யூதாவும் தாமாரும்

1அக்காலத்தில் யூதா தம் சகோதரர்களை விட்டுப் பிரிந்து ஈரா என்ற பெயருடைய அதுல்லாமியனிடம் சென்றார்.
2அங்கே சூவா என்ற கானானியன் ஒருவனின் மகளைக் கண்டு, அவளை மணமுடித்து, அவளோடு கூடி வாழ்ந்தார்.
3அவள் கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுத்து, அவனுக்கு ஏர் என்று பெயரிட்டாள்.
4அவள் மீண்டும் கருவுற்று, ஒரு மகனைப் பெற்றெடுத்து, அவனுக்கு ஓனான் என்று பெயரிட்டான்.
5கருவளம் மிகுதியாயிருந்ததால் அவள் மேலும் ஒரு மகனைப் பெற்றெடுத்து அவனுக்குச் சேலா என்று பெயரிட்டாள். அவனைப் பெற்றெடுத்தபோது அவள் கெசீபில் இருந்தாள்.
6யூதா தம் தலை மகன் ஏர் என்பவனுக்குத் தாமார் என்னும் ஒரு பெண்ணை மணமுடித்தார்.
7யூதாவின் தலைமகன் ஏர் ஆண்டவர் முன்னிலையில் கொடியவனாய் இருந்ததால், ஆண்டவர் அவனை சாகடித்தார்.
8அப்போது யூதா தம் மகன் ஓனானை நோக்கி, “நீ உன் சகோதரன் மனைவியோடு கூடி வாழ். சகோதரனுக்குரிய கடமையைச் செய்து, உன் சகோதரனுக்கு வழிமரபு தோன்றச் செய்” என்றார்.
9அந்த வழிமரபு தனக்குரியதாய் இராதென்று அறிந்து, ஓனான் அவளோடு உடலுறவு கொள்கையில், தன் சகோதரனுக்கு வழிமரபு தோன்றாதவாறு தன் விந்தைத் தரையில் சிந்திவந்தான்.
10அவன் செய்தது தம் பார்வையில் தீயதாய் இருந்ததால், ஆண்டவர் அவனையும் சாகடித்தார்.
11ஆதலால், யூதா தம் மருமகள் தாமாரை நோக்கி, “என் மகன் சேலா பெரியவனாகும் வரை உன் தந்தை வீட்டில் விதவையாய்த் தங்கியிரு” என்றார். ஏனெனில், அவனும் தன் சகோதரரைப் போல் சாவானோ என்று அஞ்சினர். தாமாரும் அவ்விதமே தம் தந்தை வீட்டிற்குச் சென்று அங்குத் தங்கியிருந்தார்.
12பல நாள்களுக்குப்பின், சூவாவின் மகளான யூதாவின் மனைவி இறந்தாள். யூதா அவளுக்காகத் துக்கம் கழித்தபின், தம் மந்தைக்கு உரோமம் கத்தரிப்பவர்கள் இருந்த திம்னாவுக்குத் தம் அதுல்லாமிய நண்பன் ஈராவுடன் சென்றார்.
13அப்போது “உன் மாமனார் தம் ஆடுகளுக்கு உரோமம் கத்தரிக்கத் திம்னாவுக்குப் போகிறார்” என்று தாமாருக்குச் செய்தி அறிவிக்கப்பட்டது.
14சேலா பெரியவனாகியும் தம்மை அவனுக்கு மனைவியாகக் கொடுக்கவில்லை என்று அவர் கண்டு தமது கைம்மைக் கோலத்தைக் களைந்துவிட்டு, முக்காடிட்டுத் தம்மை மறைத்துக்கொண்டு திம்னாவுக்குச் செல்லும் பாதையில் இருந்த ஏனயிம் நகர்வாயிலில் அமர்ந்துகொண்டார்.
15யூதா அவரைக் கண்டபோது, அவர் முகம் மூடியிருந்ததால் அவர் ஒரு விலைமாது என்று நினைத்தார்.
16அவர் திரும்பிப் பாதையோரம் அவரிடம் சென்று, அவர் தம் மருமகளென்று அறியாமல் தம்முடன் உடலுறவு கொள்ளுமாறு அழைத்தார். அதற்கு அவர், “என்னோடு உடலுறவு கொள்வதற்கு என்ன தருவீர்?” என்று கேட்டார்.
17அவர், “என் மந்தையிலிருந்து உனக்கு ஒரு வெள்ளாட்டுக் கிடாய் அனுப்புகிறேன்” என்றார். அதற்கு அவர், “நீர் அதை அனுப்புமட்டும் எனக்கு ஓர் அடைமானம் தருவீரா?” என்று கேட்டார்.
18“அடைமானமாக உனக்கு நான் என்ன தர வேண்டும்?” என்று அவர் கேட்க, அவர் “உம்முடைய முத்திரை மோதிரத்தையும் இடைவாரையும் கைக்கோலையும் தரவேண்டும்” என்றார். அவருக்கு அவற்றைக் கொடுத்த பின் அவருடன் உடலுறவு கொண்டார். அவரும் கருவுற்றார்.
19பின்பு, அவர் எழுந்துபோய், தம் முக்காட்டை எடுத்துவிட்டு விதவைக்குரிய ஆடைகளை அணிந்துகொண்டார்.
20அவரிடம் தாம் கொடுத்திருந்த அடைமானத்தைத் திரும்பப் பெறுமாறு, யூதா தம் அதுல்லாமிய நண்பன் மூலம் ஒரு வெள்ளாட்டுக் கிடாயை அனுப்பினார். அவனோ அவரைக் காணவில்லை.
21அங்கிருந்த ஆள்களை நோக்கி, “ஏனயிம் அருகே வழியில் இருந்த விலைமாது எங்கே?” என்று கேட்க, அவர்கள், “இங்கே விலைமாது எவளுமில்லை” என்றனர்.
22அவன் யூதாவிடம் திரும்பி வந்து, “நான் அவளைக் காணவில்லை. மேலும் அங்கிருந்த ஆள்கள், ‘இங்கு விலைமாது எவளுமில்லை’ என்றனர்” என்று சொன்னான்.
23யூதா, “அவளே வைத்துக்கொள்ளட்டும்; இல்லையேல் நம்மைப் பார்த்துப் பிறர் சிரிப்பர். நானும் இந்த ஆட்டுக்கிடாயை அவளுக்கு அனுப்பி வைத்தேன். உன்னாலும், அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை” என்றார்.
24மூன்று மாதம் சென்றபின்னர், “உம் மருமகளாகிய தாமார் வேசித்தனம் பண்ணினாள். வேசித்தனத்தினால் கருவுற்றிருக்கிறாள்” என்று யூதாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது அவர், “அவளை இழுத்துக் கொண்டு வாருங்கள்; அவள் எரிக்கப்பட வேண்டும்” என்றார்.
25அவ்வாறே அவரை இழுத்துக்கொண்டு வருகையில், அவர் தம் மானமாருக்கு, “இந்தப் பொருள்கள் எவனுடையவையோ அவனாலேயே நான் கருவுற்றிருக்கிறேன். இந்த முத்திரை மோதிரமும் இடைவாரும் கைக்கோலும் யாருடையவை என்று பாரும்” என்று சொல்லியனுப்பினர்.
26யூதா அவற்றைப் பார்த்தறிந்து, “அவள் என்னைக் காட்டிலும் நேர்மையானவள். அவளை நான் என் மகன் சேலாவுக்கு மணமுடிக்காமல் போனேனே!” என்றார். ஆயினும், அதற்குப்பின் அவர் அவரோடு உடலுறவு கொள்ளவில்லை.
27தாமாருக்குப் பேறுகாலம் வந்தபோது, அவர் வயிற்றில் இரட்டைப் பிள்ளைகள் இருந்தன.
28அவர் பிள்ளை பெறுகிற வேளையில் ஒரு பிள்ளை கையை வெளியே நீட்டியது. மருத்துவப்பெண் அதன் மணிக்கட்டில் கருஞ்சிவப்பு நூலைக் கட்டி “இதுவே முதலில் வந்தது” என்றாள்.
29ஆனால், அது தன் கையைத் திரும்ப உள்ளே இழுத்துக்கொண்டபின், மற்ற பிள்ளை வெளிப்பட்டது. அப்பொழுது அவள் ‘நீ கருப்பையைக் கிழித்துக் கொண்டு வந்தவன் அல்லவா!’ என்று சொன்னாள். எனவே அவனுக்குப் ‘பெரேட்சு’* என்று பெயரிடப்பட்டது.
30பின் கருஞ்சிவப்பு நூல் கையில் கட்டப்பெற்ற அவன் சகோதரன் வெளிப்பட அவனுக்கு ‘செராகு’* என்று பெயரிடப்பட்டது.

38:29 எபிரேயத்தில், ‘கிழித்தல்’ என்பது பொருள். 38:30 எபிரேயத்தில், ‘கருஞ்சிவப்பு’ என்பது பொருள்.