கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் தன்னிலை விளக்க மடலாக அமைந்துள்ளது. இது பவுலின் உள்ளத்தையும் உணர்வுகளையும் மிகத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது; தம் திருத்தூதுப் பணி முறையானது என நிலைநாட்டுவதையும், தம் பணியை இகழ்ந்து பேசியவர்கள்மேல் சினங்கொண்டு அவர்களைத் தாக்குவதையும், தாம் இகழ்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட போது உள்ளம் வேதனையடைந்து கண்ணீர் விடுவதையும், கொரிந்தியர் மனம் மாறியபோது ஆறுதலால் நிறைந்து மனம் மகிழ்ச்சியடைவதையும் நாம் கண்டு அவரோடு ஒத்துணர முடிகிறது.
பவுல் கொரிந்தியருக்கு முதலாம் திருமுகத்தை எழுதிய பின் கொரிந்திலிருந்து போலிப் போதகர்கள் அவருக்கு எதிராகக் கலகமூட்டினர். அவர் கொரிந்துக்கு வரும் திட்டத்தை மாற்றியதால் அவர் உறுதியற்ற மனமுடையவர் என்றனர்; நன்கொடை திரட்டி வந்ததால் நேர்மையற்றவர் என்றனர்; அவர் தற்பெருமைமிக்கவர், நல்ல தோற்றமோ பேச்சுவன்மையோ இல்லாதவர், இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலராய் இருக்கத் தகுதியற்றவர் என்றனர்.
பவுல் தீத்துவைக் கொரிந்துக்கு அனுப்பி இச்சிக்கல்களுக்குத் தீர்வு காணப் பணித்தார்; தீத்து திரும்பி வந்தபின் கொரிந்தியர் மனம்மாற்றம் பெற்றதை அவரிடமிருந்து அறிந்து மகிழ்ந்தார்; குறிப்பாக 1 கொரி 5இல் சொல்லப்பட்ட ஒழுக்கக்கேடான ஒருவன் மனம்மாறி மீண்டும் திருச்சபையில் சேர்த்துக் கொள்ளப்பட்டது குறித்து மகிழ்ந்தார். எனவே மனம் மாறிய கொரிந்தியருக்கு நன்றி கூறும் நோக்குடனும் தம் திருத்தூதுப் பணியின் அதிகாரத்தை ஏற்காதோரை அதை ஏற்கச் செய்யும் நோக்குடனும் அவர் இம்மடலை எழுதினார். கி.பி. 55-56ஆம் ஆண்டுகளில் இதனை எழுதியதாகத் தெரிகிறது.
இத்திருமுகம் ஒரே மடலா அல்லது பல மடல்களின் தொகுப்பா என்பது பற்றி அறிஞரிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. சிலர் இதனை இன்றும் ஒரே மடலாகவே பார்க்கின்றனர். மற்றும் சிலர் 1-9 அதிகாரங்களை ஒரு மடலாகவும், 10-13 அதிகாரங்களை இன்னொரு மடலாகவும் பார்க்கின்றனர். ஆனால் வேறு சில அறிஞர்கள் இத்திருமுகம் ஐந்து மடல்களின் தொகுப்பு என்கின்றனர்:
இவ்வாறு பகுத்து இந்த வரிசையில் வாசிக்கும்போது மிகுந்த கருத்துத் தொடர்பும் பொருள் தெளிவும் கிடைக்கிறது.
இத்திருமுகத்தின் முதற்பகுதியில் பவுல் கொரிந்து திருச்சபையுடன் தமக்கிருந்த உறவை விவரிக்கிறார்; புதிய உடன்படிக்கையே தம் பணிக்கும் கிறிஸ்துவின் பணிக்கும் அடிப்படை என்கிறார். பணியில் வரும் துன்பங்கள் குறித்தும் அப்பணிக்கான நோக்கம் குறித்தும் பேசுகிறார்; அந்நோக்கம் கிறிஸ்துவுடன் ஒப்புரவு ஆதல் என்கிறார்; தாம் வரும்போது நன்கொடைகளைத் தயாராக வைத்திருக்க வேண்டுமென அறிவுரை கூறுகிறார்.
இறுதியில், தாம் நிச்சயமாகக் கொரிந்துக்கு வரப்போவதாக வலியுறுத்தித் தாம் உண்மையான திருத்தூதர் என்றும் ஒரு திருத்தூதருக்குரிய தன்மையுடன் கண்டிப்பான நடவடிக்கைகள் எடுக்கப் போவதாகவும் கூறுகிறார்.