பெலிஸ்தியரிடையே தாவீது

1பின்னர், தாவீது, “ நான் இங்கே சவுலின் கையில் ஒருநாள் மடிவது திண்ணம்; ஆதலால் பெலிஸ்தியர் நாட்டுக்குச் சென்று தப்பித்துக் கொள்வதைவிட எனக்கு வேறு வழியில்லை; அப்பொழுது தான் இஸ்ரயேலின் எல்லைக்குள் என்னைக் கண்டு பிடிக்கலாமென்ற நம்பிக்கை சவுலுக்கு அற்றுப் போகும்; நானும் அவர் கையிலிருந்து தப்பி விடுவேன்” என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்.
2பின் தாவீதும் அவருடன் இருந்த அறுநூறு ஆள்களும் புறப்பட்டுச் சென்று மாவோகின் மகனும் காத்து மன்னருமான ஆக்கிசு என்பவரிடம் சேர்ந்தனர்.
3அங்கே தாவீதும் அவர் தம் ஆள்களும் அவரவர் குடும்பத்தாரும் தாவீதோடு அவருடைய இருமனைவியரான இஸ்ரயேலைச் சார்ந்த அகினோவாமும், நாபாலின் மனைவியும் கர்மேலைச் சார்ந்தவருமான அபிகாயிலும் காத்து நகரில் ஆக்கிசுடன் தங்கினார்.
4தாவீது காத்து நகருக்கு ஓடிவிட்டார் என்று சவுலுக்கு அறிவித்தனர். அதன் பின் அவர் அவரைத் தேடிச்செல்லவில்லை.
5தாவீது ஆக்கிசை நோக்கி, “என் மேல் உமக்கு இரக்கம் இருந்தால் நான் குடியிருக்க நாட்டுப் புற ஊர்கள் ஒன்றில் எனக்கு இடம் தாரும்; உம் அடியான் உம்மோடு தலைநகரில் ஏன் வாழ வேண்டும்?” என்றார்.
6ஆதலால், அன்று ஆக்கிசு அவருக்குச் சிக்லாகைக் கொடுத்தார்; அதனால் இந்நாள் வரை சிக்லாகு யூதா அரசருக்கு உரியதாய் இருக்கிறது.
7தாவீது பெலிஸ்திய எல்லைக்குள் ஓர் ஆண்டும் நான்கு மாதங்களும் குடியிருந்தார்.
8பின்னர், தாவீதும் அவர் தம் ஆள்களும் புறப்பட்டுக் கெசூரியர், கிர்சியர், அமலேக்கியர் ஆகியோரைக் கொள்ளையடித்துச் சென்றனர். ஏனெனில், சூர் தொடங்கி எகிப்து நாடுவரை உள்ள நிலப்பகுதியில் பண்டைக்காலந்தொட்டு இவர்கள் குடியிருந்தனர்.
9தாவீது அந்நாட்டைத் தாக்கியபோது ஆண் பெண் எவரையும் உயிரோடு விட்டுவைக்கவில்லை; ஆனால், ஆடு மாடுகள், கழுதைகள், எருதுகள், ஒட்டகங்கள், ஆடைகள் ஆகியவற்றைக் கைப்பற்றிக கொண்டு ஆக்கிசிடம் திரும்பிவந்தார்.
10ஆக்கிசு அவரிடம், “இன்று யாரை நீர் கொள்ளையடித்தீர்?” என்று கேட்க, தாவீது மறுமொழியாக, “யூதாவின் தென் பகுதியில்”, அல்லது “எரகுமவேலரின் தென்பகுதியில்,” அல்லது “கேனியரின் தென்பகுதியியல் கொள்ளையடித்தேன்” என்பார்.
11தாவீது ஆண் பெண் எவரையும் உயிரோடு விட்டுவைப்பதில்லை; ஏனெனில், “அவர்கள் யாராவது காத்துக்குச் செய்தி கொண்டுவந்தால், ‘இவ்வாறெல்லாம் தாவீது எங்களுக்குச் செய்தான்’ என்று மன்னரிடம் தம்மைப் பற்றித் தெரிவித்துவிடுவார்கள்”என்று தாவீது நினைத்தார். அவர் பெலிஸ்தியர் நாட்டில் குடியிருந்த காலமெல்லாம் இதுவே அவரது வழக்கமாய் இருந்தது.
12ஆக்கிசு தாவீதின் மேல் நம்பிக்கை வைத்தார்; ஏனெனில், அவர் ‘இஸ்ரயேலராகிய தம் மக்களின் முழு வெறுப்புக்கு ஆளாகியுள்ளதால், அவர் என்றும் என் பணியாளராய் இருப்பார்’ என்று நினைத்தார்.