1எருசலேமே, உன் துன்ப துயரத்தின்

ஆடைகளைக் களைந்துவிடு;

கடவுள் உனக்கு அருளும்

மாட்சியின் பேரழகை என்றென்றும்

ஆடையாக அணிந்துகொள்.

2கடவுளிடமிருந்து வரும் நீதியை

ஆடையாய்ப் புனைந்து கொள்;

என்றுமுள்ளவரின் மாட்சியை

மணிமுடியாக உன்

தலைமீது சூடிக்கொள்.

3கடவுள் வானத்தின்கீழ்

உள்ள எல்லா நாடுகளுக்கும்

உன் பேரொளியைக் காட்டுவார்.

4‛நீதியில் ஊன்றிய அமைதி’,

‛இறைப்பற்றில் ஒளிரும் மாட்சி’

என்னும் பெயர்களால் கடவுள்

உன்னை என்றென்றும் அழைப்பார்.

5எருசலேமே, எழுந்திரு;

உயர்ந்த இடத்தில் எழுந்து நில்.

கீழ்த்திசையை நோக்கு;

கீழ்த்திசைமுதல் மேற்றிசைவரை

உள்ள எல்லா நாடுகளிலிருந்தும்

உன் மக்கள் தூயவரின்

சொல்லால் ஒன்று சேர்க்கப்பட்டு,

கடவுள் தங்களை நினைவு

கூர்ந்ததற்காக மகிழ்வதைப் பார்.

6பகைவர்கள் கடத்திச் சென்ற

உன் மக்கள் உன்னைவிட்டுப்

பிரிந்து சென்ற பொழுது

நடந்து சென்றார்கள்;

ஆனால் கடவுள் அவர்களை

உன்னிடம் திரும்ப அழைத்துவரும்

பொழுது அரியணையில்

வீற்றிருக்கும் மன்னர்போல்

உயர்மிகு மாட்சியுடன்

அழைத்துவரப்படுவார்கள்.

7கடவுளின் மாட்சியில்

இஸ்ரயேல் பாதுகாப்புடன்

நடந்துவரும் பொருட்டு,

உயர் மலைகள் என்றென்றும்

உள்ள குன்றுகள் எல்லாம்

தாழவும் பள்ளத்தாக்குகள் நிரம்பவும்

இவ்வாறு நிலம் முழுதும் சமமாகவும்

கடவுள் கட்டளையிட்டுள்ளார்.

8மேலும், காடுகளும் நறுமணம்

வீசும் மரங்கள் அனைத்தும்

கடவுளின் கட்டளையால்

இஸ்ரயேலுக்கு நிழல் கொடுத்தன.

9கடவுள் தம் மாட்சியின்

ஒளியில் மகிழ்ச்சியோடும்,

தம்மிடமிருந்து வெளிப்படும்

இரக்கத்தோடும் நீதியோடும்

இஸ்ரயேலை அழைத்து வருவார்.


5:1-2 எசா 52:1; 61:3,10. 5:7 எசா 40:4.