மத்தத்தியாவின் பற்றுறுதி

1அக்காலத்தில் யோவாபின் குடும்பத்தைச் சேர்ந்த குருவான சிமியோனின் பேரனும் யோவானின் மகனுமான மத்தத்தியா எருசலேமைவிட்டுப் புறப்பட்டு மோதயினில் குடியேறினார்.
2அவருக்கு ஐந்து மைந்தர்கள் இருந்தார்கள்; அவர்கள் காத்தி என்ற யோவானும்,
3தாசீ என்ற சீமோனும்,
4மக்கபே என்ற யூதாவும்,
5அவரான் என்ற எலயாசரும், அப்பு என்ற யோனத்தானும் ஆவார்கள்.
6யூதேயாவிலும் எருசலேமிலும் மக்கள் இறைவனைப் பழிப்பதைக் கண்ட மத்தத்தியா,

7“ஐயோ, எனக்கு கேடு!

என் மக்களின் இழிவையும்

திருநகரின் அழிவையும் பார்க்கவோ

நான் பிறந்தேன்! பகைவரின்

பிடியில் நகர் சிக்கியிருக்க,

திருஉறைவிடம் அயல் நாட்டவர்

கையில் அகப்பட்டியிருக்க, நான்

இங்குக் குடியிருக்கலாமோ!

8அதன் கோவில் மாண்பு இழந்த

மனிதனைப்போல் ஆனது.

9அதன் மாட்சிக்குரிய கலன்கள்

கொள்ளைப்பொருள்களாய்க்

கொண்டு செல்லப்பட்டன;

அதன் குழந்தைகள் தெருக்களில்

கொலையுண்டார்கள்; அதன்

இளைஞர்கள் பகைவரின்

வாளுக்கு இரையானார்கள்.

10அதன் அரசை உரிமையாக்கிக்

கொள்ளாத இனத்தார் யார்?

அதன் கொள்ளைப்பொருள்களைக்

கைப்பற்றாதார் யார்?

11அதன் அணிகலன்களெல்லாம்

பறியோயின; உரிமை

நிலையிலிருந்து அது அடிமை

நிலைக்குத் தள்ளப்பட்டது.

12நம் தூய இடமும் நம் அழகும்

மாட்சியும் பாழடைந்தன;

அவற்றை வேற்றினத்தார்

தீட்டுப்படுத்தினர்.

13இனியும் நாம் ஏன் வாழவேண்டும்?”

என்று புலம்பினார்.

14மத்தத்தியாவும் அவருடைய மைந்தர்களும் தங்கள் ஆடைகளைக் கிழித்து, சாக்கு உடை உடுத்திக் கொண்டு மிகவும் புலம்பினார்கள்.
15இதற்கிடையில் கடவுளைப் புறக்கணிக்குமாறு யூதர்களைக் கட்டாயப்படுத்துவதற்காக மன்னன் ஏற்படுத்திய அலுவலர்கள், மக்களைப் பலிசெலுத்த வைக்கும்படி மோதயின் நகருக்குச் சென்றார்கள்.
16இஸ்ரயேல் மக்களுள் பலர் அவர்களிடம் போய்ச் சேர்ந்தனர். மத்தத்தியாவும் அவருடைய மைந்தர்களும் தனியே கூடிவந்தார்கள்.
17மன்னனின் அலுவலர்கள் மத்தத்தியாவை நோக்கி, “நீர் இந்த நகரத்தில் மதிப்பிற்குரிய பெருந்தலைவர். உம் மைந்தர்கள், சகோதரர்களுடைய ஆதரவு உமக்கு உண்டு.
18ஆதலால் இப்பொழுது நீர் முன்வாரும்; பிற இனத்தார், யூதேயா நாட்டு மக்கள், எருசலேமில் எஞ்சியிருப்போர் ஆகிய அனைவரும் செய்தவண்ணம் நீரும் மன்னரின் கட்டளையை நிறைவேற்றும். அப்படியானால் நீரும் உம் மைந்தர்களும் மன்னரின் நண்பர்கள் ஆவீர்கள்; பொன், வெள்ளி மற்றும் பல்வேறு பரிசுகளால் சிறப்பிக்கப் பெறுவீர்கள்” என்று கூறினார்கள்.
19அதற்கு மறுமொழியாக மத்தத்தியா உரத்த குரலில், “மன்னரின் ஆளுகைக்கு உட்பட்ட எல்லா மக்களினத்தாரும் அவருக்குக் கீழ்ப்படிந்து, தங்கள் மூதாதையரின் வழிபாட்டு முறைகளைக் கைவிட்டு, அவருடைய கட்டளைகளை நிறைவேற்ற இசைந்தாலும்,
20நானும் என் மைந்தர்களும் சகோதரர்களும் எங்கள் மூதாதையரின் உடன்படிக்கையின்படியே நடப்போம்.
21திருச்சட்டத்தையும் அதன் விதிமுறைகளையும் நாங்கள் கைவிட்டு விடுவதைக் கடவுள் தடுத்தருள்வாராக!
22மன்னரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியமாட்டோம்; எங்கள் வழிபாட்டு முறைகளினின்று சிறிதும் பிறழமாட்டோம்” என்று கூறினார்.
23மத்தத்தியா இச்சொற்களைக் கூறி முடித்ததும், மன்னரின் கட்டளைப்படி மோதயின் நகரத்துப் பீடத்தின் மேல் பலியிட யூதன் ஒருவன் எல்லாருக்கும் முன்பாக வந்தான்.
24மத்தத்தியா அதைப் பார்த்ததும் திருச்சட்டத்தின்பால் கொண்ட பேரார்வத்தால் உள்ளம் கொதித்தெழுந்தார்; முறையாக சினத்தை வெளிக்காட்டி அவன்மீது பாய்ந்து பலிபீடத்தின்மீதே அவனைக் கொன்றார்.
25அதே நேரத்தில், பலியிடும்படி மக்களை வற்புறுத்திய மன்னனின் அலுவலனைக் கொன்று பலிபீடத்தையும் இடித்துத் தள்ளினார்.
26இவ்வாறு சாலூவின் மகன் சிம்ரிக்குப் பினகாசு செய்ததுபோல, திருச்சட்டத்தின்பால் தாம் கொண்டிருந்த பேரார்வத்தை மத்தத்தியா வெளிப்படுத்தினார்.

மத்தத்தியாவின் எதிர்ப்பும் போரும்

27பின்னர் மத்தத்தியா நகரெங்கும் சென்று, “திருச்சட்டத்தின்பால் பேரார்வமும் உடன்படிக்கைமீது பற்றுதியும் கொண்ட எல்லாரும் என் பின்னால் வரட்டும்” என்று உரத்த குரலில் கத்தினார்.
28அவரும் அவருடைய மைந்தர்களும் நகரில் இருந்த தங்கள் உடைமைகளையெல்லாம் விட்டுவிட்டு மலைகளுக்குத் தப்பியோடினார்கள்.
29அப்போது நீதி நேர்மையைத் தேடிய பலர் பாலைநிலத்தில் தங்கிவாழச் சென்றனர்.
30அவர்களும் அவர்களுடைய மைந்தர்களும் மனைவியரும் கால்நடைகளோடு அங்குத் தங்கினார்கள்; ஏனெனில் கடுந்துயரங்கள் அவர்களை வருத்தின.
31மன்னனின் கட்டளையை அவமதித்தோர் பாலைநிலத்து மறைவிடங்களுக்குப் போய்விட்டனர் என்று தாவீதின் நகராகிய எருசலேமில் இருந்த அரச அலுவலர்களுக்கும் படைவீரர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.
32உடனே படை வீரர்கள் பலர் அவர்களைத் துரத்திச் சென்று, அவர்கள் தங்கியிருந்த இடத்தை அடைந்து, அதற்கு எதிராகப் பாசறை அமைத்து, ஓய்வுநாளில் அவர்கள்மீது போர்தொடுக்க ஏற்பாடு செய்தனர்.
33அவர்கள் இஸ்ரயேலரை நோக்கி, “போதும் இந்தப் போராட்டம். வெளியே வாருங்கள்; மன்னரின் கட்டளைப்படி செயல்படுங்கள்; நீங்கள் பிழைப்பீர்கள்” என்றார்கள்.
34அதற்கு அவர்கள், “ஓய்வுநாள் தீட்டுப்படாதவாறு நாங்கள் வெளியே வரவும் மாட்டோம்; மன்னரின் சொற்படி நடக்கவும் மாட்டோம்” என்று பதிலளித்தார்கள்.
35உடனே பகைவர்கள் அவர்களோடு போர்புரிய விரைந்தார்கள்.
36ஆனால் இஸ்ரயேலர் அவர்களை எதிர்க்கவுமில்லை; அவர்கள்மேல் கற்களை எறியவுமில்லை; தாங்கள் ஒளிந்திருந்த இடங்களை அடைத்துக்கொள்ளவுமில்லை.
37மாறாக, “எங்கள் மாசின்மையில் நாங்கள் எல்லாரும் மடிவோம். நீங்கள் எங்களை அநியாயமாகக் கொலை செய்கிறீர்கள் என்பதற்கு வானமும் வையகமும் சான்றாக இருக்கும்” என்றார்கள்.
38ஆகவே பகைவர்கள் ஓய்வு நாளில் அவர்களைத் தாக்க, அவர்களுள் ஆயிரம் பேர் இறந்தனர்; அவர்களுடைய மனைவி மக்களும் கால்நடைகளும் மாண்டார்கள்.
39இதை அறிந்த மத்தத்தியாவும் அவருடைய நண்பர்களும் அவர்களுக்காகப் பெரிதும் அழுது புலம்பினார்கள்.
40அப்பொழுது அவர்கள் ஒருவர் ஒருவரைநோக்கி, “நம் சகோதரர்கள் செய்ததுபோல நாம் அனைவரும் செய்து நம் உயிரையும் விதிமுறைகளையும் காப்பாற்றும்பொருட்டு வேற்றினத்தாரோடு போரிட மறுத்தால், பகைவர்கள் விரைவில் நம்மையும் மண்ணுலகினின்று அழித்தொழித்து விடுவார்கள்” என்று சொல்லிக்கொண்டார்கள்.
41அன்று அவர்கள், “ஓய்வுநாளில் யார் நம்மைத் தாக்கினாலும், அவர்களை எதிர்த்து நாமும் போர்புரிவோம்; நம் சகோதரர்கள் தாங்கள் ஒளிந்திருந்த இடங்களில் மடிந்ததுபோல நாமும் மடிய மாட்டோம்” என்னும் முடிவுக்கு வந்தார்கள்.
42இஸ்ரயேலருள் வலிமையும் துணிவும் கொண்ட கசிதேயர்* குழுவினர் அவர்களோடு சேர்ந்துகொண்டனர். இவர்கள் எல்லாரும் திருச்சட்டத்தைக் காப்பாற்ற மனமுவந்து முன்வந்தனர்.
43கடுந்துயருக்குத் தப்பியோடியவர்கள் அனைவரும் அவர்களோடு சேர்ந்து கொண்டதால் அவர்கள் கூடுதல் வலிமை பெற்றார்கள்.
44அவர்கள் எல்லாரும் படையாகத் திரண்டு, பொல்லாதவர்களைச் சினங்கொண்டு தாக்கினார்கள்; நெறிகெட்டவர்களைச் சீற்றங்கொண்டு தாக்கினார்கள். தாக்கப்பட்டோருள் உயிர் தப்பியவர்கள் பாதுகாப்புக்காகப் பிற இனத்தாரிடம் ஓடிவிட்டார்கள்.
45மத்தத்தியாவும் அவருடைய நண்பர்களும் எங்கும் சென்று சிலைவழிபாட்டுக்கான பீடங்களை இடித்துத் தள்ளினார்கள்;
46இஸ்ரயேலின் எல்லைக்குள் விருத்தசேதனமின்றி வாழ்ந்துவந்த சிறுவர்களுக்கு வலுக்கட்டாயமாக விருத்தசேதனம் செய்தார்கள்;
47செருக்குற்ற மக்களை விரட்டியடித்தார்கள். அவர்களின் முயற்சி அன்றாடம் வெற்றிகண்டது.
48வேற்றினத்தாரிடமிருந்தும் மன்னர்களிடமிருந்தும் அவர்கள் திருச்சட்டத்தை விடுவித்தார்கள்; பொல்லாதவனான அந்தியோக்கு வெற்றிகொள்ள விடவில்லை.

மத்தத்தியாவின் இறப்பு

49இறக்கும் காலம் நெருங்கியபோது மத்தத்தியா தம் மைந்தர்களை நோக்கி,” இப்போது இறுமாப்பும் ஏளனமும் மேலோங்கிவிட்டன; பேரழிவுக்கும் கடுங் சீற்றத்துக்கும் உரிய காலம் இது.
50ஆதலால், என் மக்களே, இப்போது திருச்சட்டத்தின்பால் பற்றார்வம் கொண்டிருங்கள்; நம் மூதாதையரின் உடன்படிக்கைக்காக உங்கள் உயிரைக் கொடுங்கள்.
51நம் மூதாதையர் தங்கள் காலத்தில் செய்த செயல்களை நினைவுகூருங்கள்; இதனால் பெரும் மாட்சியும் நிலைத்த பெயரும் பெறுவீர்கள்.
52ஆபிரகாம் சோதிக்கப்பட்ட வேளையிலும் பற்றுறுதி உள்ளவராய்க் காணப்படவில்லையா? அதனால் இறைவனுக்கு ஏற்புடையவர் என்று மதிக்கப்படவில்லையா?
53யோசேப்பு தமக்கு இடர்பாடு நேரிட்ட காலத்தில் கட்டளையைக்கடைப்பிடித்தார்; எகிப்தின் ஆளுநர் ஆனார்.
54நம் மூதாதையான பினகாசு பற்றார்வம் மிக்கவராய் இருந்ததால் என்றுமுள குருத்துவத்தின் உடன்படிக்கையைப் பெற்றுக்கொண்டார்.
55யோசுவா கட்டளையை நிறைவேற்றியதால் இஸ்ரயேலின் நீதித்தலைவர் ஆனார்.
56காலேபு சபைமுன் சான்று பகர்ந்ததால் நாட்டை உரிமைச்சொத்தாக அடைந்தார்.
57முடிவில்லாத அரசின் அரியணையைத் தாவீது தம் இரக்கத்தால் உரிமையாக்கிக் கொண்டார்.
58எலியா திருச்சட்டத்தின்பால் பற்றார்வம் கொண்டிருந்ததால் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பெற்றார்.
59அனனியா, அசரியா, மிசாவேல் ஆகியோர் தங்கள் பற்றுறுதியால் தீயினின்று காப்பாற்றப்பெற்றார்கள்.
60தானியேல் தமது மாசின்மையால் சிங்கத்தின் பிடியினின்று விடுவிக்கப்பெற்றார்.
61இவ்வாறே, கடவுளை நம்பினோர் ஆற்றலில் சிறந்தோங்குவர் என்பதை ஒவ்வொரு தலைமுறையிலிருந்தும் கற்றுக்கொள்ளுங்கள்.
62தீவினை புரியும் மனிதனின் சொல்லுக்கு அஞ்சாதீர்கள்; ஏனெனில் அவனது பெருமை கழிவுப்பொருளாக மாறும்; புழுவுக்கு இரையாகும்.
63அவன் இன்று உயர்த்தப்படுவான்; நாளை அடையாளமின்றிப் போய்விடுவான்; ஏனெனில் தான் உண்டான புழுதிக்கே திரும்பிவிடுவான்; அவனுடைய திட்டங்கள் ஒழிந்துபோகும்.
64என் மக்களே, நீங்கள் திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் மனஉறுதியும் வலிமையும் கொண்டிருங்கள்; ஏனெனில் அதனால் மாட்சி அடைவீர்கள்.
65“உங்கள் சகோதரனாகிய சிமியோன் அறிவுக்கூர்மை படைத்தவன் என்பதை நான் அறிவேன். அவனுக்கு எப்பொழுதும் செவிசாயுங்கள். அவன் உங்களுக்கு தந்தையாக இருப்பான்.
66இளமைமுதல் வலிமையும் துணிவும் கொண்டவனாகிய யூதா மக்கபே உங்களுக்குப் படைத்தலைவனாய் இருந்து பகைவர்களை எதிர்த்துப் போர்புரிவான்.
67திருச்சட்டத்தின்படி நடக்கிறவர்கள் எல்லாரையும் உங்களோடு ஒன்று சேர்த்து உங்கள் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காகப் பகைவர்களைப் பழிவாங்குங்கள்;
68வேற்றினத்தார் உங்களுக்குச் செய்ததை அவர்களுக்குத் திருப்பிச் செய்யுங்கள்; திருச்சட்டத்தின் கட்டளைகளைக் கடைப்பிடியுங்கள்” என்று அறிவுரை கூறினார்.
69இவ்வாறு சொல்லி மத்தத்தியா அவர்களுக்கு ஆசி வழங்கியபின் தம் மூதாதையரோடு துயில்கொண்டார்.
70அவர் நூற்று நாற்பத்தாறாம் ஆண்டு* இறந்தார்; மோதயின் நகரில் இருந்த தம் மூதாதையரின் கல்லறையில் அடக்கம் செய்யப்பெற்றார். இஸ்ரயேலர் அனைவரும் அவருக்காகப் பெரிதும் துயரம் கொண்டாடினர்.

2:26 எண் 25:7-8; திபா 106:30; சீஞா 45:23. 2:27 2 மக் 5:27. 2:32-38 2 மக் 6:11. 2:52 தொநூ 15:6; 22:1-19; சாஞா 10:5. 2:53 தொநூ 39:1:45-28. 2:54 எண் 25:13; சீஞா 45:23-34. 2:55-56 எண் 13:1-14:22. 2:57 2 சாமு 7:16. 2:58 1 அர 19:10-14; 2 அர 2:9-12. 2:59 தானி 3:8-30. 2:60 தானி 6:1-29; 3:31-42. 2:61 சீஞா 2:10. 2:64 இச 31:6.
2:42 எபிரேயத்தில், ‘கசிதேயர்’ என்றால் ‘பக்தர்கள்’, ‘சமயப் பணியார்வமுடையோர்’ எனப் பொருள். இவர்களே ‘எஸ்ஸேனியர்’, ‘பரிசேயர்’ ஆகியோருக்கு முன்னோடிகள். 2:70 கி.மு. 166.