1கண்களோடு நான் உடன்படிக்கை
செய்துகொண்டேன்; பின்பு,
கன்னி ஒருத்தியை எப்படி நோக்குவேன்?
2வானின்று கடவுள் வழங்கும் பங்கென்ன?
விசும்பினின்று எல்லாம் வல்லவர்
விதிக்கும் உரிமையென்ன?
3தீயோர்க்கு வருவது கேடு அல்லவா?
கொடியோர்க்கு வருவது அழிவு அல்லவா?
4என் வழிகளை அவர் பார்ப்பதில்லையா?
என் காலடிகளை அவர்
கணக்கிடுவதில்லையா?
5பொய்ம்மையை நோக்கி நான் போயிருந்தால்,
வஞ்சகத்தை நோக்கி
என் காலடி விரைந்திருந்தால்,
6சீர்தூக்கும் கோலில் எனை அவர்
நிறுக்கட்டும்; இவ்வாறு கடவுள்
என் நேர்மையை அறியட்டும்.
7நெறிதவறி என் காலடி போயிருந்தால்,
கண்ணில் பட்டதையெல்லாம்
என் உள்ளம் நாடியிருந்தால்,
என் கைகளில் கறையேதும் படிந்திருந்தால்,
8நான் விதைக்க,
இன்னொருவர் அதனை உண்ணட்டும்;
எனக்கென வளர்பவை
வேரொடு பிடுங்கப்படட்டும்.
9பெண்ணில் என் மனம்
மயங்கியிருந்திருந்தால்;
பிறரின் கதவருகில் காத்துக்கிடந்திருந்தால்,
10என் மனைவி
மற்றொருவனுக்கு மாவரைக்கட்டும்;
மற்றவர்கள் அவளோடு படுக்கட்டும்.
11ஏனெனில், அது தீச்செயல்;
நடுவரின் தண்டனைக்குரிய பாதகம்.
12ஏனெனில் படுகுழிவரை சுட்டெரிக்கும்
நெருப்பு அது; வருவாய் அனைத்தையும்
அடியோடு அழிக்கும் தீ அது.
13என் வேலைக்காரனோ, வேலைக்காரியோ
எனக்கெதிராய் வழக்குக் கொணரும்போது
நான் அதைத் தட்டிக் கழித்திருந்தால்,
14இறைவன் எனக்கெதிராய் எழும்போது
நான் என்ன செய்வேன்?
அவர் என்னிடம் கணக்குக் கேட்டால்
நான் என்ன பதிலளிப்பேன்?
15கருப்பையில் என்னை உருவாக்கியவர்தாமே
அவனையும் உருவாக்கினார்.
கருப்பையில் எங்களுக்கு வடிவளித்தவர்
அவர் ஒருவரே அல்லவோ?
16ஏழையர் விரும்பியதை ஈய
இணங்காது இருந்தேனா?
கைப்பெண்டிரின் கண்கள்
பூத்துப்போகச் செய்தேனா?
17என் உணவை நானே தனித்து உண்டேனா?
தாய் தந்தையற்றோர்
அதில் உண்ணாமல் போயினரா?
18ஏனெனில், குழந்தைப் பருவமுதல்
அவர் என்னைத் தந்தைபோல் வளர்த்தார்
; என் தாய்வயிற்றிலிருந்து என்னை வழி நடத்தினார்.
19ஆடையில்லாமல் எவராவது அழிவதையோ
போர்வையின்றி ஏழை எவராவது இருந்ததையோ
பார்த்துக்கொண்டு இருந்தேனா?
20என் ஆட்டுமுடிக் கம்பளியினால்
குளிர்போக்கப்பட்டு, அவர்களின் உடல்
என்னைப் பாராட்டவில்லையா?
21எனக்கு மன்றத்தில் செல்வாக்கு உண்டு
எனக்கண்டு, தாய் தந்தையற்றோர்க்கு
எதிராகக் கைஓங்கினேனா?
22அப்படியிருந்திருந்தால், என் தோள்மூட்டு
தோளிலிருந்து நெகிழ்வதாக!
முழங்கை மூட்டு முறிந்து கழல்வதாக!
23ஏனெனில், இறைவன் அனுப்பும் இடர்
எனக்குப் பேரச்சம்; அவர் மாட்சிக்குமுன்
என்னால் எதுவும் இயலாது.
24தங்கத்தில் நான் நம்பிக்கை வைத்திருந்தேனாகில்,
‘பசும்பொன் என்உறுதுணை ‘ என்று பகர்ந்திருப்பேனாகில்,
25செல்வப் பெருக்கினால், அல்லது
கை நிறையப் பெற்றதால்
. நான் மகிழ்திருப்பேனாகில்,
26சுடர்விடும் கதிரவனையும்
ஒளியில் தவழும் திங்களையும் நான் கண்டு,
27என் உள்ளம் மறைவாக மயங்கியிருந்தால்,
அல்லது, என் வாயில் கை வைத்து
முத்தமிட்டிருந்தால்,
28அதுவும் நடுவர் தீர்ப்புக்குரிய.
பழியாய் இருக்கும்; ஏனெனில்,
அது உன்னத இறைவனை நான் மறுப்பதாகும்.
29என்னை வெறுப்போரின் அழிவில்
நான் மகிழ்ந்ததுண்டா? அல்லது
அவர்கள் இடர்படும் போது இன்புற்றதுண்டா?
30சாகும்படி அவர்களைச் சபித்து,
என் வாய் பாவம் செய்ய நான் விடவில்லை.
31‘இறைச்சி உண்டு நிறைவு அடையாதவர்
யாரேனும் உண்டோ?’ என்று
என் வீட்டார் வினவாமல் இருந்ததுண்டா?
32வீதியில் வேற்றார் உறங்கியதில்லை;
ஏனெனில், வழிப்போக்கருக்கு
என் வாயிலைத் திறந்து விட்டேன்.
33என் தீச்செயலை உள்ளத்தில் புதைத்து,
என் குற்றங்களை மானிடர்போல்
மறைத்ததுண்டா?
34பெருங்கும்பலைக் கண்டு நடுங்கி,
உறவினர் இகழ்ச்சிக்கு அஞ்சி,
நான் வாளாவிருந்ததுண்டா?
கதவுக்கு வெளியே வராதிருந்தது உண்டா?
35என் வழக்கைக் கேட்க ஒருவர் இருந்தால்
எத்துணை நன்று! இதோ!
என் கையொப்பம்; எல்லாம் வல்லவர்
எனக்குப் பதில் அளிக்கட்டும்!
என் எதிராளி வழக்கை எழுதட்டும்.
36உண்மையாகவே அதை
என் தோள்மேல் தூக்கிச்செல்வேன்!
எனக்கு மணி முடியாகச் சூட்டிக்கொள்வேன்.
37என் நடத்தை முழுவதையுமே
அவருக்கு எடுத்துரைப்பேன்;
இளவரசனைப்போல்
அவரை அணுகிச் செல்வேன்.
38எனது நிலம் எனக்கெதிராயக் கதறினால்,
அதன் படைச்சால்கள் ஒன்றாக அழுதால்,
39விலைகொடாமல்
அதன் விளைச்சலை உண்டிருந்தால்,
அதன் உரிமையாளரின்
உயிரைப் போக்கியிருந்தால்,
40கோதுமைக்குப் பதில் முட்களும்,
வாற்கோதுமைக்கு பதில்
களையும் வளரட்டும்.
யோபின் மொழிகள் முடிவுற்றன.