விளக்குகளைப் பேணுதல்
(விப 27:20-21)

1ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2எப்போதும் குத்துவிளக்கு எரிந்துகொண்டிருக்க, தெளிவான ஒலிவ எண்ணெயை உன்னிடம் கொண்டு வர இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிடு.
3சந்திப்புக் கூடாரத்தில் உடன்படிக்கைத் திரைக்கு வெளியே, மாலைமுதல் காலைவரை எப்போதும் அது ஆண்டவருக்கு முன் எரிந்துகொண்டிருக்க வேண்டும். இது உங்கள் வழிமரபினருக்கு என்றுமுள நியமம் ஆகும்.
4ஆண்டவர் திருமுன் இருக்கும் பசும்பொன் குத்துவிளக்குத் தண்டின் மேலிருக்கிற கிளைவிளக்குகளை எப்போதும் எரியவிட வேண்டும்.

கடவுளுக்கான அப்பப் படையல்

5இருபதுபடி அளவுள்ள மரக்காலில் பத்தில் இரண்டு பங்கு மிருதுவான மாவில் செய்யப்பட்ட பன்னிரண்டு அப்பங்களைச் சுட்டு,
6அவற்றை நீ ஆண்டவர் திருமுன் பசும்பொன் மேசையில் அடுக்குக்கு ஆறு வீதம் இரண்டு அடுக்காக வைக்க வேண்டும்.
7அவற்றின்மேல் வாசனைப்பொடி தூவ வேண்டும்; அது அப்பத்திற்கு மாற்றான நெருப்புப்பலி.
8இது என்றுமுள உடன்படிக்கை; இதை இஸ்ரயேல் மக்களிடமிருந்து பெற்று, ஓய்வு நாள்தோறும் ஆண்டவரின் திருமுன் அடுக்கி வைக்க வேண்டும்.
9அது ஆரோனுக்கும் அவன் மைந்தர்க்கும் உரியது. அதைத் தூயகத்திலேயே உண்ண வேண்டும். ஏனெனில், அது தூயதின் தூயது. ஆண்டவரின் நெருப்புப்பலிகளில் அது அவர்களுக்குச் சேர வேண்டிய உரிமை ஆகும்.

நேர்மையான தண்டனைக்கு எடுத்துக்காட்டு

10இஸ்ரயேல் இனத்துப் பெண்ணுக்கும் எகிப்திய ஆணுக்கும் மகனாகப் பிறந்த ஒருவன் இஸ்ரயேல் மக்களோடு வந்திருந்தான். அவனுக்கும் இஸ்ரயேல் ஆண் ஒருவனுக்கும் பாளையத்தில் சண்டை ஏற்பட்டது.
11இஸ்ரயேல் பெண்ணின் மகன் ஆண்டவரின் திருப்பெயரை இகழ்ந்தான்; எனவே, அவனை மோசேயிடம் கொண்டுவந்தனர். அவன் தாயின் பெயர் செலோமித்து; அவள் தாண்குலத்தைச் சார்ந்த திப்ரியின் மகள்.
12ஆண்டவரின் திருவுளம் அவர்களுக்கு வெளிப்படுத்தப்படும்வரை அவனைக் காவலில் வைத்தனர்.
13அப்போது ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
14"இகழ்ந்தவனைக் குடியிருப்பு எல்லைக்கு வெளியே கொண்டுசென்று அவனது பழிப்புரையைக் கேட்டவர்களெல்லாரும் தங்கள் கைகளை அவன் தலையில் வைக்கட்டும். பின்னர், சபை அனைத்தும் அவனைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும்.
15எவராவது கடவுளை இகழ்ந்தால், அவர் தம் பாவத்தைச் சுமப்பார் என்று இஸ்ரயேல் மக்களிடம் சொல்.
16ஆண்டவரின் திருப்பெயரை இகழ்பவர் கொலை செய்யப்படுவார்; சபையார் கல்லாலெறிவர். அந்நியரோ, நாட்டினரோ, யார் எனினும் திருப்பெயரை இகழ்கிறவர் கொல்லப்படுவார்.
17மனிதரைக் கொல்பவர் கொலை செய்யப்படுவார்.
18விலங்குகளைக் கொல்பவர் விலங்குக்கு விலங்கு திரும்பக் கொடுக்க வேண்டும்.
19தமக்கு அடுத்திருப்பவருக்குக் காயம் விளைவித்தால், அவருக்கும் அப்படியே செய்யப்படும்.
20முறிப்புக்கு முறிப்பு, கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்; இதுபோன்றே காயம் விளைவித்தவருக்கும் செய்யப்படும்.
21விலங்கைக் கொன்றால் பதிலாகக் கொடுக்க வேண்டும்; மனிதரைக் கொன்றால் கொலை செய்யப்பட வேண்டும்.
22அயலாருக்கும், நாட்டினருக்கும், ஒரேவிதமான நியாயம் வழங்கவேண்டும். ஏனெனில், நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!"
23அப்படியே இறைவனை இகழ்ந்தோனைக் குடியிருப்பு எல்லைக்கு வெளியே கொண்டு போய் அவனைக் கல்லாலெறியுமாறு மோசே கட்டளையிட்டார். ஆண்டவர் மோசேயிடம் கூறியபடி அவர்கள் செய்தார்கள்.

24:5-6 விப 25:30. 24:9 மத் 12:4; மாற் 2:26; லூக் 6:4. 24:17 விப 21:12. 24:20 விப 21:23-25; இச 19:21; மத் 5:38. 24:22 எண் 15:16.