1இஸ்ரயேல் மக்களே,
ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்;
நாட்டில் குடியிருப்பவர்களோடு
ஆண்டவருக்கு
வழக்கு ஒன்று உண்டு;
நாட்டில் உண்மையும் இல்லை,
இரக்கமும் இல்லை;
கடவுளை அறியும் அறிவும் இல்லை.
2பொய்யாணை, பொய்யுரை, கொலை,
களவு, விபசாரம் ஆகியன
பெருகிவிட்டன.
எல்லாக் கட்டுப்பாடுகளையும்
தகர்த்தெறிகின்றனர்;
இரத்தப் பழிமேல் இரத்தப்பழி
குவிகின்றது.
3ஆதலால் நாடு புலம்புகின்றது;
அதில் குடியிருப்பன எல்லாம்
நலிந்து போகின்றன;
காட்டு விலங்குகளும்,
வானத்துப் பறவைகளும்,
கடல்வாழ் மீன்களும்கூட
அழிந்து போகின்றன.
4ஆயினும் எவனும் வழக்காட வேண்டாம்;
எவனும் குற்றம் சாட்ட வேண்டாம்;
*உன் மக்கள் குருவோடு
வழக்காடுகிறவர்களைப்
போலிருக்கிறார்கள்.*
5பகலிலே நீ இடறி விழுவாய்;
இரவிலே இறைவாக்கினனும்
உன்னோடு இடறி விழுவான்;
உன் தாயை நான் அழித்துவிடுவேன்.
6அறிவின்மையால் என் மக்கள்
அழிகின்றார்கள்;
நீ அறிவைப் புறக்கணித்தாய்;
நானும் நீ எனக்குக் குருவாய் இராதபடி
உன்னை புறக்கணிப்பேன்.
நீ உன் கடவுளின்
திருச்சட்டத்தை மறந்துவிட்டாய்;
நானும் உன் மக்களை
மறந்து விடுவேன்.
7எவ்வளவுக்கு அவர்கள்
பலுகினார்களோ அவ்வளவுக்கு
அவர்கள் எனக்கு எதிராயப்
பாவம் செய்தார்கள்;
அவர்கள் மேன்மையை
இகழ்ச்சியாக மாற்றுவேன்.
8என் மக்களின் பாவங்களால்
இவர்கள் வயிறு வளர்க்கின்றார்கள்;
அவர்கள் தீச்செயல் செய்யும்படி
இவர்கள் ஏங்குகின்றார்கள்.
9குருவுக்கு நேரிடுவது
மக்களுக்கும் நேரிடும்;
அவர்களுடைய தீய வழிகளுக்காகத்
தண்டனை வழங்குவேன்;
அவர்களுடைய செயல்களுக்கேற்ற
பதிலை அளிப்பேன்.
10அவர்கள் உண்டாலும்
நிறைவடைய மாட்டார்கள்;
வேசித்தனம் செய்தாலும்
பலுகமாட்டார்கள்;
ஏனெனில்,
வேசித்தனத்தில் ஈடுபடுவதற்காக
ஆண்டவரைக் கைவிட்டார்கள்.
11மதுவும், திராட்சை இரசமும்
அறிவைக் கெடுக்கும்.
12என் மக்கள் மரக்கட்டையிடம்
குறி கேட்கின்றனர்;
அவர்களது கோல்
மறைமொழிகள் கூறுகின்றது!
விபசாரப் புத்தி அவர்களை
நெறிதவறச் செய்தது;
விபசாரம் செய்வதற்காக அவர்கள்
தங்கள் கடவுளைவிட்டு அகன்றனர்.
13மலையுச்சிகளில் அவர்கள்
பலியிடுகின்றார்கள்;
குன்றுகள் மேலும், நல்ல நிழல் தரும்
கருவாலி, புன்னை, தேவதாரு
ஆகிய மரங்களின் கீழும்
நறுமணப் புகை எழுப்புகின்றார்கள்;
ஆதலால் உங்கள் புதல்வியர்
வேசித்தனம் செய்கின்றார்கள்;
உங்கள் மருமக்கள்
விபசாரம் புரிகின்றார்கள்.
14உங்கள் புதல்வியர்
விபசாரம் செய்தாலும்,
உங்கள் மருமக்கள்
விபசாரம் புரிந்தாலும்,
நான் அவர்களைத்
தண்டிக்கமாட்டேன்;
ஏனெனில், ஆண்கள்
விலைமாதரோடு போகின்றார்கள்;
தேவதாசிகளோடு சேர்ந்து
பலி செலுத்துகின்றார்கள்;
அறிவற்ற அம்மக்கள்
அழிந்து போவார்கள்.
15இஸ்ரயேல், நீ வேசித்தனம் புரிந்தாலும்,
யூதா நாடாகிலும்
குற்றமற்றதாய் இருக்கட்டும்;
கில்காலுக்குள் நுழையாதீர்கள்;
பெத்தாவேனுக்குப் போகாதீர்கள்;
“ஆண்டவர்மேல் ஆணை” என்று
ஆணையிடாதீர்கள்.
16கட்டுக்கடங்காத இளம் பசுவைப் போல
இஸ்ரயேல் மக்கள்
பிடிவாதமாயிருக்கின்றார்கள்;
ஆண்டவர் அவர்களைப்
பரந்த புல்வெளியில்
ஆட்டுக் குட்டியைப் போல்
மேய்க்க முடியுமா?
17எப்ராயிம் சிலைகளோடு
சேர்ந்து கொண்டான்.
அவனை விட்டுவிடு.
18குடிவெறியர் கூட்டமாகிய அவர்கள்
வேசித்தனத்தில்
ஆழ்ந்திருக்கின்றார்கள்;
தங்களது மேன்மையைக் காட்டிலும்
இகழ்ச்சியையே அவர்கள்
மிகுதியாய் விரும்புகின்றார்கள்.
19காற்று அவர்களைத் தன்
இறக்கைகளில் பற்றிக் கொள்ளும்;
அவர்கள் தங்கள் பலிகளால்
நாணமடைவார்கள்.