1ஆண்டவரே!
என் முழுமனத்துடன்
உமக்கு நன்றி செலுத்துவேன்;
தெய்வங்கள் முன்னிலையில்
உம்மைப் புகழ்வேன்.
2உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி
உம்மைத் தாள் பணிவேன்;
உம் பேரன்பையும்
உண்மையையும் முன்னிட்டு
உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்;
ஏனெனில், அனைத்திற்கும் மேலாக
உம் பெயரையும் உம் வாக்கையும்
மேன்மையுறச் செய்துள்ளீர்.
3நான் மன்றாடிய நாளில்
எனக்குச் செவிசாய்த்தீர்;
என் மனத்திற்கு வலிமை அளித்தீர்.
4ஆண்டவரே! நீர்
திருவாய் மலர்ந்த சொற்களைப்
பூவுலகின் மன்னர் அனைவரும் கேட்டு
உம்மைப் போற்றுவர்.
5ஆண்டவரே! உம் வழிகளை
அவர்கள் புகழ்ந்து பாடுவர்;
ஏனெனில், உமது மாட்சி மிகப்பெரிது!
6ஆண்டவரே! நீர் உன்னதத்தில் உறைபவர்;
எனினும் நலிந்தோரைக்
கண்ணோக்குகின்றீர்;
ஆனால், செருக்குற்றோரைத்
தொலையிலிருந்தே அறிந்து கொள்கின்றீர்.
7நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும்,
என் உயிரைக் காக்கின்றீர்;
என் எதிரிகளின் சினத்துக்கு எதிராக
உமது கையை நீட்டுகின்றீர்;
உமது வலக்கையால்
என்னைக் காப்பாற்றுகின்றீர்.
8நீர் வாக்களித்த அனைத்தையும்
எனக்கெனச் செய்து முடிப்பீர்;
ஆண்டவரே! என்றும் உள்ளது
உமது பேரன்பு;
உம் கைவினைப் பொருளைக்
கைவிடாதேயும்.