1இரக்கத்தையும் நீதியையும்
குறித்துப் பாடுவேன்;
ஆண்டவரே, உமக்கே புகழ்
சாற்றிடுவேன்.
2மாசற்ற வழியே நடப்பதில்
நான் கருத்தாயிருக்கிறேன்;
எப்பொழுது நீர் என்னிடம் வருவீர்?
தூய உள்ளத்தோடு
என் இல்லத்தில் வாழ்வேன்.
3இழிவான எதையும்
என் கண்முன் வைக்கமாட்டேன்.
நெறிதவறியவரின் செயலை
நான் வெறுக்கின்றேன்;
அது என்னைப் பற்றிக்கொள்ளாது.
4வஞ்சக நெஞ்சம் எனக்கு
வெகு தொலைவில் இருக்கும்;
தீதான எதையும் நான் அறியேன்.
5தமக்கு அடுத்திருப்போரை
மறைவாகப் பழிப்போரை
நான் ஒழிப்பேன்;
கண்களில் இறுமாப்பும்
உள்ளத்தில் செருக்கும்
உள்ளோரின் செயலை
நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்;
6நாட்டில் நம்பிக்கைக்குரியோரைக்
கண்டுபிடித்து
என்னோடு வாழச் செய்வேன்;
நேரிய வழியில் நடப்போரை
எனக்குப் பணிவிடை புரியச் செய்வேன்;
7வஞ்சனை செய்வோருக்கு
என் மாளிகையில் இடமில்லை.
பொய் உரைப்போர்
என் கண்முன் நிலைப்பதில்லை.
8நாட்டிலுள்ள பொல்லார் அனைவரையும்
நாள்தோறும் அழிப்பேன்;
ஆண்டவரின் நகரினின்று
தீங்கிழைப்போரை ஒழிப்பேன்.