யோனா முன்னுரை


நினிவே மாநகர் மக்கள் நெறிகெட்டவராய் வாழ்ந்து, பாவச் சேற்றில் உழன்று கொண்டிருந்தனர். ஆகவே, அந்நகருக்கு அழிவு வரப்போகிறது என்று அறிவிக்க, கடவுள் யோனாவை அனுப்பினார்.

கடவுளின் கருணைக்கு அளவும் இல்லை; எல்லையும் இல்லை. கனிவு காட்டுவதில் நல்லார் பொல்லார் என்று அவர் வேற்றுமை பாராட்டுவதும் இல்லை. அவரது வாக்கைக் கேட்டு மனம்மாறும் அனைவர்க்கும் அவர் மன்னிப்பு அருள்கிறார். அடித்தலைவிட அணைத்தலே அவரது இயல்பாகும். பாவிகளின் அழிவையல்ல, அவர்களது மனமாற்றத்தையே அவர் விரும்புகின்றார்.

நினிவே மக்களும் யோனா அறிவித்ததைக் கேட்டு மனம் மாறிக் கடவுளின் மன்னிப்பைப் பெற்றனர். ஆனால் அதைக் கண்டு மனம்பொறாத யோனா சினங்கொண்டார். கடவுளோ அவருக்கும் கருணை காட்டித் தம் இயல்பை வெளிப்படுத்தினார். இக்கருத்துகளை இந்நூல் நயம்பட எடுத்துக்காட்டுகிறது.

இயேசு கிறிஸ்து தம்முடைய பணியையும் உயிர்ப்பையும் பற்றிப் பேசுகையில், யோனாவை அடையாளமாகச் சுட்டிக் காட்டியது இங்கே குறிப்பிடத்தக்கது.

நூலின் பிரிவுகள்

  1. யோனாவின் அழைப்பும் கீழ்ப்படியாமையும் 1:1 - 2:1
  2. யோனாவின் மன்றாட்டு 2:2 - 11
  3. நினிவேயில் யோனா 3:1 - 10
  4. யோனாவின் சினமும் கடவுளின் இரக்கமும் 4:1 - 11