விளக்குகள் வைத்தல்

1ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2“ஆரோனிடம் சொல்: நீ விளக்குகளை ஏற்றும்போது ஏழு அகல்களும் விளக்குத் தண்டுக்கு முன்பக்கம் ஒளிதர வேண்டும்”.
3ஆரோன் அப்படியே செய்தார்; ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி விளக்குத்தண்டுக்கு முன்பக்கம் ஒளி தரும்படி அதன் அகல்களை ஏற்றினார்.
4விளக்குத் தண்டின் வேலைப்பாடு; அது பொன் அடிப்பு வேலையால் செய்யப்பட்டிருந்தது; அதன் பாதம் முதல் மலர்கள் வரை அடிப்பு வேலையால் செய்யப்பட்டது; ஆண்டவர் மோசேக்குக் காட்டிய வடிவமைப்பின்படியே அவர் விளக்குத் தண்டைச் செய்தார்.

லேவியரின் தூய்மையாக்கமும் அர்ப்பணமும்

5ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
6“இஸ்ரயேல்மக்களிடமிருந்து லேவியரைப் பிரித்தெடுத்து அவர்களைத் தூய்மைப்படுத்து;
7அவர்களைத் தூய்மைப்படுத்த நீ செய்யவேண்டியது; பாவம் போக்கும் பலியின் நீரை அவர்கள் மேல் தெளிப்பாய்; அவர்கள் உடல் முழுவதையும் சிரைத்து, தங்கள் துணிகளைத் துவைத்துத் தங்களைத் தூய்மைப்படுத்திக்கொள்ளட்டும்.
8அதன் பின் அவர்கள் இளங்காளை ஒன்றையும் எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவான அதன் உணவுப்படையலையும் எடுத்துக் கொள்ளட்டும்; நீயோ பாவம் போக்கும் பலிக்கென வேறோர் இளங்காளையை எடுத்துக்கொள்.
9இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் ஒன்று திரட்டு; சந்திப்புக் கூடாரத்தின் முன் லேவியரை அழைத்து வந்து நிறுத்து.
10நீ லேவியரை ஆண்டவர் திருமுன் நிறுத்தும்போது, இஸ்ரயேல் மக்கள் தங்கள் கைகளை லேவியர் மேல் வைப்பார்கள்;
11பின் ஆரோன் லேவியரை இஸ்ரயேல் மக்களிடமிருந்து வரும் ஆரத்திபலியாக ஆண்டவர் திருமுன் அர்ப்பணிப்பான்; அதனால் ஆண்டவர் பணியைச் செய்ய மக்கள் சார்பில் இவர்கள் இருப்பார்கள்.
12அதன்பின், லேவியர் தங்கள் கைகளைக் காளைகளின் தலைகள்மேல் வைப்பர்; லேவியருக்குக் கறைநீக்கம் செய்யும்படி நீ ஒன்றைப் பாவம் போக்கும் பலியாகவும், மற்றதை ஆண்டவருக்கு எரி பலியாகவும் செலுத்துவாய்.
13மேலும், நீ லேவியரை ஆரோன், அவன் புதல்வர் முன் நிற்கச் செய்து, ஆரத்திபலியாக அவர்களை ஆண்டவருக்கு அர்ப்பணம் செய்.
14இவ்வாறு, இஸ்ரயேல் மக்களிடமிருந்து லேவியரைப் பிரித்தெடுக்க வேண்டும். லேவியர் எனக்கே உரியவர்.
15நீ அவர்களைத் தூய்மைப்படுத்தி, ஆரத்திபலியாக அர்ப்பணித்த சந்திப்புக் கூடாரத்தில் பணி செய்ய அவர்கள் உள்ளே போவார்கள்.
16இஸ்ரயேல் மக்களிடமிருந்து அவர்கள் முற்றிலும் எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறார்கள்; இஸ்ரயேல் மக்களில் கருப்பையைத் திறந்து பிறக்கும் தலைப்பேறு அனைத்திற்கும் ஈடாக அவர்களை நான் எனக்கென உரிமையாக்கிக் கொண்டேன்.
17ஏனெனில், இஸ்ரயேல் மக்களிடையே மனிதரிலும் கால்நடைகளிலும் தலைப்பேறனைத்தும் என்னுடையவை; எகிப்து நாட்டில் நான் தலைப்பேறனைத்தையும் சாகடித்த நாளில் அவர்களை நான் எனக்கென அர்ப்பணித்துக் கொண்டேன்.
18இஸ்ரயேல் மக்களில் தலைப்பேறு அனைத்துக்கும் ஈடாக லேவியரை நான் உரிமையாக்கிக் கொண்டேன்.
19இஸ்ரயேல் மக்களுள் லேவியரை நான் ஆரோனிடமும், அவன் புதல்வரிடமும் கொடையாக அளித்துவிட்டேன்; இஸ்ரயேல் மக்களுக்காக அவர்கள் சந்திப்புக் கூடாரத்தில் பணி செய்வார்கள்; இஸ்ரயேல் மக்களுக்காகக் கறை நீக்கப் பலியையும் செலுத்துவார்கள்; இதனால், இஸ்ரயேல் மக்கள் தூயகத்தை அடுத்து வரவேண்டியிருந்தாலும், இஸ்ரயேல் மக்களுக்குத் தீங்கு ஏதும் நேரிடாது.”
20மோசேயும் ஆரோனும் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் லேவியருக்கு இவ்வாறே செய்தனர்; லேவியரைப் பற்றி ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி எல்லாம் இஸ்ரயேல் மக்கள் அவர்களுக்குச் செய்தனர்.
21லேவியர் பாவத்திலிருந்து தங்களை தூய்மைப்படுத்திக் கொண்டார்; தங்கள் துணிகளைத் துவைத்தனர். ஆரோன் அவர்களை ஆரத்திப்பலியாக ஆண்டவர் திருமுன் அர்ப்பணித்தார்; அவர்களைத் தூய்மைப்படுத்தும்படி ஆரோன் அவர்களுக்காகக் கறை நீக்கப் பலியாகச் செலுத்தினார்.
22அதன்பின், ஆரோனுக்கும் அவர் புதல்வருக்கும் முன்பாகச் சந்திப்புக் கூடாரத்தில் தங்களுக்குரிய பணி செய்யும்படி லேவியர் உள்ளே சென்றனர். ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் லேவியருக்குச் செய்தனர்.
23மேலும், ஆண்டவர் மோசேயிடம்,
24லேவியர் பற்றிக் கூறியது: “இருபத்தைந்து வயதும், அதற்கு மேலுமானோர் சந்திப்புக் கூடார வேலையின் பணிகளைச் செய்யச் செல்வர்.
25ஐம்பது வயதுக்கும் மேலானோர் வேலையின் பணிகளிலிருந்து விலகிக் கொள்வார்; அதன் பின் பணிகள் ஏதும் கிடையாது.
26ஆனால், சந்திப்புக் கூடாரத்தில் தங்கள் சகோதரரின் பணிக்குத் துணை நிற்பர்; தாங்களாக ஏதும் செய்யலாகாது; லேவியர் பணிகளை நீ இவ்வாறு ஒழுங்குபடுத்துவாய்”.

8:1-4 விப 25:31-40; 37:17-24. 8:17 விப 13:2.