இஸ்ரயேலுக்கு எதிரான குற்றச்சாட்டு

1இஸ்ரயேல் மக்களே,

ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்;

நாட்டில் குடியிருப்பவர்களோடு

ஆண்டவருக்கு

வழக்கு ஒன்று உண்டு;

நாட்டில் உண்மையும் இல்லை,

இரக்கமும் இல்லை;

கடவுளை அறியும் அறிவும் இல்லை.

2பொய்யாணை, பொய்யுரை, கொலை,

களவு, விபசாரம் ஆகியன

பெருகிவிட்டன.

எல்லாக் கட்டுப்பாடுகளையும்

தகர்த்தெறிகின்றனர்;

இரத்தப் பழிமேல் இரத்தப்பழி

குவிகின்றது.

3ஆதலால் நாடு புலம்புகின்றது;

அதில் குடியிருப்பன எல்லாம்

நலிந்து போகின்றன;

காட்டு விலங்குகளும்,

வானத்துப் பறவைகளும்,

கடல்வாழ் மீன்களும்கூட

அழிந்து போகின்றன.

4ஆயினும் எவனும் வழக்காட வேண்டாம்;

எவனும் குற்றம் சாட்ட வேண்டாம்;

*உன் மக்கள் குருவோடு

வழக்காடுகிறவர்களைப்

போலிருக்கிறார்கள்.*

5பகலிலே நீ இடறி விழுவாய்;

இரவிலே இறைவாக்கினனும்

உன்னோடு இடறி விழுவான்;

உன் தாயை நான் அழித்துவிடுவேன்.

6அறிவின்மையால் என் மக்கள்

அழிகின்றார்கள்;

நீ அறிவைப் புறக்கணித்தாய்;

நானும் நீ எனக்குக் குருவாய் இராதபடி

உன்னை புறக்கணிப்பேன்.

நீ உன் கடவுளின்

திருச்சட்டத்தை மறந்துவிட்டாய்;

நானும் உன் மக்களை

மறந்து விடுவேன்.

7எவ்வளவுக்கு அவர்கள்

பலுகினார்களோ அவ்வளவுக்கு

அவர்கள் எனக்கு எதிராயப்

பாவம் செய்தார்கள்;

அவர்கள் மேன்மையை

இகழ்ச்சியாக மாற்றுவேன்.

8என் மக்களின் பாவங்களால்

இவர்கள் வயிறு வளர்க்கின்றார்கள்;

அவர்கள் தீச்செயல் செய்யும்படி

இவர்கள் ஏங்குகின்றார்கள்.

9குருவுக்கு நேரிடுவது

மக்களுக்கும் நேரிடும்;

அவர்களுடைய தீய வழிகளுக்காகத்

தண்டனை வழங்குவேன்;

அவர்களுடைய செயல்களுக்கேற்ற

பதிலை அளிப்பேன்.

10அவர்கள் உண்டாலும்

நிறைவடைய மாட்டார்கள்;

வேசித்தனம் செய்தாலும்

பலுகமாட்டார்கள்;

ஏனெனில்,

வேசித்தனத்தில் ஈடுபடுவதற்காக

ஆண்டவரைக் கைவிட்டார்கள்.

இஸ்ரயேலில் சிலைவழிபாடும் குடிவெறியும்

11மதுவும், திராட்சை இரசமும்

அறிவைக் கெடுக்கும்.

12என் மக்கள் மரக்கட்டையிடம்

குறி கேட்கின்றனர்;

அவர்களது கோல்

மறைமொழிகள் கூறுகின்றது!

விபசாரப் புத்தி அவர்களை

நெறிதவறச் செய்தது;

விபசாரம் செய்வதற்காக அவர்கள்

தங்கள் கடவுளைவிட்டு அகன்றனர்.

13மலையுச்சிகளில் அவர்கள்

பலியிடுகின்றார்கள்;

குன்றுகள் மேலும், நல்ல நிழல் தரும்

கருவாலி, புன்னை, தேவதாரு

ஆகிய மரங்களின் கீழும்

நறுமணப் புகை எழுப்புகின்றார்கள்;

ஆதலால் உங்கள் புதல்வியர்

வேசித்தனம் செய்கின்றார்கள்;

உங்கள் மருமக்கள்

விபசாரம் புரிகின்றார்கள்.

14உங்கள் புதல்வியர்

விபசாரம் செய்தாலும்,

உங்கள் மருமக்கள்

விபசாரம் புரிந்தாலும்,

நான் அவர்களைத்

தண்டிக்கமாட்டேன்;

ஏனெனில், ஆண்கள்

விலைமாதரோடு போகின்றார்கள்;

தேவதாசிகளோடு சேர்ந்து

பலி செலுத்துகின்றார்கள்;

அறிவற்ற அம்மக்கள்

அழிந்து போவார்கள்.

யூதாவுக்கு எச்சரிக்கை

15இஸ்ரயேல், நீ வேசித்தனம் புரிந்தாலும்,

யூதா நாடாகிலும்

குற்றமற்றதாய் இருக்கட்டும்;

கில்காலுக்குள் நுழையாதீர்கள்;

பெத்தாவேனுக்குப் போகாதீர்கள்;

“ஆண்டவர்மேல் ஆணை” என்று

ஆணையிடாதீர்கள்.

16கட்டுக்கடங்காத இளம் பசுவைப் போல

இஸ்ரயேல் மக்கள்

பிடிவாதமாயிருக்கின்றார்கள்;

ஆண்டவர் அவர்களைப்

பரந்த புல்வெளியில்

ஆட்டுக் குட்டியைப் போல்

மேய்க்க முடியுமா?

17எப்ராயிம் சிலைகளோடு

சேர்ந்து கொண்டான்.

அவனை விட்டுவிடு.

18குடிவெறியர் கூட்டமாகிய அவர்கள்

வேசித்தனத்தில்

ஆழ்ந்திருக்கின்றார்கள்;

தங்களது மேன்மையைக் காட்டிலும்

இகழ்ச்சியையே அவர்கள்

மிகுதியாய் விரும்புகின்றார்கள்.

19காற்று அவர்களைத் தன்

இறக்கைகளில் பற்றிக் கொள்ளும்;

அவர்கள் தங்கள் பலிகளால்

நாணமடைவார்கள்.


4:4 "உன் மக்கள் குருவோடு வழக்காடுகிறவர்களைப் போலிருக்கிறார்கள்" என்பது "குருவே, உன்னோடு தான் என் வழக்கு" எனவும் பொருள்படும்.