8“ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்;
அவர்தம் பெயரைச் சொல்லி
வழிபடுங்கள்; அவர்தம்
செயல்களை மக்களினங்கள்
அறியச் செய்யுங்கள்.
9அவருக்குப் பாடல் பாடுங்கள்;
அவரைப் புகழ்ந்தேத்துங்கள்;
அவர்தம் வியத்தகு செயல்கள்
அனைத்தையும் எடுத்துரையுங்கள்!
10அவர்தம் திருப்பெயரை
மாட்சிப்படுத்துங்கள்;
ஆண்டவரைத் தேடுவோரின் இதயம்
அக்களிப்பதாக!
11ஆண்டவரையும் அவரது
ஆற்றலையும் தேடுங்கள்;
அவரது திருமுகத்தை
இடையறாது நாடுங்கள்!
12அவர் செய்த வியத்தகு செயல்களை
நினைவு கூருங்கள்;
அவர்தம் அருஞ்செயல்களையும்
அவரது வாய் மொழிந்த நீதித்தீர்ப்பு
களையும் நினைவில் கொள்ளுங்கள்.
13அவரின் ஊழியராம் இஸ்ரயேலின்
வழிமரபே!
அவர் தேர்ந்துகொண்ட
யாக்கோபின் புதல்வரே!
14அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்!
அவரின் நீதித்தீர்ப்புகள்
உலகம் அனைத்திற்கும் உரியன.
15அவரது உடன்படிக்கையை
என்றென்றும் நினைவில்
கொள்ளுங்கள்;
ஆயிரம் தலைமுறைக்கென
அவர் அளித்த வாக்குறுதியை
மறவாதீர்கள்!
16ஆபிரகாமுடன் அவர் செய்து
கொண்ட உடன்படிக்கையையும்
ஈசாக்குக்கு அவர்
ஆணையிட்டுக் கூறியதையும்
நினைவில் கொள்ளுங்கள்!
17யாக்கோபுக்கு நியமமாகவும்
இஸ்ரயேலுக்கு என்றுமுள
உடன்படிக்கையாகவும்
அதை அவர் உறுதிப்படுத்தினார்.
18‘கானான் நாட்டை உனக்கு
அளிப்பேன்; அப்பங்கே உனக்கு
உரிமைச்சொத்தாய் இருக்கும்’
என்றார் அவர்.
19அப்போது, அவர்கள்
மதிப்பிலும் எண்ணிக்கையிலும்
மிகக் குறைந்தவராய் இருந்தார்கள்;
அங்கே அந்நியராய் இருந்தார்கள்.
20ஒரு நாட்டினின்று மற்றொரு
நாட்டிற்கும் ஓர் அரசினின்று
மற்றொரு மக்களிடமும் அலைந்து
திரிந்தார்கள்.
21யாரும் அவர்களை ஒடுக்குமாறு
அவர் விட்டுவிடவில்லை;
அவர்களின் பொருட்டு
மன்னர்களை அவர் கண்டித்தார்;
22‘நான் அருள்பொழிவு செய்தாரைத்
தொடாதீர்;
என் இறைவாக்கினர்க்குத்
தீங்கிழைக்காதீர்’, என்றார் அவர்.
23உலகெங்கும் வாழ்வோரே!
ஆண்டவருக்குப் புகழ்பாடுங்கள்;
அவர் தரும் மீட்பை நாள்தோறும்
அறிவியுங்கள்!
24பிற இனத்தார்க்கு அவரது
மாட்சியை எடுத்துரையுங்கள்;
அனைத்து மக்களினங்களுக்கும்
அவர்தம் வியத்தகு செயல்களை
அறிவியுங்கள்.
25ஏனெனில், ஆண்டவர் மாட்சிமிக்கவர்;
பெரிதும் போற்றத்தக்கவர்;
தெய்வங்கள் அனைத்திற்கும் மேலாக
அஞ்சுதற்கு உரியவர் அவரே!
26மக்களினங்களின் தெய்வங்கள்
அனைத்தும் வெறும் சிலைகளே!
ஆண்டவரோ விண்ணுலகைப்
படைத்தவர்!
27மாட்சியும் புகழ்ச்சியும்
அவர் திருமுன் உள்ளன!
ஆற்றலும் அக்களிப்பும்
அவரது திருத்தலத்தில் உள்ளன!
28மக்களினங்களின் குடும்பங்களே!
ஆண்டவருக்குச் சாற்றுங்கள்!
மாட்சியையும் ஆற்றலையும்
ஆண்டவருக்குச் சாற்றுங்கள்!
29ஆண்டவரின் பெயருக்குரிய
மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள்;
உணவுப் படையல் ஏந்தி
அவர்திருமுன் வாருங்கள்;
தூய கோலத்துடன் ஆண்டவரை
வழிபடுங்கள்!
30உலகெங்கும் வாழ்வோரே!
அவர் திருமுன் நடுங்குங்கள்;
உலகம் உறுதியுடன்
நிலை கொண்டுள்ளது;
இனி அது அசைக்கப்படுவதில்லை.
31விண்ணுலகம் மகிழ்வதாக!
மண்ணுலகம் களிகூர்வதாக!
‘ஆண்டவர் ஆள்கின்றார்’ என்று
பிற இனத்தார்க்கு அறிவிப்பராக!
32கடலும் அதில் நிறைந்துள்ளனவும்
முழங்கட்டும்;
வயல்வெளியும் அதில் உள்ள
அனைத்தும் களிகூரட்டும்!
33அப்பொழுது காட்டு மரங்கள்
ஆண்டவர் திருமுன் மகிழ்ந்து
பாடட்டும்!
ஏனெனில்,
அவர் மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு
வழங்க வருகின்றார்.
34ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்!
ஏனெனில், அவர் நல்லவர்;
என்றென்றும் உள்ளது அவரது
பேரன்பு!
35எங்கள் மீட்பராகிய கடவுளே!
எங்களை விடுவித்தருளும்!
வேற்று நாடுகளினின்று எங்களை
விடுவித்து ஒன்று சேர்த்தருளும்!
அப்பொழுது, நாங்கள்
உமது திருப்பெயருக்கு
நன்றி செலுத்துவோம்; உம்மைப்
புகழ்வதில் பெருமை கொள்வோம்;
36‘இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர்
ஊழி ஊழியாகப் புகழப்
பெறுவாராக’ என்று சொல்லுங்கள்.
அப்பொழுது, மக்கள் அனைவரும் ‘ஆமென்’
என்று சொல்லி, ஆண்டவரைப் போற்றினர்.