மோவாபு நாடு

1ஆண்டவர் கூறுவது இதுவே: “மோவாபு

எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக

நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை

மாற்றவே மாட்டேன்;

ஏனெனில், அவன்

ஏதோம் அரசனின் எலும்புகளைச்

சுட்டுச் சாம்பலாக்கினான்.

2ஆதலால், மோவாபின்மேல்

நெருப்பைக் கொட்டுவேன்.

அது கெரியோத்தின் கோட்டைகளை

விழுங்கிவிடும்;

இரைச்சல், கூச்சல், எக்காள முழக்கம்

ஆகியவை ஒருசேர எழும் வேளைகளில்

மோவாபு மடிந்திடுவான்.

3அந்நாட்டின் ஆட்சியாளனை

அவர்களிடையேயிருந்து

அகற்றிவிடுவேன்;

அவனோடு அதிகாரிகள்

அனைவரையும் அழித்து விடுவேன்”

என்கிறார் ஆண்டவர்.

யூதா நாடு

4ஆண்டவர் கூறுவது இதுவே:

“யூதா எண்ணற்ற குற்றங்கள்

செய்ததற்காக

நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை

மாற்றவேமாட்டேன்;

ஏனெனில், அவர்கள்

ஆண்டவரின் திருச்சட்டத்தை

புறக்கணித்தார்கள்;

அவருடைய நியமங்களை

கடைப்பிடிக்கவில்லை;

அவர்களுடைய தந்தையர்

பின்பற்றிய பொய்த் தெய்வங்கள்

அவர்களையும் வஞ்சித்துவிட்டன.

5ஆதலால் யூதாவின்மேல்

நெருப்பைக் கொட்டுவேன்;

அது எருசலேமின் கோட்டைகளை

விழுங்கிவிடும்.”

இஸ்ரயேல் நாட்டின்மீது தீர்ப்பு

6ஆண்டவர் கூறுவது இதுவே:

“இஸ்ரயேல் எண்ணற்ற குற்றங்கள்

செய்ததற்காக

நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை

மாற்றவே மாட்டேன்;

ஏனெனில், அவர்கள்

நேர்மையாளரை வெள்ளிக் காசுக்கும்

வறியவரை இரு காலணிக்கும்

விற்கின்றார்கள்.

7ஏழைகளின் தலைகளை மண்ணில்

புழுதிபட மிதிக்கின்றார்கள்;

ஒடுக்கப்பட்டோரின் நெறியைக்

கெடுக்கின்றார்கள்;

மகனும் தந்தையும்

ஒரே பெண்ணைக் கூடி,

என் திருப்பெயரைக்

களங்கப்படுத்துகின்றார்கள்.

8கடன்காரரிடமிருந்து

பறித்த ஆடைகளை

விரித்துப் போட்டு,

எல்லாப் பலிபீடங்களின் முன்பும்

கிடந்து கொண்டு

அபராதம் விதித்துக்

கிடைத்த மதுவினைத்

தங்கள் கடவுளின் இல்லத்தில்

குடிக்கின்றார்கள்.

9நானோ கேதுரு மரத்தின் உயரமும்

கருவாலி மரத்தின்

வலிமையும் கொண்ட எமோரியரை

அவர்கள் முன்பாக அழித்துவிட்டேன்;

மேலே அவர்களுடைய கனிகளையும்,

கீழே அவர்களுடைய வேர்களையும்

அழித்துவிட்டேன்;

10மேலும், எகிப்து நாட்டிலிருந்து

உங்களை அழைத்து வந்து,

நாற்பது ஆண்டுகள்

பாலைநிலத்தில் உங்களை வழிநடத்தி,

எமோரியர் நாட்டை நீங்கள்

உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளச்

செய்தேன்.

11உங்கள் புதல்வர்களுள் சிலரை

இறைவாக்கினராய் உயர்த்தினேன்;

உங்கள் இளைஞர்களுள் சிலரை

நாசீர்களாய்த் தேர்ந்துகொண்டேன்;

இஸ்ரயேல் மக்களே,

இது உண்மையன்றோ?”

என்கிறார் ஆண்டவர்.

12ஆனால், நீங்கள் நாசீர்களை

மது அருந்தச் செய்தீர்கள்;

இறைவாக்கினருக்கு

“இறைவாக்கு உரைக்கக்கூடாது”

என்று கட்டளையிட்டீர்கள்.

13வைக்கோல் பொதி நிறைந்த வண்டி

அழுந்துவது போல, உங்களையும்

நீங்கள் இருக்கும் இடத்திலேயே

அழுத்துவேன்.

14விரைந்தோடுகிறவனும் தப்ப முடியாது;

வலிமையுள்ளவனும்

தன் வலிமையை இழந்து விடுவான்;

வீரனாலும் தன்னுயிரைக்

காத்துக் கொள்ள முடியாது.

15வில்லேந்தும் வீரன்

எதிர்த்து நிற்கமாட்டான்.

விரைந்தோடுபவனும்

தன்னைக் காப்பாற்றிக்

கொள்ளமாட்டான்,

குதிரை வீரனாலும் தன்னுயிரைக்

காத்துக்கொள்ள முடியாது.

16அந்நாளில் வலிமை மிக்கவர்களுள்

நெஞ்சுரம் கொண்டவன்கூடப்

படைக்கலன்களைத் தூக்கி எறிந்து விட்டு

ஓடுவான் என்கிறார் ஆண்டவர்.


2:1-3 எசா 15:1-16:14; 25:10-12; எரே 48:1-47; எசே 25:8-11; செப் 2:8-11. 2:9 இச 3:8-11. 2:11 எண் 6:1-8.