தானியேல் கண்ட காட்சி: ஆ. செம்மறியும் வெள்ளாடும்

1முன்பு தோன்றிய காட்சிக்குப் பிறகு, பெல்சாட்சரின் மூன்றாம் ஆட்சியாண்டில் தானியேல் என்னும் நான் வேறொரு காட்சி கண்டேன்.
2அந்தக் காட்சியில் நான் கண்டது பின்வருமாறு: ஏலாம் மாநிலத்தின் தலைநகரான சூசா நகரில் நான் இருந்தேன்; அந்தக் காட்சியில் நான் ஊலாய் ஆற்றின் அருகே நின்றுகொண்டிருந்தேன்.
3நான் கண்களை உயர்த்திப் பார்த்தபொழுது, ஒரு செம்மறிக்கிடாய் அந்த ஆற்றங்கரையில் நிற்கக் கண்டேன். அதற்கு இரண்டு கொம்புகள் இருந்தன; இரண்டும் நீளமான கொம்புகள்; ஒன்று மற்றதைவிட நீளமானது; நீளமானது இரண்டாவதாக முளைத்தது.
4அந்தச் செம்மறிக்கிடாய் தன் கொம்புகளால் மேற்கு நோக்கியும் வடக்கு நோக்கியும் தெற்கு நோக்கியும் பாய்ந்து முட்டுவதைக் கண்டேன். அதன் எதிரே நிற்க எந்த விலங்காலும் இயலவில்லை; அதன் வலிமையிலிருந்து விடுவிக்க வல்லவர் யாருமில்லை. அது தன் விருப்பப்படியே நடந்து தற்பெருமை கொண்டு திரிந்தது.
5நான் இதை உற்று நோக்கிக் கொண்டிருக்கையில், மேற்கிலிருந்து வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று புறப்பட்டு வந்து, நிலவுலகின் எம்மருங்கிலும் சுற்றியது. அது நிலத்தில் கால் ஊன்றவே இல்லை. அந்த வெள்ளாட்டுக்கிடாயின் கண்களுக்கு இடையில் எடுப்பாகத் தோன்றும் ஒரு கொம்பு இருந்தது.
6ஆற்றங்கரையில் நிற்கையில் நான் கண்டவாறு, அந்த வெள்ளாட்டுக்கிடாய் இரு கொம்புடைய அச்செம்மறிக்கிடாயை நோக்கிச் சென்று, தன் முழு வலிமையோடும் அதைத் தாக்க அதன்மேல் பாய்ந்தது.
7அது செம்மறிக்கிடாயை நெருங்கி அதன்மேல் கடுஞ்சினம் கொண்டு அதைத் தாக்கி, அதன் கொம்புகள் இரண்டையும் முறித்துவிட்டதை நான் கண்டேன். அதன் எதிரே நிற்கச் செம்மறிக்கிடாய்க்கு வலிமை இல்லை. ஆகவே வெள்ளாட்டுக்கிடாய் அதைத் தரையில் தள்ளி மிதித்து விட்டது. செம்மறிக்கிடாயை முன்னதன் வலிமையினின்று விடுவிக்க வல்லவர் யாருமில்லை.
8அதன்பின்னர் வெள்ளாட்டுக்கிடாய் தற்பெருமை மிகக் கொண்டு திரிந்தது; ஆனால் அது வலிமையாக இருந்த பொழுதே அதன் பெரிய கொம்பு முறிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக, எடுப்பாகத் தோன்றிய வேறு நான்கு கொம்புகள் முளைத்து, வானத்தின் நான்கு பக்கங்களையும் நோக்கி வளர்ந்தன.
9அவற்றுள் ஒன்றிலிருந்து சிறிய கொம்பு ஒன்று முளைத்தெழுந்து, தெற்கு நோக்கியும் கிழக்கு நோக்கியும் அழகுமிக்க நாட்டை நோக்கியும், மிகப் பெரிதாக வளர்ந்து நீண்டது.
10அது வான் படைகளைத் தொடுமளவு உயர்ந்து வளர்ந்து, விண்மீன் திரள்களுள் சிலவற்றையும் தரையில் வீழ்த்தி மிதித்துவிட்டது.
11மேலும், அது வான்படைகளின் தலைவரையே எதிர்த்துத் தன்னை உயர்த்திக் கொண்டது. இடையறாது செலுத்தப்பட்ட எரிபலியையும் அவரிடமிருந்து பறித்துக்கொண்டு அவரது தூயகத்தையும் அழித்துப்போட்டது.
12குற்றங்களை முன்னிட்டு, வான்படைகளும் அன்றாட எரிபலியும் அதற்கு ஒப்புக் கொடுக்கப்பட்டன. அது உண்மையை மண்ணுக்குத் தள்ளியது. அது தன் செயலில் வெற்றி கண்டது.
13அப்பொழுது புனிதர் ஒருவர் பேசுவதைக் கேட்டேன். வேறொரு புனிதர் முன்பு பேசியவரிடம், ‘இடையறாது செலுத்தப்பட்ட எரிபலியையும், நடுங்கவைக்கும் குற்றத்தையும் தூயகமும் வான் படைகளும் மிதிபடுவதற்குக் கையளிக்கப்படுவதையும் பற்றிய இந்தக் காட்சி இன்னும் எத்தனை நாள் நீடிக்கும்?’ என்று கேட்டார்.
14அதற்கு அவர், ‘இரண்டாயிரத்து முந்நூறு மாலையும் காலையும் இது நீடிக்கும். பின்னரே தூயகம் அதற்குரிய நிலைக்குத் திரும்பும்’ என்றார்.
15தானியேல் ஆகிய நான் இந்தக் காட்சியைக் கண்டபின், அதன் உட்பொருளை அறியத் தேடினேன். அப்பொழுது மனிதத் தோற்றம் கொண்ட ஒருவர் எனக்கு முன்பாக வந்து நின்றார்.
16ஊலாய் ஆற்றின் நடுவிலிருந்து ஒரு மனிதக் குரல் ஒலித்தது. அது, ‘கபிரியேல்! இந்தக் காட்சி இவருக்கு விளங்குமாறு செய்’ என்று கூப்பிட்டுச் சொன்னது.
17அவ்வாறே அவர் நான் நின்ற இடத்திற்கு வந்தார். அவர் வருவதைப் பார்த்து, நான் திடுக்கிட்டு முகங்குப்புற விழுந்தேன். அவர் வருவதைப் பார்த்து, நான் திடுக்கிட்டு முகங்குப்புற விழுந்தேன். அவர் என்னைநோக்கி, ‘மானிடா! இந்தக் காட்சி இறுதிக் காலத்தைப் பற்றியது எனத் தெரிந்துகொள்’ என்றார்.
18அவர் என்னுடன் பேசிக் கொண்டிருக்கையில், நான் தரையில் முகங்குப்புற விழுந்து மயக்கத்தில் ஆழ்ந்துகிடந்தேன். அவர் என்னைத் தொட்டு எழுப்பி என்னைக் காலூன்றி நிற்கச் செய்தார்.
19“பெருஞ்சினத்தின் முடிவு நாளில் நிகழப்போவதை உனக்குத் தெரிவிப்பேன்; ஏனெனில், அது குறிக்கப்பட்ட இறுதி காலத்தைப் பற்றியது.
20இரு கொம்பு உடையதாக நீ கண்ட செம்மறிக்கிடாய் மேதியர், பாரசீகரின் அரசர்களைக் குறிக்கிறது.
21வெள்ளாட்டுக்கிடாய் கிரேக்க நாட்டின் அரசனைக் குறிக்கிறது; அதன் கண்களுக்கு இடையிலிருந்த பெரிய கொம்பு முதல் அரசன் ஆகும்.
22அது முறிந்துபோன பின் அதற்குப் பதிலாக முளைத்தெழுந்த நான்கு கொம்புகள், அவனது அரசினின்று தோன்றவிருக்கும் நான்கு அரசுகள் ஆகும்; ஆனால், முன்னதன் ஆற்றல் இவற்றுக்கு இராது.
23இவற்றின் ஆட்சி முடிவுற்று, குற்றங்கள் மலிந்து உச்சநிலை அடையும்போது, கடுகடுத்த முகமும் வஞ்சக நாவும் கூர்மதியும் கொண்ட ஓர் அரசன் தோன்றுவான்.
24அவனது வலிமை பெருகும். அது அவனது சொந்த ஆற்றலினால் அல்ல. அவன் அஞ்சத்தக்க வகையில் அழிவு வேலை செய்வான்; தன் செயலில் வெற்றி காண்பான்; வலிமை மிக்கவர்களையும் புனித மக்களையும் அழித்து விடுவான்.
25நயவஞ்சகத்தின் மூலம் அவன் பொய் புரட்டை வளர்ப்பான். அவன் தன் உள்ளத்தில் தற்பெருமை கொண்டிருப்பான்; முன்னெச்சரிக்கை தராமல் பலரைக் கொலை செய்வான்; இறுதியில் மன்னர்க்கு மன்னரையே எதிர்க்கத் துணிவான். ஆயினும், எந்த மனித முயற்சியும் இன்றி, அவன் அழிவுறுவான்.
26மாலைகளையும் காலைகளையும் பற்றிய காட்சியைக் குறித்து இதுவரை சொல்லப்பட்டது முற்றிலும் உண்மையானது. ஆயினும், நீ இந்தக் காட்சியை உன் மனத்தில் மறைத்துவை. ஏனெனில், பலநாள்களுக்குப்பிறகே இது நிறைவேறும்.”
27தானியேல் ஆகிய நான் சோர்வடைந்து சில நாள்கள் நோயுற்று நலிந்து கிடந்தேன்; பிறகு எழுந்து அரசனின் அலுவல்களில் ஈடுபட்டேன். ஆயினும் அந்தக் காட்சி என்னைத் திகைப்பில் ஆழ்த்தியது; அதன் பொருளும் எனக்குச் சரியாக விளங்கவில்லை.

8:10 திவெ 12:4. 8:16 லூக் 1:19, 26.