அரசரின் வாக்குறுதி
(தாவீதின் புகழ்ப்பா)

1இரக்கத்தையும் நீதியையும்

குறித்துப் பாடுவேன்;

ஆண்டவரே, உமக்கே புகழ்

சாற்றிடுவேன்.

2மாசற்ற வழியே நடப்பதில்

நான் கருத்தாயிருக்கிறேன்;

எப்பொழுது நீர் என்னிடம் வருவீர்?

தூய உள்ளத்தோடு

என் இல்லத்தில் வாழ்வேன்.

3இழிவான எதையும்

என் கண்முன் வைக்கமாட்டேன்.

நெறிதவறியவரின் செயலை

நான் வெறுக்கின்றேன்;

அது என்னைப் பற்றிக்கொள்ளாது.

4வஞ்சக நெஞ்சம் எனக்கு

வெகு தொலைவில் இருக்கும்;

தீதான எதையும் நான் அறியேன்.

5தமக்கு அடுத்திருப்போரை

மறைவாகப் பழிப்போரை

நான் ஒழிப்பேன்;

கண்களில் இறுமாப்பும்

உள்ளத்தில் செருக்கும்

உள்ளோரின் செயலை

நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்;

6நாட்டில் நம்பிக்கைக்குரியோரைக்

கண்டுபிடித்து

என்னோடு வாழச் செய்வேன்;

நேரிய வழியில் நடப்போரை

எனக்குப் பணிவிடை புரியச் செய்வேன்;

7வஞ்சனை செய்வோருக்கு

என் மாளிகையில் இடமில்லை.

பொய் உரைப்போர்

என் கண்முன் நிலைப்பதில்லை.

8நாட்டிலுள்ள பொல்லார் அனைவரையும்

நாள்தோறும் அழிப்பேன்;

ஆண்டவரின் நகரினின்று

தீங்கிழைப்போரை ஒழிப்பேன்.