1இப்போது கூப்பிட்டுப்பாரும்!
யார் உமக்குப் பதிலுரைப்பார்?
எந்தத் தூயவரிடம் துணை தேடுவீர்?
2உண்மையில், அறிவிலியைத்தான்
எரிச்சல் கொல்லும்;
பேதையைத் தான் பொறாமை சாகடிக்கும்,
3அறிவிலி வேரூன்றுவதை
நானே கண்டேன்;
ஆனால் உடனே அவன் உறைவிடத்தில்
வெம்பழி விழுந்தது,
4அவனுடைய மக்களுக்குப்
பாதுகாப்பு இல்லை; ஊர்மன்றத்தில்
அவர்கள் நொறுக்கப்படுகின்றனர்;
மீட்பார் எவரும் அவர்க்கு இல்லாது போயினர்.
5அவனது அறுவடையைப் பசித்தவர் உண்பர்;
முள்ளுக்கு நடுவிலுள்ளதையும்
அவர்கள் பறிப்பர்; பேராசைக்காரர்
அவன் சொத்துக்காகத் துடிப்பர்.
6ஏனெனில், புழுதியினின்று இடுக்கண் எழாது;
மண்ணினின்று இன்னல் விளையாது.
7நெருப்புச்சுடர் மேல்நோக்கி எழுவதுபோல,
துன்பத்திற்கென்றே தோன்றினர் மனிதர்.
8ஆனால், நான் கடவுளையே நாடுவேன்;
அவரிடம் மட்டுமே என் வாழ்க்கை ஒப்புவிப்பேன்.
9ஆராய முடியாப் பெரியனவற்றையும்
எண்ணிலடங்கா வியக்கத்
தக்கனவற்றையும் செய்பவர் அவரே.
10மண் முகத்தே மழையைப் பொழிபவரும்
வயல் முகத்தே நீரைத் தருபவரும் அவரே.
11அவர் தாழ்ந்தோரை
மேலிடத்தில் அமர்த்துகின்றார்;
அழுவோரைக் காத்து உயர்த்துகின்றார்.
12வஞ்சகரின் திட்டங்களைத் தகர்க்கின்றார்;
அவர்களின் கைளோ ஒன்றையும் சாதிக்கமாட்டா.
13ஞானிகளை அவர்தம் சூழ்ச்சியில்
சிக்க வைக்கின்றார்;
வஞ்சகரின் திட்டங்கள் வீழ்த்தப்படுகின்றன;
14அவர்கள் பகலில் இருளைக் காண்கின்றனர்;
நண்பகலிலும் இரவில்போல்
தடுமாறுகின்றனர்.
15அவர் வறியவரை அவர்களின்
வாயெனும் வாளினின்று காக்கின்றார்;
எளியவரை வலியவரின்
கையினின்று மீட்கின்றார்.
16எனவே, நலிந்தவர்க்கு நம்பிக்கை உண்டு;
அநீதி தன் வாயைப் பொத்திக்கொள்ளும்.
17இதோ! கடவுள் திருத்தும் மனிதர்
பேறு பெற்றோர்; ஆகவே,
வல்லவரின் கண்டிப்பை வெறுக்காதீர்.
18காயப்படுத்தினாலும்
கட்டுப்போடுபவர் அவரே;
அடித்தாலும் ஆற்றுகின்ற கை அவரதே.
19ஆறு வகை அல்லல்களினின்றும்
அவர் உம்மை மீட்பார்;
ஏழாவதும் உமக்கு இன்னல் தராது.
20பஞ்சத்தில் சாவினின்றும்
சண்டையில் வாள் முனையினின்றும்
உம்மை விடுவிப்பார்.
21நாவின் சொல்லடியினின்றும்
நீர் மறைக்கப்படுவீர்;
நாசமே வந்து விழுந்தாலும் நடுங்கமாட்டீர்.
22அழிவிலும் பஞ்சத்திலும் நீர் நகுவீர்;
மண்ணக விலங்குகளுக்கு மருளீர்.
23வயல்வெளிக் கற்களோடு
உம் உடன்படிக்கை இருக்கும்;
காட்டு விலங்குகளோடும்
நீர் அமைதியில் வாழ்வீர்.
24உம் கூடாரத்தில் அமைதியைக் காண்பீர்;
உம் மந்தையைச் சென்று காண்கையில்
ஒன்றும் குறைவுபடாதிருக்கும்.
25உமது வித்து பெருகுவதையும்,
உமது வழிமரபினர் நிலத்துப்
புற்களைப் போன்றிருப்பதையும் அறிவீர்.
26பழுத்த வயதில் தளர்வின்றிக்
கல்லறை செல்வீர்,
பருவத்தே மேலோங்கும் கதிர்மணி போல்.
27இதுவே யாம் கண்டறிந்த உண்மை!
செவிகொடுப்பீர்; நீவிரே கண்டுணர்வீர்.