துன்புறுவோரே தம் துயர் அறிவார்

1யோபு கூறிய பதிலுரையாவது:

2ஓ! என் வேதனைகள்

உண்மையாகவே நிறுக்கப்பட்டு,

என் இன்னல்கள் அனைத்தும்

சீர்தூக்கப்படுமானால் நலமாயிருக்குமே!

3கடற்கரை மணலிலும் இப்போது அவை

கனமானவை; பதற்றமான என்

சொற்களுக்குக் காரணமும் அதுவே;

4எல்லாம் வல்லவரின் அம்புகள்

என்னில் தைத்துள்ளன; அவற்றின் நஞ்சு

என் உயிரைக் குடிக்கின்றது;

கடவுளின் அச்சுறுத்தல்கள்

எனக்கெதிராய் அணிவகுத்துள்ளன.

5காட்டுக் கழுதைக்குப் புல் இருக்க,

அது கனைக்குமா?

காளைக்குத் தீனி இருக்க, அது கத்துமா?

6சுவையற்றது உப்பின்றி உண்ணப்படுமா?

துப்பும் எச்சிலில் சுவை இருக்குமா?

7அவற்றைத் தொட என் நெஞ்சம் மறுக்கிறது;

அவை எனக்கு அருவருப்புத்தரும் உணவாமே!

8ஓ! என் வேண்டுதலுக்கு அருள்பவர் யார்?

நான் ஏங்குவதை

இறைவன் ஈந்திடமாட்டாரா?

9அவர் என்னை நசுக்கிவிடக்கூடாதா?

தம் கையை நீட்டி எனைத் துண்டித்திடலாகாதா?

10அதுவே எனக்கு ஆறுதலாகும்;

அழிக்கும் அல்லலிலும் அகமகிழ்வேன்;

தொடரும் துயரிலும் துள்ளி மகிழ்வேன்;

ஏனெனில் தூயவரின் சொற்களை

மறுத்தேனில்லை.

11நான் இன்னும் பொறுத்திருக்க வலிமை ஏது?

என நெஞ்சம் காத்திருக்க நோக்கமேது?

12என் வலிமை கல்லின் வலிமையோ?

என் சதை வெண்கலத்தாலானதோ?

13இதோ! என்னில் உதவி ஏதுமில்லை;

என்னிலிருந்து உரம் நீக்கப்பட்டது.

14அடுத்திருப்போர்க்கு கனிவு காட்டாதோர்

எல்லாம் வல்லவரையே புறக்கணிப்போர்.

15காய்ந்துவிடும் காட்டாற்றுக்

கண்ணிகள் போலும் சிற்றாறுகள்போலும்

வஞ்சினத்தனர் என் உறவின் முறையார்.

16அவற்றில் பனிக்கட்டி உருகிச் செல்லும்;

அவற்றின் மேற்பகுதியை

உறைபனி மூடி நிற்கும்.

17வெப்பக் காலத்திலோ அவை

உருகி மறைந்துபோம்; வெயில் காலத்திலோ

அவை இடந்தெரியாது ஒழியும்.

18வணிகர் கூட்டம் தம் வழியை மாற்றுகின்றது;

பாலையில் அலைந்து தொலைந்து மடிகின்றது.

19தேடி நிற்கின்றனர் தேமாவின் வணிகர்;

நாடி நிற்கின்றனர் சேபாவின் வழிப்போக்கர்.

20அவர்கள் நம்பியிருந்தனர்;

ஆனால், ஏமாற்றமடைகின்றனர்;

அங்கு வந்தடைந்தனர்;

ஆனால் திகைத்துப் போகின்றனர்.

21இப்போது நீங்களும் எனக்கு

அவ்வாறே ஆனீர்கள்;

என் அவலம் கண்டீர்கள்;

அஞ்சி நடுங்குகின்றீர்கள்.

22எனக்கு அன்பளிப்புத் தாரும் என்றோ,

உம் செல்வத்திலிருந்து

என் பொருட்டுக் கையூட்டுக் கொடும்

என்றோ சொன்னதுண்டா?

23எதிரியின் கையினின்று

என்னைக் காப்பாற்றும் என்றோ,

கொடியவர் பிடியினின்று

என்னை மீட்டருளும் என்றோ

நான் எப்போதுதாவது வேண்டியதுண்டா?

24அறிவு புகட்டுக! அமைதியடைவேன்;

என்ன தவறிழைத்தேன்? எடுத்துக்காட்டுக!

25நேர்மையான சொற்கள்

எத்துணை ஆற்றலுள்ளவை? ஆனால்,

நீர் மெய்ப்பிப்பது எதை மெய்ப்பிக்கிறது?

26என் வார்த்தைகளைக் கண்டிக்க

எண்ணலாமா? புலம்புவோரின்

சொற்கள் காற்றுக்கு நிகராமா?

27திக்கற்றோர் மீது சீட்டுப் போடுவீர்கள்;

நண்பர்மீதும் பேரம் பேசுவீர்கள்.

28பரிவாக இப்பொழுது என்னைப் பாருங்கள்;

உங்கள் முகத்திற்கெதிரே

உண்மையில் பொய் சொல்லேன்,

29போதும் நிறுத்துங்கள்;

அநீதி செய்ய வேண்டாம்!

பொறுங்கள்! நீதி இன்னும் என் பக்கமே;

30என் நாவில் அநீதி உள்ளதா? என்

அண்ணம் சுவையானதைப் பிரித்துணராதா?