2“என்றும் வாழும் கடவுள் போற்றி!
ஏனெனில் அவருடைய ஆட்சி
எக்காலத்துக்கும் நிலைக்கும்.
அவர் தண்டிக்கிறார்;
இரக்கமும் காட்டுகிறார்.
பாதாளத்தின் ஆழத்திற்கே
தள்ளுகிறார்;
பேரழிவிலிருந்து மேலே தூக்குகிறார்.
அவரது ஆற்றலுக்கு அப்பாற்பட்டது
எதுவுமில்லை.
3இஸ்ரயேல் மக்களே,
வேற்றினத்தார்முன்
அவரது புகழை அறிக்கையிடுங்கள்.
ஏனெனில் அவர் அவர்களிடையே
உங்களைச் சிதறடித்துள்ளார்.
4அவர் தமது பெருமையை
உங்களுக்குக் காட்டியுள்ளார்.
எல்லா உயிர்கள்முன்னும்
அவரை ஏத்துங்கள்.
ஏனெனில் அவர் நம் ஆண்டவர்;
நம் கடவுள்; நம் தந்தை;
எக்காலத்துக்கும் அவர் கடவுள்.
5உங்களுடைய நெறிகெட்ட
செயல்களுக்காக
அவர் உங்களைத் தண்டிப்பார்;
நீங்கள் சிதறடிக்கப்பட்டுள்ள
எல்லா நாடுகளிலிருந்தும்
உங்களை ஒன்றுகூட்டி
உங்கள் அனைவர்மீதும்
இரக்கத்தைப் பொழிவார்.
6நீங்கள் உங்கள் முழு உள்ளத்தோடும்
முழு ஆன்மாவோடும்
அவர்பால் திரும்பி
அவர் திருமுன்
உண்மையுடன் ஒழுகினால்
அவர் உங்கள்பால் திரும்புவார்;
தமது முகத்தை உங்களிடமிருந்து
என்றுமே திருப்பிக்கொள்ளார்.
7உங்களுக்கு அவர் செய்துள்ளவற்றை
இப்பொழுது எண்ணிப்பாருங்கள்;
நீதியின் ஆண்டவரைப் போற்றுங்கள்;
வாயார அவரை அறிக்கையிடுங்கள்.
என்றுமுள மன்னரை
ஏத்திப் போற்றுங்கள்.
8* நான் அடிமையாய் வாழும் நாட்டில்
அவரைப் போற்றுவேன்;
அவருடைய ஆற்றலையும்
மேன்மையையும்
பாவ நாட்டமுள்ள இனத்தார்முன்
அறிக்கையிடுவேன்.
பாவிகளே, மனந்திரும்புங்கள்;
அவர் திருமுன்
நேர்மையுடன் ஒழுகுங்கள்.
ஒருவேளை அவர்
உங்கள் மீது அருள்கூர்வார்;
உங்களுக்கு இரக்கங்காட்டுவார்.
9நான் என் கடவுளைப்
புகழ்ந்தேத்துவேன்;
என் உள்ளம் விண்ணக வேந்தரைப்
போற்றுகின்றது;
அவரது மேன்மையை நினைத்து
பேருவகை கொள்கிறது.
10அனைவரும் புகழ் பாடுங்கள்;
எருசலேமில் அவரைப் போற்றுங்கள்.
திரு நகரான எருசலேமே,
உன் மக்களுடைய
செயல்களின் பொருட்டே
அவர் உன்னைத் தண்டிப்பார்;
நீதிமான்களின் பிள்ளைகள்மீது
மீண்டும் இரக்கங்காட்டுவார்.
11உமது கூடாரம் உமக்காக மீண்டும்
மகிழ்ச்சியுடன் அமைக்கப்படும்.
12நாடுகடத்தப்பட்ட உங்கள்
அனைவரையும் இன்புறுத்தி,
நலிவுற்ற உங்கள் அனைவர்மீதும்
தலைமுறைதோறும் அன்பு செலுத்துவாராக.
13உலகின் எல்லைகள்வரை
பேரொளி சுடர்க.
தொலையிலிருந்து பல நாடுகள்
எருசலேமிடம் வரும்.
உலகின் எல்லா எல்லைகளிலிருந்தும்
மக்கள் உமது திருப் பெயர் விளங்கும்
இடத்திற்கு வருவார்கள்;
விண்ணக வேந்தருக்குத்
தம் கைகளில்
காணிக்கை ஏந்தி வருவார்கள்.
எல்லாத் தலைமுறைகளும்
உன்னில் மகிழ்ந்து பாடும்;
தெரிந்துகொள்ளப்பெற்ற நகரின் பெயர்
தலைமுறை தலைமுறையாக
நிலைத்திருக்கும்.
14உனக்கு எதிராக
வன்சொல் கூறுவோரும்
உன்னை அழிப்போரும் சபிக்கப்படுவர்;
உன் மதில்களைத் தகர்ப்போரும்
உன் காவல்மாடங்களைத்
தரைமட்டமாக்குவோரும்
உன் வீடுகளைத் தீக்கிரையாக்குவோரும்
சபிக்கப்படுவர்.
ஆனால் உனக்கு என்றென்றும்
அஞ்சுவோர் அனைவரும்
ஆசி பெறுவர்.
15வாரீர், நீதிமான்களின்
மக்களைக்குறித்து மகிழ்வீர்.
ஏனெனில் அவர்கள் அனைவரும்
மீண்டும் ஒன்றுகூடுவர்;
என்றுமுள ஆண்டவரைப் போற்றுவர்.
உன்னிடம் அன்புகொண்டோர்
பேறுபெற்றோர்;
உன் நிறை வாழ்வு கண்டு மகிழ்வோர்
பேறுபெற்றோர்.
16உன் தண்டனைகள்
எல்லாவற்றையும் குறித்து
வருந்துவோர் பேறுபெற்றோர்;
அவர்கள் அனைவரும்
உன்பொருட்டு அகமகிழ்வார்கள்;
உனது முழு மகிழ்ச்சியையும்
என்றென்றும் காண்பார்கள்.
என் உயிரே,
மாவேந்தராம் ஆண்டவரைப் போற்று.
17எருசலேம் நகர் எக்காலத்துக்கும்
அவரது இல்லமாக எழுப்பப்படும்.
என் வழிமரபினருள் எஞ்சியோர்
உனது மாட்சியைக் கண்டு
விண்ணக வேந்தரைப் புகழ்வாராயின்,
நான் எத்துணைப் பேறு பெற்றவன்!
எருசலேமின் வாயில்கள்
நீலமணியாலும்
மரகதத்தாலும் உருவாகும்;
உன் மதில்கள்
விலையுயர்ந்த கற்களால் கட்டப்படும்.
எருசலேமின் காவல்மாடங்கள்
பொன்னாலும்
கொத்தளங்கள் பசும் பொன்னாலும்
அமைக்கப்படும்;
எருசலேமின் வீதிகளில்
மாணிக்கமும் ஓபீர் நாட்டுக் கற்களும்
பதிக்கப்படும்;
18எருசலேமின் வாயில்கள்
மகிழ்ச்சிப் பாக்கள் இசைக்கும்;
அதன் இல்லங்கள்தோறும்
‘அல்லேலூயா,
இஸ்ரயேலின் கடவுள் போற்றி’
என முழங்கும்.
கடவுளின் ஆசிபெற்றோர்
அவரது திருப்பெயரை
என்றென்றும் வாழ்த்துவர்.”