2“ஆண்டவரே, நீர் நீதியுள்ளவர். உம்
செயல்களெல்லாம் நேரியவை;
உம் வழிகள் அனைத்திலும் இரக்கமும்
உண்மையும் விளங்குகின்றன.
நீரே உலகின் நடுவர்.
3இப்பொழுது, ஆண்டவரே,
என்னை நினைவுகூரும்;
என்னைக் கனிவுடன் கண்ணோக்கும்.
என் பாவங்களுக்காகவும்
குற்றங்களுக்காகவும்
என் மூதாதையருடைய
பாவங்களுக்காகவும்
என்னைத் தண்டியாதீர்.
என் மூதாதையர் உமக்கு எதிராகப்
பாவம் செய்தார்கள்.
4உம் கட்டளைகளை மீறினார்கள்.
எனவே நாங்கள் சூறையாடப்பட்டோம்,
நாடு கடத்தப்பட்டோம்,
சாவுக்கு ஆளானோம்.
வேற்று மக்களிடையே
எங்களைச் சிதறடித்தீர்;
அவர்களுடைய பழிச்சொல்லுக்கும்
நகைப்புக்கும் இகழ்ச்சிக்கும்
எங்களை உள்ளாக்கினீர்.
5என் பாவங்களுக்கு
நீர் அளித்த தீர்ப்புகள் பலவும்
உண்மைக்கு ஏற்றவை.
நாங்கள் உம் கட்டளைகளின்படி
ஒழுகவில்லை;
உம் திருமுன் உண்மையைப்
பின்பற்றி வாழவில்லை.
6இப்பொழுது,
உம் விருப்பப்படி என்னை நடத்தும்;
என் உயிர் பிரிந்துவிடக் கட்டளையிடும்.
இவ்வாறு நான்
மண்ணிலிருந்து மறைந்து
மீண்டும் மண்ணாவேனாக.
நான் வாழ்வதினும் சாவதே மேல்;
ஏனெனில் சற்றும் பொருந்தாத
பழிச்சொற்களை நான் கேட்க நேர்ந்தது.
ஆகவே கடுந்துயரில் மூழ்கியுள்ளேன்.
ஆண்டவரே, இத்துயரத்தினின்று
நான் விடுதலை பெற ஆணையிடும்;
முடிவற்ற இடத்திற்கு
என்னைப் போகவிடும்;
உமது முகத்தை என்னிடமிருந்து
திருப்பிக்கொள்ளாதேயும்;
ஆண்டவரே! வாழ்வில் மிகுந்த
துன்பங்களைக் காண்பதினும்,
இத்தகைய இகழ்ச்சிகளைக் கேட்பதினும்
நான் சாவதே மேல்.
“இரக்கமுள்ள இறைவா போற்றி!
என்றும் உம் திருப்பெயர் போற்றி!
உம் செயல்களெல்லாம் உம்மை
என்றும் போற்றுக!
12இப்பொழுது எனது முகத்தை
உம்மிடம் திருப்புகிறேன்;
என் கண்களை
உம்மை நோக்கி எழுப்புகிறேன்.
13இவ்வுலகிலிருந்து நான் மறைந்துவிடக்
கட்டளையிடும்;
இதனால் இத்தகைய பழிச்சொற்களை
நான் இனியும் கேளாதிருக்கச் செய்யும்.
14ஆண்டவரே,
நான் மாசற்றவள் என்பதும்
எந்த ஆணுடனும்
உறவு கொண்டதில்லை என்பதும்
உமக்குத் தெரியும்.
15நான் நாடு கடத்தப்பட்டு
வாழும் இவ்விடத்தில்
என் பெயரையோ
என் தந்தையின் பெயரையோ
இழிபுபடுத்தவில்லை.
நான் என் தந்தைக்கு ஒரே பிள்ளை;
அவருக்கு வாரிசாக
வேறு குழந்தைகள் இல்லை;
அவருக்குச் சகோதரர் இல்லை;
நான் மணந்துகொள்ளத்தக்க
நெருங்கிய உறவினர் யாரும் இல்லை;
என் கணவர்கள் எழுவரையும்
ஏற்கெனவே இழந்துவிட்டேன்.
இனியும் நான் ஏன் வாழவேண்டும்?
ஆண்டவரே, நான் சாவது
உமக்கு விருப்பமில்லையெனில்,
எனக்கு எதிராகச் சொல்லப்படும்
பழிச்சொல்லையாவது
இப்போது அகற்றிவிடும்.”