தீர் நகரே! ‘நான் அழகில் சிறந்தவள்’ என
நீ சொல்லிக்கொள்கின்றாய்.
4கடலின் தொலைவிடத்தை
உன் எல்லைகள் எட்டும்.
உன்னைக் கட்டினோர்
உன் அழகை நிறைவு செய்தனர்.
5செனீரிலிருந்து வந்த
தேவதாரு மரங்களால்
உனக்குப் பலகைகள் செய்தனர்;
லெபனோனின் கேதுரு மரத்தால்
உனக்குப் பாய்மரம் அமைத்தனர்.
6பாசானிலிருந்து கொண்டுவந்த
கருவாலி மரங்களால்
துடுப்புகள் செய்தனர்;
கித்திம் தீவுகளின் சவுக்கு மரங்களால்
உன் மேல்தளம் கட்டி
அதில் தந்தங்களை இழைத்தனர்.
7எகிப்தியப் பூப்பின்னல் பட்டுத்துணி
உன் பாய்மரக் கொடியாயிற்று;
எலிசா தீவின் நீலத்துணியும்
சிவப்புத்துணியும் விதானமாயின.
8சீதோன், அர்வாத்து குடிமக்கள்
உனக்குத் தண்டுவலிப்போர் ஆயினர்;
தீர் நகரே!
உன் திறமைமிக்க ஆடவர்
உன்னிடம் இருந்தனர்;
அவர்களே உன் மாலுமிகள் ஆயினர்.
9கேபால் நகரின் மூத்த கைவினைஞர்
பழுது பார்க்கும் பணிபுரிந்தனர்;
கடலிலுள்ள எல்லா மரக்கலங்களும்
அதன் மாலுமிகளும்
உன் வாணிபப் பெருக்கில்
ஆர்வம் கொண்டனர்.
25தர்சீசு நகர்க் கப்பல்கள் உன்
பொருள்களை ஏற்றிச் செல்கின்றன;
கடல் நடுவே மிகுந்த சரக்கால்
சுமத்தப்பட்டுள்ளாய்!
26தண்டு வலிப்போர் உன்னை
ஆழ்கடலில் கொண்டு செல்கின்றனர்;
ஆனால் கீழைக்காற்று
கடலின் நடுவே
உன்னை உடைத்துவிடும்.
27உன் கப்பல் உடையும் நாளில்
உன் செல்வமும்
வணிகப் பொருள்களும்
உன் கடலோடிகளும் மாலுமிகளும்
பழுதுபார்ப்போரும் வணிகரும்
உன் போர்வீரர் யாவரும்,
கப்பலில் இருக்கும் எல்லாரும்
ஆழ்கடலில் மூழ்கிப் போவர்.
28உன் மாலுமிகள் ஓலமிடுகையில்,
கடற்கரை நாடு அதிரும்.
29தண்டு வலிப்போர் அனைவரும்
கப்பல்களைக் கைவிட்டுவிடுவர்;
கடலோடிகளும் எல்லா மாலுமிகளும்
கடற்கரையில் வந்து நிற்பர்.
30உரத்த குரலெழுப்பி,
உன்னைக் குறித்துக் கசந்தழுவர்;
புழுதியைத் தங்கள் தலைமேல்
வாரிப்போடுவர்;
சாம்பலில் புரண்டழுவர்.
31உன் பொருட்டுத் தங்கள் தலைகளை
மழித்துக்கொள்வர்;
சாக்கு உடையை உடுத்திக் கொள்வர்;
உனக்காக
உளம் நொறுங்கி அழுவர்;
மனங்கசந்து புலம்புவர்.
32உனக்காக அழுது புலம்புகையில்,
உன்னைக் குறித்து
இரங்கற்பா ஒன்று பாடுவர்;
‘கடல்களால் மூழ்கடிக்கப்பட்ட
தீருக்கு நிகரான நகரேது?’
எனப் பாடுவர்.
33உன் வணிகப் பொருள்கள்
கடல் கடந்து செல்கையில்,
பல்வேறு நாட்டினரை நிறைவு செய்தாய்;
உன் பெரும் செல்வத்தாலும்
வணிகப் பொருள்களாலும்
மண்ணுலகின் மன்னர்களைச்
செல்வர் ஆக்கினாய்.
34இப்போது நீயோ
கடலால் நொறுங்கிவிட்டாய்;
கடலின் ஆழத்தில்
அமிழ்ந்து விட்டாய்;
உன் பொருள்களும்
உன் நடுவில் இருந்த மாலுமிகளும்
கடலுக்குள் மூழ்கிவிட்டனர்.
35கடற்கரையில் வாழும் அனைவரும்
உன்னைக் குறித்துத்
திகைத்து நிற்கின்றனர்;
அவர்களின் மன்னர்கள் பேரச்சம்
கொள்கின்றனர்;
அவர்களின் முகமோ
அச்சத்தால் உருக்குலைந்துள்ளது.
36மக்களினங்களின் வணிகர்கள்
உன்னைப் பழித்துரைக்கின்றனர்;
நடுங்கற்குரியு முடிவுக்கு வந்துள்ளாய்!
இனி ஒரு நாளும் நீ வாழவே மாட்டாய்!