அண்டை நாட்டினருக்கு வரும் தண்டனை

1ஓர் இறைவாக்கு: ஆண்டவரின் வாக்கு அதிராக்கு நாட்டிற்கு எதிராக எழும்புகிறது; அது தமஸ்கு நகர்மீது இறங்கித் தங்கும்; ஏனெனில் இஸ்ரயேலின் எல்லாக் குலங்களைப் போலவே சிரியா நாட்டின் நகர்களும் ஆண்டவருக்கே உரியன.
2அதன் எல்லைக்கு அடுத்துள்ள ஆமாத்தும் ஞானத்தில் சிறந்த தீரும் சீதோனும் அவருக்கே சொந்தம்.
3தீர் தன்னைச் சுற்றிலும் அரண் ஒன்றைக் கட்டியெழுப்பியது; தூசியைப் போல் வெள்ளியையும் தெருச் சேற்றைப்போல் பொன்னையும் சேமித்தது.
4இதோ என் தலைவர் அவற்றைப் பறிமுதல் செய்வார்; அதன் அரணைக் கடலுக்குள் தூக்கி எறிவார்; அந்நகரும் நெருப்புக்கு இரையாகும்.
5அஸ்கலோன் இதைக் கண்டு அஞ்சி நடுங்கும்; காசா நகர் வேதனையால் துடிதுடிக்கும்; அவ்வாறே எக்ரோனும் நம்பிக்கை இழந்துவிடும். காசா நகரிலிருந்து அரசன் அழித்தொழிவான்; அஸ்கலோன் குடியற்றுப்போகும்.
6அஸ்தோதில் கலப்பினத்தார் குடியிருப்பார்கள்; பெலிஸ்தியரின் ஆணவத்தை நான் ஒழித்திடுவேன்.

7இரத்தம் வடியும் இறைச்சியை

அவர்கள் வாயினின்று அகற்றுவேன்;

அருவருப்பான உணவை அதன்

பற்களிடையிருந்து நீக்குவேன்;

அவ்வினம் நம் கடவுளுக்கு

எஞ்சியதாகும்;

அது யூதாவின் குலங்களில்

தலையாயது ஆகும்.

எக்ரோன் நகரத்தார்

எபூசியரைப் போல் இருப்பார்கள்;

8அங்குமிங்கும் தாக்கும்

படையினின்று

எனது இல்லத்தைக் காப்பதற்கு

நான் பாளையம் இறங்குவேன்;

ஒடுக்குகிறவன் எவனும் இனி

அவர்களின் நகர்களை

ஊடுருவிச் செல்லான்;

ஏனெனில், என் கண்களாலேயே

யாவற்றையும் நான்

பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

வருங்கால அரசன்

9மகளே சீயோன்! மகிழ்ந்து களிகூரு;

மகளே எருசலேம்! ஆர்ப்பரி.

இதோ! உன் அரசர்

உன்னிடம் வருகிறார்.

அவர் நீதியுள்ளவர்;

வெற்றிவேந்தர்;

எளிமையுள்ளவர்;

கழுதையின்மேல்,

கழுதைக் குட்டியாகிய

மறியின்மேல் ஏறி வருகிறவர்.

10அவர் எப்ராயிமில் தேர்ப்படை

இல்லாமற் போகச்செய்வார்;*

எருசலேமில் குதிரைப்படையை

அறவே ஒழித்து விடுவார்;*

போர்க் கருவியான வில்லும்

ஒடிந்து போகும்.

வேற்றினத்தார்க்கு அமைதியை அறிவிப்பார்;

அவரது ஆட்சி ஒரு கடல்முதல் மறு கடல் வரை,

பேராறுமுதல்

நிலவுலகின் எல்லைகள்வரை செல்லும்.

கடவுளின் மக்களுக்குக் கிடைக்கும் மீட்பு

11உன்னைப் பொறுத்தமட்டில்

உன்னோடு நான் செய்த

உடன்படிக்கையின்

இரத்தத்தை முன்னிட்டு,

சிறைப்பட்டிருக்கும்

உன்னைச் சார்ந்தோரை

நீரற்ற படுகுழியிலிருந்து விடுவிப்பேன்.

12நம்பிக்கையுடன் காத்திருக்கும்

சிறைக் கைதிகளே,

உங்கள் அரணுக்குத் திரும்பி வாருங்கள்;

இருமடங்கு நன்மைகள்

நான் உங்களுக்குத் தருவேன் என்று

நான் இன்று உங்களுக்கு அறிவிக்கிறேன்.

13நான் யூதாவை

என் வில்லாக்கிக் கொண்டேன்;

எப்ராயிமை அம்பாக

அமைத்துக்கொண்டேன்;

சீயோனே! உன் மக்களை

யவனருக்கு எதிராக ஏவிவிட்டு

உன்னை வல்லவனின்

வாள் போல் ஆக்குவேன்.

14அப்போது அவர்கள்மீது

ஆண்டவர் தோன்றுவார்.

அவரது அம்பு மின்னலைப்போல்

பாய்ந்து செல்லும்;

தலைவராகிய ஆண்டவர்

எக்காளம் ஊதி ஒலி எழுப்புவார்;

அவர் தென்திசைச்

சூறாவளிக்கு இடையே

நடந்து வருவார்.

15படைகளின் ஆண்டவர் அவர்களுக்கு

அடைக்கலமாய் இருப்பார்;

அவர்கள் தங்கள் பகைவரை

ஒழித்துக்கட்டி,

அவர்களுடைய கவண் கற்களை

மிதித்துப்போடுவார்கள்;

திராட்சை இரசத்தைப்போல்

அவர்களது குருதியைக் குடிப்பார்கள்;

கிண்ணம்போல் நிரம்பி வழிந்தும்,

பலிபீடத்தின் கொம்புகளைப் போல்

நனைந்தும்,

இரத்தத்தால் நிறைந்திருப்பார்கள்.

16அந்நாளில் அவர்களுடைய

கடவுளாகிய ஆண்டவர்,

தம் மக்களாகிய அவர்களை

ஆயர் தம் மந்தையை மீட்பது போல்

மீட்டருள்வார்;

அவர்களும் அவரது நாட்டில்

மணிமுடியில் பதிக்கப்பட்டுள்ள

கற்களைப்போல் ஒளிர்வார்கள்.

17ஆம், அக்காட்சி எத்துணை இனியது;

எத்துணை அழகியது;

கோதுமை இளங்காளையரையும்

புதுத்திராட்சை இரசம் கன்னியரையும்

செழிப்புறச் செய்யும்.


9:1 எசா 17:1-3; எரே 49:23-27; ஆமோ 1:3-5. 9:1-4 எசா 23:1-18; எசே 26:1-28:26; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; மத் 11:21-22; லூக் 10:13-14. 9:5-7 எசா 14:29-31; எரே 47:1-7; எசே 35:15-17; யோவே 3:4-8; ஆமோ 1:6-8; செப் 2:4-7. 9:9 மத் 21:5; யோவா 12:15. 9:10 திபா 72:8. 9:11 விப 24:8.
9:10 ‘செய்வேன்… விடுவேன்’ என்பது எபிரேய பாடம்.