளை

நான் கடைப்பிடிக்க,

என் நடத்தை உறுதியுள்ளதாய் இருந்தால்

எவ்வளவோ நலம்!

6உம் கட்டளைகளை எல்லாம்

கருத்தில் கொண்டிருந்தால்,

இகழ்ச்சியுறேன்;

7உம் நீதிநெறிகளை நான் கற்றுக்கொண்டு

நேரிய உள்ளத்தோடு உம்மைப் புகழ்வேன்.

8உம் விதிமுறைகளை

நான் கடைப்பிடிப்பேன்;

என்னை ஒருபோதும்

கைவிட்டுவிடாதேயும்.

திருச்சட்டப்படி நடத்தல்

9இளைஞர் தம் நடத்தையை

மாசற்றதாய்க் காத்துக் கொள்வது

எவ்வாறு? உம் வாக்கைக்

கடைப்பிடிப்பதால் அன்றோ?

10முழுமனத்தோடு

நான் உம்மைத் தேடுகின்றேன்;

உம் கட்டளைகளைவிட்டு

என்னை விலகவிடாதேயும்.

11உமக்கெதிராய்

நான் பாவம் செய்யாதவாறு

உமது வாக்கை

என் இதயத்தில் இருத்தியுள்ளேன்.

12ஆண்டவரே, நீர் போற்றுதற்கு உரியவர்;

எனக்கு உம் விதிமுறைகளைக்

கற்பித்தருளும்.

13உம் வாயினின்று வரும்

நீதித்தீர்ப்புகளை எல்லாம்

என் இதழால் எடுத்துரைக்கின்றேன்.

14பெருஞ்செல்வத்தில்

மகிழ்ச்சி அடைவதுபோல்,

நான் உம் ஒழுங்குமுறைகளின்படி

நடப்பதில் மகிழ்ச்சியுறுகின்றேன்.

15உம் நியமங்களைக் குறித்து

நான் சிந்திப்பேன்;

உம் நெறிகளில்

என் சிந்தையைச் செலுத்துவேன்;

16உம் விதிமுறைகளில்

நான் மகிழ்ச்சியுறுகின்றேன்;

உம் வாக்குகளை நான் மறக்கமாட்டேன்.

திருச்சட்டம் தரும் இன்பம்

17உம் அடியானுக்கு நன்மை செய்யும்;

அப்பொழுது, நான் உம் சொற்களைக்

கடைப்பிடித்து வாழ்வேன்.

18உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை

நான் கண்டுணருமாறு

என் கண்களைத் திறந்தருளும்.

19இவ்வுலகில் நான்

அன்னியனாய் உள்ளேன்;

உம் கட்டளைகளை

என்னிடமிருந்து மறைக்காதேயும்.

20எந்நேரமும்

உம் நீதிநெறிகளை முன்னிட்டு

என் உள்ளம் ஏங்கி உருகுகின்றது.

21செருக்குற்றோரைக் கண்டிக்கின்றிர்;

உம் கட்டளைகளைப் புறக்கணிப்போர்

சபிக்கப்பட்டவரே.

22பழிச்சொல்லையும், இழிவையும்

என்னிடமிருந்து அகற்றியருளும்;

ஏனெனில், உம் ஒழுங்குமுறைகளை

நான் கடைப்பிடித்துள்ளேன்.

23தலைவர்கள் ஒன்றுகூடி

எனக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தாலும்,

உம் ஊழியன்

உம்முடைய விதிமுறைகளைக் குறித்தே

சிந்திக்கின்றேன்.

24ஏனெனில், உம் ஒழுங்குமுறைகள்

எனக்கு இன்பம் தருகின்றன;

அவையே எனக்கு அறிவுரையாளர்.

திருச்சட்டத்தின்படி நடக்க உறுதி கொள்ளல்

25நான் புழுதியில் வீழ்ந்து கிடக்கின்றேன்;

உம் வாக்கின்படி

எனக்கு வாழ்வளித்தருளும்.

26என் வழிமுறைகளை

உமக்கு எடுத்துச் சொன்னேன்;

நீர் என் மன்றாட்டைக் கேட்டருளினீர்;

உம் விதிமுறைகளை

எனக்குக் கற்றுத்தாரும்.

27உம் நியமங்கள் காட்டும் வழியை

என்றும் உணர்த்தியருளும்;

உம் வியத்தகு செயல்கள்பற்றி

நான் சிந்தனை செய்வேன்.

28துயரத்தால் என் உள்ளம்

கலக்கமுற்றுள்ளது;

உமது வாக்கின்படி

என்னைத் திடப்படுத்தும்.

29பொய் வழியை

என்னைவிட்டு விலக்கியருளும்;

உமது திருச்சட்டத்தை

எனக்குக் கற்றுத்தாரும்.

30உண்மையின் பாதையை

நான் தேர்ந்துகோண்டேன்;

உம் நீதிநெறிகளை

என் கண்முன் நிறுத்தியுள்ளேன்.

31உம் ஒழுங்குமுறைகளை நான்

உறுதியாய்ப் பற்றிக்கொண்டுள்ளேன்;

ஆண்டவரே!

என்னை வெட்கமடையவிடாதேயும்.

32நீர் என் அறிவை விரிவாக்கும்போது,

உம் கட்டளைகள் காட்டும் வழியில்

நான் விரைந்து செல்வேன்.

நுண்ணறிவுக்காக வேண்டல்

33ஆண்டவரே! உம் விதிமுறைகள்

காட்டும் வழியை

எனக்குக் கற்றுத்தாரும்;

நான் அவற்றை

இறுதிவரை கடைப்பிடிப்பேன்.

34உம் திருச்சட்டத்தின்படி நடக்க

எனக்கு மெய்யுணர்வுதாரும்.

அதை நான் முழு உள்ளத்தோடு

கடைப்பிடிப்பேன்.

35உம் கட்டளைகள் காட்டும் நெறியில்

என்னை நடத்தும்; ஏனெனில்,

அதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.

36உம் ஒழுங்குமுறைகளில் என் இதயம்

நாட்டங்கொள்ளச் செய்யும்;

தன்னலத்தை நாடவிடாதேயும்.

37வீணானவற்றை நான் பாராதபடி

என் கண்களைத் திருப்பிவிடும்;

உம் வழிகளின் வாயிலாய்

எனக்கு வாழ்வளித்தருளும்.

38உமக்கு அஞ்சி நடப்போர்க்கு

அளித்த வாக்குறுதியை

உம் ஊழியனுக்கும் நிறைவேற்றியருளும்.

39என்னை அச்சுறுத்தும்

பழிச்சொல் எதற்கும்

என்னை உள்ளாக்காதேயும்; ஏனெனில்,

உம் நீதிநெறிகள் நலமார்ந்தவை.

40உம் நியமங்களைப்

பெரிதும் விரும்பினேன்;

நீர் நீதியுள்ளவராய் இருப்பதால்

எனக்கு வாழ்வளியும்.

திருச்சட்டத்தின் மீது நம்பிக்கை

41ஆண்டவரே! உமது பேரன்பு

எனக்குக் கிடைக்கச் செய்யும்;

உமது வாக்குறுதியின்படி

நீர் என்னை மீட்பீராக!

42அப்போது, என்னைப் பழிப்போர்க்கு

நான் ஏற்ற பதில் கூறுவேன்;

ஏனெனில், உமது வாக்கில்

எனக்கு நம்பிக்கை உண்டு.

43என் வாயினின்று உண்மையின் சொற்கள்

நீங்கவிடாதேயும்;

ஏனெனில், உம் நீதிநெறிகள்மீது

நான் நம்பிக்கை வைத்துள்ளேன்.

44உமது திருச்சட்டத்தை

நான் எப்போதும் கடைப்பிடிப்பேன்;

என்றென்றும் எக்காலமும்

அதைப் பின்பற்றுவேன்.

45உம் நியமங்களை நான் நாடியுள்ளதால்

பரந்த பாதையில்

தடையின்றி நான் நடப்பேன்.

46உம் ஒழுங்குமுறைகளைப் பற்றி

நான் அரசர் முன்னிலையிலும் பேசுவேன்;

வெட்கமுறமாட்டேன்.

47உம் கட்டளைகளில் நான்

மகிழ்ச்சியுறுகின்றேன்;

அவற்றைப் பெரிதும் விரும்புகின்றேன்.

48நான் விரும்பும் உம் கட்டளைகளை நோக்கி

என் கைகளை உயர்த்துகின்றேன்;

உம் விதிமுறைகளைப் பற்றி

நான் சிந்திப்பேன்.

திருச்சட்டத்தின் மீது நம்பிக்கை

49உம் ஊழியனுக்கு நீர் தந்த

வாக்கை நினைவுகூரும்;

அதனால் எனக்கு நம்பிக்கை அளித்தீர்.

50உம் வாக்கு என் துன்பத்தில்

எனக்கு ஆறுதல் அளிக்கின்றது;

ஏனெனில், அது எனக்கு

வாழ்வளிக்கின்றது.

51செருக்குற்றோர் என்னை

அளவின்றி ஏளனம் செய்கின்றனர்;

ஆனால், உம் திருச்சட்டத்தினின்று

நான் விலகவில்லை.

52ஆண்டவரே! முற்காலத்தில் நீர் அளித்த

நீதித் தீர்ப்புகளை

நான் நினைவு கூர்கின்றேன்;

அவற்றால் நான் ஆறுதல் அடைகின்றேன்.

53உம் திருச்சட்டத்தைக் கைவிடும்

தீயோரைப் பார்க்கும்போது

சீற்றம் என்னைக் கவ்விக்கொள்கின்றது.

54என் வாழ்க்கைப் பயணத்தில்

உம் விதிமுறைகள் எனக்குப்

புகழ்ப் பாக்களாய் உள்ளன.

55ஆண்டவரே! இரவிலும் நான்

உமது பெயரை நினைவு கூர்கின்றேன்;

உமது திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பேன்.

56நான் இந்நிலையை அடைந்துள்ளது

உமது நியமங்களைக்

கடைப்பிடிப்பதால்தான்.

திருச்சட்டத்தின் மீது ஆர்வம்

57ஆண்டவரே! நீரே எனக்குரிய பங்கு;

உம் சொற்களைக் கடைப்பிடிப்பதாக

நான் வாக்களித்துள்ளேன்.

58என் முழுமனத்தோடு

உம் திருமுகத்தை நாடினேன்;

உமது வாக்குறுதிக்கேற்ப எனக்கு

அருள்கூரும்.

59நான் நடக்கும் வழிகளை

நன்கு ஆய்ந்தேன்;

உம் ஒழுங்குமுறைகளின் பக்கமாய்

அடியெடுத்து வைத்தேன்.

60உம் கட்டளைகளைக் கடைப்பிடிக்க

நான் விரைகின்றேன்;

காலம் தாழ்த்தவில்லை.

61தீயோரின் கட்டுகள்

என்னை இறுக்குகின்றன;

ஆயினும், உம் திருச்சட்டத்தை

நான் மறவேன்.

62நீதிநிறை உம் தீர்ப்புகளைக் குறித்து,

உம்மைப் புகழ்ந்துபாட

நள்ளிரவில் எழுகின்றேன்.

63உமக்கு அஞ்சி நடப்போர் யாவர்க்கும்

உம் நியமங்களைக்

கடைப்பிடிப்போர்க்கும் நான் நண்பன்.

64ஆண்டவரே! உமது பேரன்பால்

பூவுலகு நிறைந்துள்ளது;

உம் விதிமுறைகளை

எனக்குக் கற்பியும்!

திருச்சட்டத்தின் பயன்

65ஆண்டவரே!

உமது வாக்குறுதிக்கேற்ப,

உம் ஊழியனுக்கு

நன்மையை செய்துள்ளீர்!

66நன் மதியையும் அறிவாற்றலையும்

எனக்குப் புகட்டும்;

ஏனெனில், உம் கட்டளைகள் மீது

நம்பிக்கை வைக்கின்றேன்.

67நீர் என்னைத் தண்டிக்குமுன்பு

நான் தவறிழைத்தேன்;

ஆனால், இப்போது

உம் வாக்கைக் கடைப்பிடிக்கின்றேன்.

68நீர் நல்லவர்! நன்மையே செய்பவர்;

எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பியும்.

69செருக்குற்றோர் என்னைப்பற்றிப்

பொய்களைப் புனைகின்றார்கள்;

நானோ முழுமனத்துடன்

உம் நியமங்களைக்

கடைப்பிடிக்கின்றேன்.

70அவர்கள் இதயம்

கொழுப்பேறிப் போயிற்று.

நானோ உம் திருச்சட்டத்தில்

மகிழ்ச்சியுறுகின்றேன்.

71எனக்குத் துன்பம் விளைந்தது

என் நன்மைக்காகவே;

அதனால், உம் விதிமுறைகளை

நான் கற்றுக்கொண்டேன்.

72நீர் திருவாய் மலர்ந்த சட்டம்,

ஆயிரக்கணக்கான பொன்,

வெள்ளிக் காசுகளைவிட

எனக்கு மேலானது.

திருச்சட்டத்தின் ஒழுங்குமுறை

73உம் கைகளே என்னை உருவாக்கின;

என்னை வடிவமைத்தன;

உம் கட்டளைகளை நான் கற்றுக்கொள்ள

எனக்கு மெய்யுணர்வு தாரும்.

74உமக்கு அஞ்சுவோர்,

உமது வாக்கை நான் நம்பினதற்காக

என்னைக் கண்டு மகிழ்ச்சியுறுவர்.

75ஆண்டவரே! உம் நீதித்தீர்ப்புகள்

நேரியவை என அறிவேன்;

நீர் என்னைச் சிறுமைப்படுத்தியது சரியே.

76எனக்கு ஆறுதலளிக்குமாறு

உமது பேரன்பு எனக்குக் கிடைக்கட்டும்;

உம் ஊழியனுக்கு

வாக்குறுதி அளித்தீர் அன்றோ!

77நான் பிழைத்திருக்கும்படி

உமது இரக்கம் என்னை வந்தடையட்டும்;

ஏனெனில், உமது திருச்சட்டமே

எனக்கு இன்பம்.

78செருக்குற்றோர் வெட்கிப்போவார்களாக!

அவர்கள் பொய்யுரை கூறி

என்னை ஒடுக்கினார்கள்;

நானோ உம் நியமங்கள் பற்றிச்

சிந்தனை செய்வேன்.

79உமக்கு அஞ்சிநடப்போர்,

உம் ஒழுங்குமுறைகளைப்பற்றிய

அறிவுடையோர்

என் பக்கம் திரும்புவராக!

80உம் நியமங்களைப் பொறுத்த மட்டில்

என் உள்ளம் மாசற்றதாய் இருப்பதாக!

அதனால், நான் வெட்கமுறேன்.

விடுதலைக்காக மன்றாடல்

81நீர் அளிக்கும் மீட்புக்காக

என் நெஞ்சம் ஏங்குகின்றது;

உம் வாக்கை நான் நம்புகின்றேன்.

82உம் வாக்குறுதியை எதிர்நோக்கி

என் கண்கள் பூத்துப்போயின;

‘எப்போது எனக்கு ஆறுதல் தருவீர்?’

என்று வினவினேன்.

83புகைபடிந்த தோற்பைபோல் ஆனேன்;

உம் விதிமுறைகளை நான் மறக்கவில்லை.

84உம் ஊழியன் எத்தனை நாள்

காத்திருக்கவேண்டும்?

என்னைக் கொடுமைப்படுத்துவோரை

என்று தண்டிப்பீர்?

85உமது திருச்சட்டப்படி நடக்காமல்,

செருக்குற்றோர் எனக்குக் குழிவெட்டினர்;

86உம் கட்டளைகள் எல்லாம்

நம்பத்தக்கவை;
அவர்கள் பொய்யுரை கூறி

என்னை ஒடுக்குகின்றனர்;

எனக்குத் துணை செய்யும்.

87அவர்கள் பூவுலகினின்று என் வாழ்வை

ஏறக்குறைய அழித்துவிட்டனர்;

நானோ உம் நியமங்களைக்

கைவிடவில்லை.

88உமது பேரன்புக்கேற்ப

என்னை உயிரோடு வைத்திரும்,

நீர் திருவாய்மலர்ந்த ஒழுங்கு முறைகளை

நான் கடைப்பிடிப்பேன்.

திருச்சட்டத்தின் மீது நம்பிக்கை

89ஆண்டவரே! என்றென்றைக்கும் உள்ளது

உமது வாக்கு;

விண்ணுலகைப்போல்

அது நிலைத்துள்ளது.

90தலைமுறை தலைமுறையாய் உள்ளது

உமது வாக்குப் பிறழாமை;

நீர் பூவுலகை உறுதியாய் இருக்கச் செய்தீர்,

அது நிலைபெற்றுள்ளது.

91உம் ஒழுங்குமுறைகளின்படியே

அனைத்தும் இன்றுவரை

நிலைத்துள்ளன.

ஏனெனில், அவை

உமக்கு ஊழியம் செய்கின்றன.

92உமது திருச்சட்டம் எனக்கு

இன்பம் தருவதாய் இல்லாதிருந்தால்

என் துன்பத்தில் நான்

மடிந்து போயிருப்பேன்.

93உம் நியமங்களை நான்

எந்நாளும் மறவேன்;

ஏனெனில், அவற்றைக்கொண்டு

என்னைப் பிழைக்க வைத்தீர்.

94உமக்கே நான் உரிமை;

என்னைக் காத்தருளும்;

ஏனெனில், உம் நியமங்களையே

நான் நாடியுள்ளேன்.

95தீயோர் என்னை அழிக்கக்

காத்திருக்கின்றனர்;

நானோ உம் ஒழுங்குமுறைகளை

ஆழ்ந்து சிந்திக்கின்றேன்.

96நிறைவான அனைத்தின் எல்லையையும்

நான் பார்த்துவிட்டேன்;

உமது கட்டளையின் நிறைவோ

எல்லை அற்றது.

திருச்சட்டத்தின் மீது அன்பு

97ஆண்டவரே! நான்

உமது திருச்சட்டத்தின்மீது

எத்துணைப் பற்றுக் கொண்டுள்ளேன்!

நாள் முழுவதும்

அதைப்பற்றியே சிந்திக்கின்றேன்.

98என் எதிரிகளைவிட என்னை

ஞானியாக்கியது உமது கட்டளை;

ஏனெனில், என்றென்றும்

அது என்னோடு உள்ளது.

99எனக்கு அறிவு புகட்டுவோர்

அனைவரினும் நான்

விவேகமுள்ளனவாய் இருக்கின்றேன்;

ஏனெனில், உம் ஒழுங்குமுறைகளையே

நான் சிந்திக்கின்றேன்;

100முதியோர்களைவிட

நான் நுண்ணறிவு பெற்றுள்ளேன்.

ஏனெனில், உம் நியமங்களைக்

கடைப்பிடிக்கின்றேன்.

101உம் வாக்கைக் கடைப்பிடிக்குமாறு

தீயவழி எதிலும் நான் கால் வைக்காது

பார்த்துக் கொள்கின்றேன்.

102உம் நீதிநெறிகளைவிட்டு

நான் விலகவில்லை;

ஏனெனில், நீர்தாமே

எனக்குக் கற்றுத் தந்தீர்.

103உம் சொற்கள் என் நாவுக்கு

எத்துணை இனிமையானவை!

என் வாய்க்குத்

தேனினும் இனிமையானவை.

104உம் நியமங்களால் நான்

நுண்ணறிவு பெறுகின்றேன்.

ஆகவேதான் பொய்வழிகள் அனைத்தையும்

நான் வெறுக்கின்றேன்.

திருச்சட்டத்தின் ஒளி

105என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு!

என் பாதைக்கு ஒளியும் அதுவே!

106நீதியான உம் நெறிமுறைகளை

நான் கடைப்பிடிப்பதாக ஆணையிட்டு

உறுதிமொழி தந்துள்ளேன்.

107ஆண்டவரே! மிக மிகத்

துன்புறுத்தப்படுகின்றேன்;

உம் வாக்குறுதியின்படி

என்னை உயிரோடு வைத்தருளும்.

108நான் மனமுவந்து வாயார

உம்மைப் புகழ்வதை ஆண்டவரே!

தயைகூர்ந்து ஏற்றுக்கொள்ளும்;

உம் நீதிநெறிகளை எனக்குக் கற்பியும்.

109நான் என்னுயிரைக்

கையில்வைத்துள்ளேன்;

ஆயினும், உம் திருச்சட்டத்தை

நான் மறவேன்.

110தீயோர் எனக்குக் கண்ணிவைத்தனர்;

ஆனால், உம் நியமங்களினின்று

நான் பிறழவில்லை.

111உம் ஒழுங்குமறைகளை என்றும்

என் உரிமைச் சொத்தாய்க்

கொண்டுள்ளேன்.

ஆகவே, அவை என் இதயத்தை

மகிழ்விக்கின்றன.

112உம் விதிமுறைகளைச்

செயல்படுத்துவதில் என் உள்ளம்,

என்றென்றும், இறுதிவரை

நாட்டம் கொண்டிருக்கும்.

திருச்சட்டம் தரும் பாதுகாப்பு

113இருமனத்தோரை நான் வெறுக்கின்றேன்;

உமது திருச்சட்டத்தின்மீது

பற்றுக்கொண்டுள்ளேன்.

114நீரே என் புகலிடம்; நீரே என் கேடயம்;

உமது வாக்கில்

நான் நம்பிக்கை வைக்கின்றேன்.

115தீயன செய்வோரே!

என்னை விட்டு விலகுங்கள்;

என் கடவுளின் கட்டளைகளை

நான் கடைப்பிடிப்பேன்;

116நான் பிழைக்குமாறு,

உமது வாக்குறுதிக்கேற்ப

என்னைத் தாங்கியருளும்;

எனது நம்பிக்கை

வீண்போகவிடாதேயும்.

117என்னைத் தாங்கிக்கொள்ளும்;

நான் மீட்புப் பெறுவேன்;

எந்நாளும் உம் விதிமுறைகளைக்

கருத்தில் கொண்டிருப்பேன்.

118உம் விதிமுறைகளைவிட்டு

விலகுவோர் அனைவரையும்

நீர் ஒதுக்கித் தள்ளுகின்றீர்;

அவர்களின் சூழ்ச்சிகள்

வீணாய்ப் போகும்.

119பூவுலகின் பொல்லார் அனைவரையம்

நீர் களிம்பெனக் கருதுகின்றீர்;

ஆகவே, நான் உம் ஒழுங்குமுறைகள்

மீது பற்றுக்கொண்டுள்ளேன்.

120உம்மீது கொண்டுள்ள அச்சத்தால்

என் உடல் சிலிர்க்கின்றது;

உம் நீதித்தீர்ப்புகளை முன்னிட்டு

நான் அஞ்சி நடுங்குகின்றேன்.

திருச்சட்டத்தின்படி நடத்தல்

121நீதியும் நேர்மையும் ஆனவற்றையே

செய்துள்ளேன்;

என்னை ஒடுக்குவோர் கையில்

என்னை விட்டுவிடாதேயும்.

122உம் ஊழியனின் நலத்தை

உறுதிப்படுத்தும்;

செருக்குற்றோர் என்னை

ஒடுக்கவிடாதேயும்.

123நீர் தரும் விடுதலையையும்

உமது நீதியான

வாக்குறுதிகளையும் எதிர்பார்த்து,

என் கண்கள் பூத்துப்போயின.

124உம் பேரன்பிற்கேற்ப

உம் ஊழியனுக்குச் செய்தருளும்;

உம் விதிமுறைகளை எனக்குக் கற்பியும்.

125உம் ஊழியன் நான்,

எனக்கு நுண்ணறிவு புகட்டும்;

அப்போது உம் ஒழுங்குமுறைகளை

அறிந்துகொள்வேன்.

126ஆண்டவரே! நீர் செயலாற்றும்

நேரம் வந்துவிட்டது;

உம் திருச்சட்டம் மீறப்பட்டுவிட்டது.

127ஆகவே, பொன்னிலும்

பசும்பொன்னிலும் மேலாக

உம் கட்டளைகளை விரும்புகின்றேன்.

128உம் நியமங்களை எல்லாம்

நீதியானவை என்று

ஏற்றுக்கொண்டேன்;

பொய்யான வழி அனைத்தையும்

வெறுக்கின்றேன்.

திருச்சட்டத்தின் மீது ஆவல்

129உம் ஒழுங்குமுறைகள் வியப்புக்குரியவை;

ஆகவே, நான் அவற்றைக்

கடைப்பிடித்து வருகின்றேன்.

130உம் சொற்களைப்பற்றிய விளக்கம்

ஒளி தருகின்றது;

அது பேதைகளுக்கு

நுண்ணறிவு ஊட்டுகிறது.

131வாயை ‛ஆ’வெனத் திறக்கின்றேன்;

பெருமூச்சு விடுகின்றேன்;

ஏனெனில், உம் கட்டளைகளுக்காக

ஏங்குகின்றேன்.

132உம் பெயரின்மீது பற்றுக்கொண்டோருக்கு

நீர் வழக்கமாய்ச் செய்வதுபோல்,

என் பக்கம் திரும்பி

எனக்கும் இரங்கும்!

133உமது வாக்கில் என் காலடிகளை

நிலைப்படுத்தும்!

தீயது எதுவும் என்னை

மேற்கொள்ளவிடாதேயும்!

134மனிதர் செய்யும் கொடுமையினின்று

என்னை விடுவியும்!

உம் நியமங்களை நான்

கடைப்பிடிப்பேன்.

135உம் ஊழியன்மீது உமது முகஒளி

வீசச் செய்யும்!

உம் விதிமுறைகளை எனக்குக்

கற்பித்தருளும்.

136உமது திருச்சட்டத்தைப்

பலர் கடைப்பிடிக்காததைக் கண்டு,

என் கண்களினின்று நீர்

அருவியாய் வழிந்தது.

திருச்சட்டத்தின் ஒழுங்குமுறை

137ஆண்டவரே! நீர் நீதி உள்ளவர்;

உம் நீதிநெறிகள் நேர்மையானவை.

138நீர் தந்த ஒழுங்குமுறைகள் நீதியானவை;

அவை முற்றிலும் நம்பத்தக்கவை.

139என் பகைவர் உம் வார்த்தைகளை

மறந்துவிட்டதால்,

அவற்றின்மீது நான் கொண்டுள்ள

தணியாத ஆர்வம்

என்னை எரித்துவிடுகின்றது.

140உம் வாக்குறுதி முற்றிலும் சரியென மெய்ப்பிக்கப்பட்டுள்ளது,

உம் ஊழியன் அதன்மீது

பற்றுக்கொண்டுள்ளான்.

141சிறியன் அடியேன்!

இழிவுக்கு உள்ளானவன்;

ஆனால், உம் நியமங்களை மறக்காதவன்.

142உமது நீதி என்றுமுள நீதி;

உமது திருச்சட்டம் என்றும் நம்பத்தக்கது.

143துன்பமும் கவலையும்

என்னைப் பற்றிக்கொண்டன;

எனினும் உம் கட்டளைகள்

என்னை மகிழ்விக்கின்றன.

144உம் ஒழுங்குமுறைகள்

எக்காலமும் நீதியுள்ளவை;

நான் வாழுமாறு

எனக்கு நுண்ணறிவு புகட்டும்.

விடுதலைக்காக மன்றாடல்

145முழு இதயத்தோடு

உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்;

ஆண்டவரே!

என் மன்றாட்டைக் கேட்டருளும்;

உம் விதிமுறைகளை நான் பின்பற்றுவேன்.

146உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்;

என்னைக் காத்தருளும்;

உம் ஒழுங்குமுறைகளை

நான் கடைப்பிடித்தேன்.

147வைகறையில் நான் உம்மிடம் வந்து

உதவிக்காக மன்றாடுகின்றேன்;

உம் சொற்களில்

நம்பிக்கை வைக்கின்றேன்.

148உம் வாக்குறுதிகளைச் சிந்திப்பதற்காக,

இரவுச் சாம நேரங்களில்

நான் கண்விழித்துள்ளேன்.

149ஆண்டவரே! உமது பேரன்பிற்கேற்ப

என் குரலைக் கேட்டருளும்;

உமது நீதியின்பபடி

என்னுயிரைக் காத்தருளும்.

150சதிசெய்து ஒடுக்குவோர்

என்னை நெருங்கி வருகின்றனர்;

உம் திருச்சட்டத்துக்கும் அவர்களுக்கும்

வெகு தொலைவு.

151ஆண்டவரே! நீர் என் அருகில்

இருக்கின்றீர்;

உம் கட்டளைகள் எல்லாம் நிலையானவை.

152அவற்றை நீர் எக்காலத்திற்குமாக

ஏற்படுத்தினீர் என்று நீர் தந்த

ஒழுங்குமுறைகளினின்று

முன்பே நான் அறிந்திருக்கின்றேன்.

உதவிக்காக மன்றாடல்

153என் துன்ப நிலையைப் பார்த்து

என்னை விடுவித்தருளும்;

ஏனெனில், உமது திருச்சட்டத்தை

நான் மறக்கவில்லை.

154எனக்காக வழக்காடி

என்னை மீட்டருளும்;

உமது வாக்குக்கேற்றபடி

என் உயிரைக் காத்தருளும்.

155தீயோர்க்கு மீட்பு

வெகு தொலைவில் உள்ளது;

ஏனெனில், அவர்கள்

உம் விதிமுறைகளைத் தேடுவதில்லை.

156ஆண்டவரே! உம் இரக்கம் மிகப் பெரியது;

உம் நீதித்தீர்ப்புகளின்படி

எனக்கு வாழ்வளியும்.

157என்னைக் கொடுமைப்படுத்துவோரும்

பகைப்போரும் பலர்;

ஆனால், உம் ஒழுங்குமுறைகளை விட்டு

நான் தவறுவதில்லை.

158துரோகம் செய்வோரை

அருவருப்புடன் பார்க்கின்றேன்;

ஏனெனில், அவர்கள்

உம் வாக்கைக் கடைப்பிடிப்பதில்லை.

159ஆண்டவரே! நான் உம் கட்டளைகள்மீது

எத்துணைப் பற்றுக்கொண்டுள்ளேன்

என்பதைப் பாரும்;

உம் பேரன்பிற்கேற்ப

எனக்கு வாழ்வளியும்.

160உண்மையே உமது வார்த்தையின்

உட்பொருள்;

நீதியான உம் நெறிமுறைகள் எல்லாம்

என்றும் நிலைத்துள்ளன.

திருச்சட்டத்தின்மீது பேரன்பு

161தலைவர்கள் என்னைக் காரணமின்றிக்

கொடுமைப்படுத்துகின்றனர்;

ஆனால், உம் வாக்கை முன்னிட்டு

என் உள்ளம் நடுங்குகின்றது.

162திரண்ட கொள்ளைப் பொருளை

அடைந்தவன் மகிழ்வதுபோல

உமது வாக்குறுதியில்

நான் மகிழ்ச்சியுறுகின்றேன்.

163பொய்யை வெறுத்து ஒதுக்குகின்றேன்;

உமது திருச்சட்டத்தின்மீது

பற்றுக்கொண்டுள்ளேன்.

164நீதியான உம் நெறிமுறைகளைக் குறித்து

ஒரு நாளைக்கு ஏழுமுறை

உம்மைப் புகழ்கின்றேன்.

165உமது திருச்சட்டத்தை விரும்புவோர்க்கு

மிகுதியான நல்வாழ்வு உண்டு;

அவர்களை நிலைகுலையச் செய்வது

எதுவுமில்லை.

166ஆண்டவரே! நீர் அளிக்கும் மீட்புக்காக

நான் காத்திருக்கின்றேன்;

உம் கட்டளைகளைச்

செயல்படுத்துகின்றேன்.

167உம் ஒழுங்குமுறைகளை

நான் கடைப்பிடித்து வருகின்றேன்;

நான் அவற்றின்மீது

பற்றுக்கொண்டுள்ளேன்.

168உம் நியமங்களையும்

ஒழுங்குமுறைகளையும்

நான் கடைப்பிடிக்கின்றேன்;

ஏனெனில், என் வழிகள் எல்லாம்

உமக்குத் தெரிந்தவை.

உதவிக்காக மன்றாடல்

169ஆண்டவரே! என் வேண்டுதல்

உம் திருமுன் வருவதாக!

உமது வாக்குறுதிக்கேற்ப

எனக்கு நுண்ணறிவு புகட்டும்.

170என் மன்றாட்டு உம் திருமுன் வருவதாக!

உம் வாக்குறுதியின்படி

என்னை விடுவியும்.

171உம் விதிமுறைகளை

எனக்கு நீர் கற்பிப்பதால்,

என் இதழ்களினின்று திருப்புகழ்

பொங்கிவரும்.

172உம் வாக்கைக் குறித்து

என் நா பாடுவதாக!

ஏனெனில், உம் கட்டளைகள்

எல்லாம் நீதியானவை.

173உம் கரம் எனக்குத்

துணையாய் இருப்பதாக!

ஏனெனில், உம் நியமங்களை

நான் தேர்ந்தெடுத்தேன்.

174ஆண்டவரே! உம்மிடமிருந்து

வரும் மீட்பை

நான் நாடுகின்றேன்;

உமது திருச்சட்டத்தில்

நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.

175உயிர் பிழைத்து நான்

உம்மைப் புகழ்வேனாக!

உம் நீதி நெறிகள் எனக்குத்

துணைபுரிவனவாக!

176காணாமல்போன ஆட்டைப் போல்

நான் அலைந்து திரிகின்றேன்;

உம் ஊழியனைத் தேடிப்பாரும்;

ஏனெனில், உம் கட்டளைகளை

நான் மறக்கவில்லை.


119 எபிரேய அகரவரிசைப் பாடல்.