2“ஆண்டவரே! எனக்கு
இக்கட்டு வந்த வேளைகளில்
நான் உம்மை நோக்கி மன்றாடினேன்.
நீர் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தீர்.
பாதாளத்தின் நடுவிலிருந்து
உம்மை நோக்கிக் கதறினேன்;
என் கூக்குரலுக்கு நீர் செவிகொடுத்தீர்;
3நடுக் கடலின் ஆழத்திற்குள்
என்னைத் தள்ளினீர்;
தண்ணீர்ப் பெருக்கு
என்னைச் சூழ்ந்துகொண்டது.
நீர் அனுப்பிய அலைதிரை எல்லாம்
என்மீது புரண்டு கடந்து சென்றன.
4அப்பொழுது நான்,
‛உமது முன்னிலையிலிருந்து
புறம்பே தள்ளப்பட்டேன்;
இனி எவ்வாறு உமது கோவிலைப்
பார்க்கப் போகிறேன்’ என்று
சொல்லிக்கொண்டேன்.
5மூச்சுத் திணறும்படி
தண்ணீர் என்னை அழுத்திற்று;
ஆழ்கடல் என்னைச் சூழ்ந்தது;
கடற்பாசி என் தலையைச்
சுற்றிக் கொண்டது.
6மலைகள் புதைந்துள்ள ஆழம்வரை
நான் கீழுலகிற்கு இறங்கினேன்.
அங்கேயே என்னை என்றும்
இருத்தி வைக்கும்படி,
அதன் தாழ்ப்பாள்கள்
அடைத்துக் கொண்டன.
ஆனால், என் கடவுளாகிய ஆண்டவரே,
நீர் அந்தக் குழியிலிருந்து
என்னை உயிரோடு மீட்டீர்.
7என் உயிர்
ஊசலாடிக் கொண்டிருந்தபோது,
ஆண்டவரே! உம்மை நினைத்து
வேண்டுதல் செய்தேன்.
உம்மை நோக்கி
நான் எழுப்பிய மன்றாட்டு
உமது கோவிலை வந்தடைந்தது.
8பயனற்ற சிலைகளை
வணங்குகின்றவர்கள்
உம்மிடம் கொண்டிருந்த பற்றினைக்
கைவிட்டார்கள்.
9ஆனால், நான்
உம்மைப் புகழ்ந்து பாடி
உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்;
நான் செய்த பொருத்தனைகளை
நிறைவேற்றுவேன்.
மீட்பு அளிப்பவர் ஆண்டவரே” என்று
வேண்டிக்கொண்டார்.