உடன்படிக்கைப் பேழை எருசலேமுக்குக் கொண்டு வரப்படல்

1தாவீது நகரில் அவர் தமக்கு வீடுகளைக் கட்டினார். கடவுளின் பேழைக்கென ஓர் இடத்தில் ஏற்பாடு செய்து அதற்கென ஒரு கூடாரத்தையும் அமைத்தார்.
2பின்னர், தாவீது, “கடவுளின் பேழையைச் சுமக்கவும், என்றென்றும் தமக்குப் பணிவிடை செய்யவும் ஆண்டவர் தேர்ந்துகொண்ட லேவியர் தவிர வேறொருவரும் கடவுளின் பேழையைச் சுமக்கலாகாது” என்றார்.
3ஆண்டவரின் பேழைக்கெனத் தாம் ஏற்பாடு செய்திருந்த இடத்துக்கு அதைக் கொண்டு வரும்படி தாவீது இஸ்ரயேலர் அனைவரையும் எருசலேமில் ஒன்று திரட்டினார்.
4அவ்வாறே, தாவீது ஆரோனின் புதல்வரையும் லேவியரையும் ஒன்று திரட்டினார்.
5கோகாத்தின் புதல்வருள் தலைவர் உரியேல், அவர் உறவின்முறையினர் நூற்றிருபது பேர்;
6மெராரியின் புதல்வருள் தலைவர் அசாயா, அவர் உறவின்முறையினர் இருநூற்றிருபது பேர்;
7கெர்சோம் புதல்வருள், தலைவர் யோவேல், அவன் உறவின்முறையினர் நூற்று முப்பது பேர்;
8எலிசாப்பான் புதல்வருள் தலைவர் செமாயா, அவர் உறவின்முறையினர் இருநூறு பேர்;
9எலிசாப்பான் புதல்வருள் தலைவர் எலியேல், அவர் உறவின்முறையினர் எண்பது பேர்;
10உசியேல் புதல்வருள் தலைவர் அம்மினதாபு, அவர் உறவின்முறையினர் நூற்றுப் பன்னிரண்டுபேர்.
11தாவீது, குருக்களாகிய சாதோக்கு அபியத்தார் ஆகியோரையும் லேவியராகிய உரியேல், அசாயா, யோவேல், செமாயா, எலியேல், அம்மினதாபு ஆகியோரையும் வரவழைத்தார்.
12தாவீது அவர்களை நோக்கி, “நீங்கள் லேவியரின் மூதாதையர் வீட்டுத் தலைவர்கள்; ஆண்டவராகிய கடவுளின் பேழைக்கென நான் ஏற்பாடு செய்துள்ள இடத்திற்கு அதைக் கொண்டுவரும்படி நீங்களும் உங்கள் உறவின்முறையினரும் உங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.
13முன்பு ஒருமுறை நீங்கள் சுமக்காததால் நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குள் அழிவு உண்டாகச் செய்தார். ஏனெனில், நாம் அவர் கட்டளைப்படி செயற்படாமற் போனோம்” என்றார்.
14எனவே, குருக்களும் லேவியரும், இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரின் பேழையைக் கொண்டு வரத் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டார்கள்.
15பின்பு, லேவியர், மோசேயின் கட்டளையாகத் தந்த ஆண்டவரது வாக்கின்படி, கடவுளின் பேழையை அதன் தண்டுகளால் தங்கள் தோள்மேல் சுமந்து வந்தனர்.
16தாவீது, லேவியரின் தலைவர்களிடம் தங்கள் உறவின்முறையிலிருந்து தம்புரு, சுரமண்டலம், கைத்தாளம் ஆகிய கருவிகளை இசைத்து மகிழ்ச்சி ஒலி எழுப்பக்கூடிய பாடகரை நியமிக்கக் கட்டளையிட்டார்.
17எனவே, லேவியர் யோவேலின் மகன் ஏமானையும், அவர் உறவின்முறையினருள் பெராக்கியாவின் புதல்வர் ஆசாபையும், மெராரியின் மைந்தரான அவர்கள் உறவின் முறையினருள் கூசயாவின் மகன் ஏத்தானையும்,
18அவர்களோடு இரண்டாம் நிலையில், அவர்கள் உறவின்முறையினர் செக்கரியா, யகசியேல், செமிராமோத்து, எகியேல், உன்னி, எலியாபு, பெனாயா, மகசேயா, மத்தித்தியா, எலிப்பலேகு, மிக்னேயா மற்றும் வாயில் காவலரான ஓபேது, ஏதோம், எயியேல் ஆகியோரையும் நியமித்தனர்.
19பாடகரான ஏமான், ஆசாபு, ஏத்தான் ஆகியோர் வெண்கலக் கைத்தாளங்களை ஒலிக்கச் செய்வார்கள்.
20செக்கரியா, அசியேல், செமிரா மோத்து, எகியேல், உன்னி, எலியாபு, மகசேயா, பெனாயா, ஆகியோர் ‘அலமோத்து’ இசையில் தம்புருகளை வாசிப்பவர்கள்.
21மத்தித்தியா, எலிப்பலேகு, மிக்னேயா, ஓபேது-ஏதோம், எயியேல், அசசியா ஆகியோர் உச்சத்தொனியில் சுரமண்டலங்கள் வாசிப்பவர்கள்.
22லேவியர் தலைவர் கெனனியா இசையில் தேர்ச்சி பெற்றவராகையால், அவர் இசை கற்பிக்கவேண்டும்.
23பெரக்கியாவும் எல்கானாவும் பேழையின் காவலர்.
24குருக்களான செபனியா, யோசபாத்து, நெத்தனியேல், அமாசாய், செக்கரியா, பெனாயா, எலியேசர் ஆகியோர் கடவுளுடைய பேழைக்கு முன்பாக எக்காளங்களை ஊதியவர்கள். ஓபேது ஏதோமும், எகியாவும் பேழைக்குக் காவலாளர்.

உடன்படிக்கைப் பேழையை எருசலேமுக்கு எடுத்துச் செல்லல்
(2 சாமு 6:12-22)

25இவ்வாறு, தாவீதும் இஸ்ரயேலின் பெரியோரும் ஆயிரவர் தலைவரும் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை ஓபேது-ஏதோம் வீட்டிலிருந்து மகிழ்ச்சியுடன் கொண்டு வரச் சென்றார்கள்.
26ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைச் சுமந்த லேவியருக்குக் கடவுள் உதவி செய்தபடியால், அவர்கள் அவருக்கு ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கிடாய்களையும் பலி செலுத்தினர்.
27தாவீதும், பேழையைச் சுமந்த லேவியர் எல்லாரும், பாடகரும், பாடகர் தலைவரான கெனனியாவும், மெல்லிய நார்ப்பட்டு அங்கி அணிந்திருந்தனர். மேலும், தாவீது நார்ப்பட்டாலான ஏபோது அணிந்திருந்தார்.
28இஸ்ரயேல் அனைவரும் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை ஆர்ப்பரிப்போடும், இசைக்கொம்பு, எக்காளம். கைத்தாள ஒலியோடும், தம்புரு சுரமண்டல இசையோடும் கொண்டு வந்தார்கள்.
29ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழை தாவீதின் நகரை அடைந்த போது, சவுலின் புதல்வி மீக்கால் சன்னல் வழியாக எட்டிப்பார்த்தாள். அப்பொழுது, தாவீது அரசர் அக்களித்து ஆடிக்கொண்டிருந்ததைக் கண்டு அவரைத் தன்னுள்ளத்தில் இகழ்ந்தாள்.

15:2 இச 10:8. 15:15 விப 25:14.